பிரணவமே வழிபட்ட பேரழகன்



திருப்போரூர்

கண்கண்ட தெய்வமாய் விளங்கும் கந்தன் அருளாட்சி புரிந்து வரும் பல தலங்களுள் திருப்போரூர் பதியும் ஒன்று. பனங்காடாய்க் கிடந்த இப்பகுதியில், பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தவஞானியாய் விளங்கிய சிதம்பர சுவாமிகளால் இங்கே ஒரு முருகன் ஆலயமும், திருக்குளமும் அமைக்கப்பட்டது. திருப்போரூர் சந்நதி முறை எனும் 726 பாடல்களை இங்கு அருளும் கந்தசாமிப்பெருமானின் மீது அவர் பாடியுள்ளார்.

ஆலயத்திற்குச் செல்லும் முன் வள்ளலார் ஓடை என்றும், சரவணப் பொய்கை என்றும் அழைக்கப் படும் திருக்குளம் மிகப் பெரிய அளவில் காட்சி தருகிறது. இத்திருக்குளம் முருகனின் அருளைப் போல என்றுமே வற்றுவதில்லையாம். இதைத்தவிர பிரணவாம்ருதம் எனும் தீர்த்தம் இத்தல பிரணவ மலையிலும், வேலாயுத தீர்த்தம் எனும் தீர்த்தம் கண்ணுவர் பேட்டையில் உள்ள சிதம்பரஸ்வாமிகளின் திருமடத்தின் வடக்கிலும் உள்ளது.

கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தரும் கந்தசாமி, பனை மரத்தாலான சுயம்பு மூர்த்த மாக காட்சி தருகிறார். முருகனின் அருள் வெள்ளம் நம்மை நோக்கிப் பாய்வதைப் போல் உணர்கிறோம். வந்த வினைகளையும், வருகின்ற வினை களையும் நீக்கும் கந்தசாமியான இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. அபிஷேகம் செய்வதற்காகவே அவர் திருமுன் கருங்கல்லினாலான முருகன், வள்ளி, தெய்வானை மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

முருகப் பெருமான் ஜபமாலை, கமண்டலம், அபய வரதக் கரங்களுடன் அருள்கிறார். இது முருகனின் திருக்கோலங்களில் ஒன்றான பிரம்மசாஸ்தாவின் அம்சமாகத் திகழ்கிறது.  அவர் சந்நதியின் முன் மயிலிற்குப் பதிலாக தேவேந்திரனின் ஐராவத யானை அமர்ந்துள்ளது.கருவறை பிராகாரத்தை வலம் வரும் போது கோஷ்ட தெய்வங்களையும், உற்சவ விக்ரகங்களையும் தரிசிக்கிறோம்.

உற்சவ விக்ரகங்களில் வில்லேந்திய வேலவனும், தந்தைக்கு மந்திர உபதேசம் செய்யும் சுவாமிநாதனின் உபதேசமூர்த்தியின் திருவுருவமும் மனதைக் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.பிராகார வலம் முடியும் இடத்தில் சிதம்பர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட யந்திரம் உள்ள சந்நதி உள்ளது.

மிகவும் சக்தி வாய்ந்த இதில் சகல தேவதைகளும் வாசம் புரிவதாக ஐதீகம். இந்த யந்திரம் ஆமைவடிவ பீடத்தில் எட்டு யானைகள், எட்டு நாகங்கள், கணங்கள் போன்றோரால் தாங்கப்படும் பெருமை உடையது. மூல மூர்த்திக்குச் சமமாக இந்த யந்திரத்திற்கும் தினசரி பூஜைகள் உண்டு. கந்தசஷ்டி ஆறு நாட்களும் விசேஷமாக வழிபடப்படும் இந்த சந்நதியை தரிசனம் செய்தால் திருமணத் தடைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். அதன் அருகில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகஸ்வாமி அருள்கிறார்.

வெளிமண்டபத்தில் நான்கடி உயரத்தில் வலது கையில் தாமரையும், இடது கையில் குவளை மலரும் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் கருணை பொங்கும் திருமுக மண்டலத்துடன் தெய்வானை தனிக்கோயிலில் அருள்கிறாள். இத்தலத்தில் உள்ள சர்வ வாத்யமண்டபம் ஓர் ஒப்புயர்வற்ற கலைக் கோயிலாய் துலங்குகிறது. ஈசனின் திருவிளையாடல்களும், முருகப்பெருமானின் திருவிளையாடல்களும் இங்கு அற்புதமான சிலைவடிவங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

இதைத்தவிர வன்மீகேசர், நவவீரர்கள், காருண்ய அம்மையார், பைரவர் போன்றோரும் தனிச் சந்நதிகளில் அருள்கின்றனர். தலவிருட்சமாக வன்னிமரம் விளங்குகிறது. மயில்மண்டபத்தில் துலாபார பிரார்த்தனையை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர். சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பாதையில் 42வது கிலோமீட்டரில் உள்ளது, திருப்போரூர்.

ந.பரணிகுமார்
படம்: விவேகானந்தன்