என்ன சொல்லுது எதிர்காலம்?



செலவுகள் கூடிக்கொண்டேபோகின்றன,என்ன செய்யலாம்?

? என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா? எப்போது திருமணம் செய்யலாம்? இவரின் ஆயுள் ஸ்தானம் எப்படியுள்ளது? 
- ஆர்.எஸ்.பிரகாஷ், காஞ்சிபுரம்.

 உங்கள் மகனின் ஜாதகத்தை கேரள மணிகண்ட நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். மகனின் ஜாதகத்தில் லக்னாதிபதி குரு லக்னத்தை பார்த்திருப்பதால் அவருக்கு நீண்ட ஆயுள் உண்டு. பூர்வ புண்யாதிபதி செவ்வாய் மறைந்திருந்தாலும் ஆட்சி பெற்றிருப்பதால் புதிய துறையில் ஈடுபட்டு சாதிக்கும் வல்லமை இவருக்கு உண்டு.

சூரியன், சுக்கிரன், ராகு ஆகிய மூன்று கிரகங்கள் 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதாலும் 13.3.2007 முதல் 13.3.2025 வரை இவருக்கு ராகு தசை நடைபெற இருப்பதாலும் ராகு வலுவடைந்திருப்பதாலும், நவாம்சத்திலே சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்து 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதாலும் இவருக்கு சினிமா மற்றும் சின்னத்திரையில் சாதிக்கும் அமைப்பு இருக்கிறது.

ராகு புதியன உருவாக்கும் கிரகம். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய இடத்தில் இவருக்கு ராகு அமர்ந்திருப்பதாலும், முக்கிய கிரகங்களுடன் சேர்ந்து நிற்பதாலும் இவர் சாதித்துக் காட்டுவார். கோச்சார கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இவருக்கு தற்சமயம் ஏழரைச் சனி நடைபெறுகிறது. இந்த ஆண்டுடன் இவருக்கு ஏழரைச் சனி முடிவடைகிறது. ஜனவரி 2015 முதல் நல்ல காலக்கட்டம் தொடங்குகிறது. அதுமுதல் இவருடைய அறிவு பளிச்சிடும்.

சாதிக்க வேண்டுமென்ற ஆர்வம் உண்டாகும். அரசு வேலைக்கு இவருடைய ஜாதகத்தில் வாய்ப்பில்லை. நல்ல எதிர்காலம் இருக்கிறது. இவருடைய லக்னத்திற்கு 7, 8க்குரிய கிரகங்களை ஆராய்ந்து பார்க்கும்போது இவருக்கு சற்று தாமதமாகத்தான் திருமணம் முடியும். வயது 29 அல்லது முப்பதில் திருமணம் முடியலாம். இவருக்கு நற்பலன் உண்டாவதற்கு மயிலம் முருகன் கோயிலுக்கு அருகிலுள்ள திருவக்கரை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவக்ர காளி அம்மனை வணங்குவது நல்லது; நற்பலன் அதிகரிக்கும்.

? நான் கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். இதனால் மனைவி மக்கள் என்னை விட்டுப் பிரிந்து விட்டனர். எனது சிக்கல்கள் தீர்ந்து, வாழ்க்கை மேன்மை அடையுமா?
- அந்தோணி ராஜ், கோவில்பட்டி.

 உங்களுடைய ஜாதகத்தை உத்திர காலாமிர்தம் எனும் பழைய நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தேன். உங்கள் ஜாதகத்தில் கடுமையான கிரக அமைப்புகள் காணப்படுகின்றன. கும்ப லக்னம், சிம்மராசியில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். லக்னத்தில் கேது அமர்ந்திருப்பதுடன், லக்னத்திற்கு 7ல் ராகு அமர்ந்திருக்கிறார்.

லக்னாதிபதி சனியும் ராகுவுடன் சேர்ந்திருக்கிறார். சந்திரனும் ராகு, சனியுடன் சேர்ந்திருக்கிறார்கள். மனைவி ஸ்தானமான 7ம் வீட்டில் 6ம் வீட்டிற்குரிய சந்திரனும், சனி, ராகுவும் சேர்ந்திருப்பதால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் போராட்டங்களும், விவாகரத்தும், பிரச்னைகளும், நிம்மதியற்ற போக்கும் தொடர்கிறது. கடன் தொல்லையிலும் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். தசா புக்தியும் பலவீனமாக இருக்கிறது. 12.4.2000 முதல் 12.4.2010 வரை உங்களுக்கு சந்திர தசை நடைபெற்றது.

சந்திரன் சனி, ராகு ஆகிய கிரகங்களுடன் சேர்ந்ததால்தான் கடுமையான சிக்கல்களெல்லாம் ஏற்பட்டது. தற்சமயம் உங்களுக்கு செவ்வாய் தசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது 12.4.2017 வரை நீடிக்கும். செவ்வாய் நவாம்சத்தில் லக்னத்திற்கு 8ல் அமர்ந்து ராகுவுடன் சேர்ந்ததாலும் ராசிக் கட்டத்திலும் ஆட்சி பெற்றிருந்தாலும் சற்றே கிரக யுத்தத்தில் சிக்கியிருப்பதாலும்தான் உங்களுக்கு இத்தனை பிரச்னைகள். உங்களுடைய இரண்டாவது மனைவியும், ஆண் குழந்தையும் உங்களை பாசமுடன் நாடி வர வாய்ப்பிருக்கிறது.

ஆனால், இன்னும் கொஞ்ச காலம் சென்றுதான் நல்லது நடக்கும். குறிப்பாக பிப்ரவரி 2016 முதல் உங்கள் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியும், எல்லா வகையிலும் வளர்ச்சியும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய ஜாதகத்தில் பின் யோகம் இருக்கிறது. பின் யோகம் இருப்பதால் நீங்கள் மனம் தளர வேண்டாம். நீங்கள் பரிகாரமாக, வியாழக் கிழமையில்  பூண்டி மாதா ஆலயம் சென்று மாதாவை வணங்குங்கள். அதேபோல பெங்களூரில் இருக்கும் குழந்தை ஏசு ஆலயத்திற்கு சென்று வருவதாலும் தோஷங்கள் நீங்கி நல்லது நடக்கும்.   
 
? என்னுடைய வேலை விஷயமாகவும், உடன் பிறந்தோர்களுக்காகவும் 2009ம் ஆண்டு கடன் வாங்கினேன். அக்கடனை எப்பாடுபட்டும் தீர்க்கவே முடியவில்லை. ஒன்று போனால் மற்றொன்று என செலவினங்கள் கூடிக் கொண்டே போகிறது. வாழ்நாள் முழுக்க கடன் தொல்லை இருக்குமா! இதிலிருந்து என்னால் மீண்டு வர முடியுமா?
- ஒரு வாசகர், சேலம்.

உங்களுடைய ஜாதகத்தை உத்திர காலாமிர்தம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். நீங்கள் மகர லக்னம், கும்ப ராசியில் பிறந்திருக்கிறீர்கள். பிறக்கும் போது கிரக அமைப்புகள் நன்றாக உள்ளன. உங்களுடைய லக்னத்திற்கு முன்னும் பின்னும் குருவும், சந்திரனும் அமர்ந்திருப்பதும், சனிபகவான் ரிஷபத்தில் இருப்பதும் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் அமைப்பாகும். நீங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறீர்கள்.

செவ்வாய் தசை, ராகு தசை, குரு மகா தசை எல்லாம் முடிந்து இப்போது உங்களுக்கு சனிமகா தசை தொடங்கி நடைபெற்று வருகிறது. 18.9.2007 முதல் 18.9.2026 வரை சனி தசை 19 வருடங்களுக்கு நடைபெறும். சனி தசையில், சனி புக்தி 18.9.2007 முதல் 18.9.2010 வரை நடைபெற்றது. சனிபகவான் உங்களுக்கு யோகக்காரர்தான். ஆனால், சனி தசையில் சனி புக்தியில் சனி பகவான் நல்லது செய்ய மாட்டார்.

அந்த காலக்கட்டத்தில்தான் நீங்கள் பணத்தை கொடுத்து, கடனும் வாங்கி ஏமாந்திருக்கிறீர்கள். இப்போது உங்களுக்கு கோச்சாரத்தை பார்க்கும் காலகட்டம் மோசமாக இருக்கிறது. சனி தசை ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்து கோச்சார கிரகங்கள் நன்றாக இல்லை. தசாநாதனான சனியும் சரியில்லை. தசா புக்திகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது 9.7.2014 வரை கேது புக்தி நடைபெற்றது. 10.7.2014 முதல் சுக்கிர புக்தி தொடங்கியுள்ளது. சுக்கிரன், உங்களுக்கு யோகாதிபதியாக இருக்கிறார்.

ஆனால், அடிப்படையில் ஜாதகத்தில் பூர்வ புண்யாதிபதியான சுக்கிரன் 6ம் வீட்டில் சென்று மறைந்து விட்டார். பூர்வ புண்யாதிபதி மறைந்தாலே நெருங்கிய உறவினர்கள், ரத்த பந்தங்கள் இவர்களால் கடன்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். இருந்தாலும் சுக்கிரன் ராசிக்கு 5ம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு நல்ல பலன்களை தருவார். கோச்சார கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது 27.8.2015 முதல் உங்களுக்கு வருமானம் உயரும்.

கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வதற்கான வழி பிறக்கும். நிச்சயமாக கடன் தொல்லையிலிருந்து மீள்வீர்கள். உங்கள் மீது திருஷ்டி கொஞ்சம் இருக்கிறது. ஏனென்றால் லக்னாதிபதி சனி நவாம்சத்தில் சனி பகை வீட்டில் அமர்ந்திருந்தாலே திருஷ்டி உண்டாகும். அந்த திருஷ்டியை போக்கிக் கொள்ள நீங்கள் குல தெய்வத்தை வணங்குவது நல்லது. முடிந்தால் ஹோமத்தில் தருவார்களே கருப்பு நிறத்தில் இருக்கும் ரட்சை.

அந்த ரட்சையை நீங்கள் நெற்றியில் இட்டுக் கொள்வதன் மூலமாகவும் உங்களுக்கு திருஷ்டி விலகும். சனி தசை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பரிகாரமாக மூட்டை தூக்குபவர்களுக்கு நீங்கள் உதவலாம். தெருவை சுத்தப்படுத்தும் துப்பரவு தொழிலாளிக்கும் உதவலாம். உங்கள் ஜாதகத்தில் தன ஸ்தானத்திற்குரிய கிரகமான புதன் கேதுவுடன் நிற்பதால் ஒருமுறை திருவெண்காடு புதன் ஸ்தலம் சென்று அகோரமூர்த்தியை வணங்கி வாருங்கள். நல்லது நடக்கும். கவலை வேண்டாம். 

? நான் 10 வருடங்களாக ஒரு தனியார் கம்பனியில் பணியில் இருக்கிறேன். குறைவான சம்பளம்தான். என்னுடைய திருமணம் எப்பொழுது நடக்கும்? ஜாதகத்தில் ஏதாவது தோஷங்கள் உள்ளதா? என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?.
- எ.இளையவன், மும்பை.

உங்கள் ஜாதகம் நன்றாக இருக்கிறது. உத்திராடம் நட்சத்திரம், விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். உத்திராடம், நல்ல நட்சத்திரம். உங்களுடைய லக்னாதிபதி ஆட்சி பெற்றிருந்தாலும் 6ம் வீட்டில் மறைந்து காணப்படுகிறார். லக்னாதிபதி 6ம் இடத்தில் மறைந்தாலே எல்லாமே தாமதமாகத் தான் நடக்கும். மேலும் உங்களுடைய ஜாதகத்தில் 2ம் வீட்டில் ராகுவும், 8ல் சனியும், கேதுவும் இருப்பதால் தான் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

சர்ப்ப தோஷம் இருக்கிறது. செவ்வாய் கடுமையாக இல்லை. பரிகாரச் செவ்வாய்தான் இருக்கிறது. களத்திர ஸ்தானாதிபதியான சுக்கிரன், சூரியன், புதன், சந்திரன், குரு என நான்கு கிரகங்களுடன் சேர்ந்து கிரக யுத்தத்திற்குள்ளாகியிருப்பதால் தான் எல்லாமே தாமதமாகக் காரணம். ஆனால், உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. தசாபுக்திகளை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது சூரிய தசை, சந்திர தசை, செவ்வாய் தசை, ராகு தசை எல்லாம் முடிவடைந்து விட்டது.

27.11.2012 முதல் குரு தசை ஆரம்பமாகி உள்ளது. குரு உங்களுக்கு பிரபல யோகாதிபதியாக இருக்கிறார். விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தன, பூர்வ புண்யாதிபதியாக இருக்கிறார். அப்படிப்பட்ட குரு நீச்சமாக அமர்ந்திருந்தாலும் நவாம்சத்தில் 9ம் வீட்டில் நிற்பதால் இந்த குரு தசை யோகத்தை தரும். 2015ல் திருமண வாய்ப்புகள் உண்டு. மண வாழ்க்கை நன்றாக இருக்கும். நிச்சயதார்த்தமாகி நின்று போன பெண்ணைக் கூட நீங்கள் பார்க்கலாம். வசதி குறைந்த குடும்பத்திலிருந்து நல்ல பெண்ணாக உங்களுக்கு அமைய வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் ஒரு முறை காளஹஸ்தி சென்று வருவது நல்லது. மும்பையில் இருக்கும் நீங்கள், நாசிக்கில் அருள்பாலிக்கும் ஸ்ரீத்ரியம்பகேஸ்வரரையும் ஒருமுறை சென்று தரிசித்தால் ஜாதக பலம் கூடும். நல்ல விதத்தில் திருமணம் முடியும். பதினெட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த ராகு தசையைக் காட்டிலும் இந்த குரு தசை யோக பலன்களை தரும். படிப்படியாக முன்னுக்கு வருவீர்கள். 

? எனது மூன்றாவது மகன் திருமணத்திற்காக ஆறு, ஏழு வருடங்களாக முயற்சி செய்தும் தட்டிப் போய்க் கொண்டே இருக்கிறது. அவனுக்கு திருமண யோகம் உண்டா? மகனுக்கு 44 வயது முடிந்து விட்ட நிலையில் எப்படிப்பட்ட பெண் அமைவாள்?
- எம்.சி.திரவிய நாடார், விருதுநகர்.

உங்கள் மகனின் ஜாதகம் மேலோட்டமாக நன்றாகவே இருக்கிறது. ஆனால், ஆராய்ந்து பார்க்கும்போது கிரகங்களெல்லாம் பலவீனமாக இருக்கின்றன. மேஷ லக்னம், கும்ப ராசியில் பிறந்திருக்கிறார். லக்னாதிபதி செவ்வாயாகவும், ராசிநாதன் சனியாகவும் இருப்பதுவே பல தடைகளை தரக் கூடியதாகும். இவருடைய ஜாதகத்தில் சுக்கிரனும் பலவீனமாக இருக்கிறார். சுக்கிரன், செவ்வாயுடன் அமர்ந்திருப்பது மற்றும் கிரக யுத்தம் அடைந்திருப்பதும் உங்கள் மகனுக்கு தாமதத் திருமணம் ஏற்படக் காரணமாக இருக்கிறது.

குரு 7ல் அமர்ந்து வக்கிரமாகி நிற்பதாலும் திருமணம் தடைபடுகிறது. சுகபோகங்களைத் தரக் கூடிய கிரகமான சந்திரன் ராகுவுடன் சேர்ந்து பாதக ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதாலும் திருமணம், தாம்பத்யம் போன்ற சுக போக யோகம் குறைவாக உள்ளது.

பூர்வ புண்யாதிபதி சூரியன், பாதகாதிபதி சனியுடன் சேர்ந்து கிரக யுத்தம் செய்வதாலும் பூர்வபுண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் கேது நிற்பதாலும்தான் தடைக்குக் காரணங்கள். இவருக்கு விவாகரத்து பெற்ற பெண் அல்லது விதவையைத் திருமணம் செய்து வைப்பதுதான் நல்லது. செவ்வாய் தசை, ராகு தசை, குரு தசை முடிந்து தற்சமயம் சனி தசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சனி தசையில் கேது புக்தி முடிவடைந்து சுக்கிர புக்தி 27.1.2016 வரை நடைபெறும்.

சுக்கிர புக்தியில் திருமணத்தை எதிர்பார்க்கலாம். மேலும் கோச்சார கிரகங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது இவருக்கு 24.6.2015 முதல் 27.7.2016க்குள் திருமணம் முடிய வாய்ப்பிருக்கிறது. இவருக்கு அந்த காலக்கட்டத்தில் திருமணம் முடிந்துவிடும். சுக்கிர நாடி என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு இவரது ஜாதகத்தை ஆராய்ந்து பார்க்கும்போது இவருக்கு பெண் பாவம் அதிகமாக உள்ளது.

பூர்வ ஜென்மத்தில் பெண்களுக்கு துரோகம் செய்த ஜாதக மாக இருக்கிறது. எனவே திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள கச்சனூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் சிவபெருமானை பிரதோஷம் அல்லது திங்கட் கிழமை யில் சென்று தரிசிப்பது நல்லது. திருமணம் விரைந்து முடியும். வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். 
            
? நான் ஒரு தனியார் கம்பனியில் பணிபுரிகிறேன். வெளிநாட்டிற்குச் செல்லும் யோகம் உண்டா? நிரந்தர வேலை கிடைக்குமா? எதிர்காலம் எப்படி உள்ளது?
திருமணம் நல்லபடி அமையுமா? ஒற்றை காலில் நிற்கும் பழக்கம் உள்ளது. பொறுப்பின்றி உள்ளேன். காலில் சுண்டு விரல் தூக்கி உள்ளது. என்னை வீட்டில் பாபு என்று அழைக்கிறார்கள் அது ஏற்றதா? வாகன யோகம் உண்டா?

சி.பொன்னரசன், பாலக்கோடு.

உங்களுடைய ஜாதகத்தை மணிகண்ட கேரள ஜோதிட நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். சிம்ம லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். ஜாதகத்தில் பூர்வ புண்யாதிபதி குரு நல்ல நிலையில், லாப வீட்டில் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி சூரியன் 7ம் வீட்டில் அமர்ந்து சனியின் பார்வையைப் பெற்றிருப்பதால் அவ்வப்போது எதிர்மறை எண்ணங்களும், தாழ்வு மனப்பான்மையும் தலை தூக்கும். உங்களுக்கு தற்சமயம் குரு மகாதசை நடைபெற்று வருகிறது. குரு தசை 27.1.2013 முதல் தொடங்கியுள்ளது. குரு மகாதசையில் குரு புக்தி நடைபெற்று வருகிறது. இதுவரை ராகு தசை நடைபெற்றது.

ராகு, புதன், மாந்தியுடன் இருந்ததால்தான் தொடர்ந்து உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தது. தற்சமயம் நேர்மறை சிந்தனை தரக்கூடிய குரு மகாதசை தொடங்கியிருப்பதாலும் 16.12.2014ம் வருடத்தோடு ஏழரைச் சனி முடிவடைவதாலும், கோச்சார கிரகங்கள் அடிப்படையில் 17.12.2014 முதல் நல்ல நேரம் தொடங்க இருப்பதாலும் உங்களுக்கு இனி எல்லாமே சிறப்புதான்;

கவலை வேண்டாம். ஒற்றை காலில் நிற்கக் கூடாது; தவிர்க்கப் பாருங்கள். அறிவியல் பூர்வமாகப் பார்க்கும் போதும் ரத்த ஓட்டம் சீரடையாமல் போகும். ஜோதிடப்படி பார்க்கும்போதும் வறுமையையும், இழப்பு களையும் தரக்கூடிய அமைப்பாகும். காலில் சுண்டுவிரல்தூக்கியிருப்பதால் சாமுத்ரிகா லட்சணப்படி பயணங்கள் அதிகரிக்கும்.

முன்கோபம் இருக்கும். தன்னைத் தானே குறைத்து மதிப்பிடக்கூடிய குணமும் இருக்கும். இதைத்தவிர காலில் சுண்டு விரல் தூக்கி நிற்பதற்கு பெரிய பாதிப்புகள் எதுவும் கிடையாது. திருமணம் தூரத்து சொந்தத்தில் அமைய வாய்ப்பிருக்கிறது. நற்பலன்கள் அதிகரிக்க சுவாமிமலை முருகனை தரிசனம் செய்வது நல்லது. முடிந்தால் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது.

பொன்னரசன். பொன்னுக்கும் அரசனுக்கும் உரிய கிரகம் குரு. அவர் உங்கள் ஜாதகத்தில் நன்றாக இருக்கிறார். பாபு, கோபு என்று அழைக்கும்போது பெயர் பலம் குறைவாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் வீட்டில் இருப்பவர்களை பொன்னரசன் என்று அழையுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. பாபு என்பது செல்லப் பெயராக இருப்பது தவறில்லை. ஆவணங்களில் உங்கள் பெயர் பொன்னரசு என்று இருப்பதால் உங்களுக்கு பொன்னரசன் என்ற பெயருக்குரிய யோகம் கிடைக்கும். ஜனவரி 2ந் தேதி முதல் வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.

ஜோதிட  ரத்னா கே.பி.வித்யாதரன்