என்ன சொல்லுது எதிர்காலம்?



சூழ்ச்சிகளை தாண்டி இணைவீர்கள்

?எனக்கு 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. இப்போது நானும் கணவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருக்கிறோம். நாங்கள் இருவரும் மீண்டும் இல்லறத்தில் இணைவோமா? எங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டா?          
- டி. அருணா, வடலூர்.

உங்கள் இருவரின் ஜாதகங்களை கார்க்கேயர் நாடி எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். உங்கள் ஜாதகத்தில் சப்தமாதிபதியான (மாங்கல்ய ஸ்தானாதிபதி) புதன் தனக்கு 12வது வீடான 6ம் வீட்டில், ஆறாம் வீட்டு அதிபதியான சூரியனுடன் சேர்ந்து காணப்படுவதாலும், களத்திரகாரகன் களஸ்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதாலும், அவரே எட்டுக்குரியவராகி 7ல்
நிற்பதாலும், அஷ்டவர்க்கப் பரல்களை ஆராய்ந்துப் பார்க்கும்போது சப்த ஸ்தானம் குறைவான பரல்களைப் பெற்றிருப்பதாலும் இந்தப் பிரிவு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கணவரின் ஜாதகத்தில் குடும்பாதிபதி சூரியன் ராகுவுடன் சேர்ந்து தனக்குப் பன்னிரண்டில் மறைந்திருப்பதாலும், சப்தமத்தில் கேது அமர்ந்து சப்தமாதிபதியான சனி பகை வீட்டில், பகை நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதாலும், தற்சமயம் குடும்பாதிபதியுடன் நின்ற ராகுவின் தசை 12.11.2010 முதல் தொடங்கியிருப்பதாலும் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர் சண்டை, சச்சரவில் ஈடுபடுவார். அவருக்கு ராகு தசை நடைபெறுவதால் முன்கோபமும், வீண் சந்தேகங்களும், ஈகோ பிரச்னைகளும் வந்து நீங்கும்.

தற்சமய கோச்சார கிரகங்களின்படி, 5.9.2014 முதல் உங்கள் ஜாதகத்திற்கு குடும்பாதிபதி, சப்தமாதிபதி, லக்னாதிபதி ஆகியோரின் பலம் கூட இருப்பதால் கசப்புணர்வுகள், கருத்து வேறுபாடுகள் நீங்கும். இல்லறத்தில் இணைவீர்கள். சந்தான பாக்யம் உண்டு. பரிகாரமாக திருக்கடையூருக்கு அருகிலுள்ள திருவிடைக்கழி எனும் ஊரில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானை உங்கள் ஜென்ம நட்சத்திர நாளன்று நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். சூழ்ச்சிகளை தாண்டி இணைவீர்கள்.?

எங்கள் அண்ணனுக்கு வேலை செய்யும் இடத்தில் பிரச்னை அதிகமாக இருக்கிறது.
இதனால், அவர்  எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறார். இப்போது அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏதேனும் பிரச்னையில் சிக்கியிருக்கிறாரா? அல்லது திருமணம் முடித்து விட்டாரா? 
- கார்த்திகா, தாரமங்கலம்.

ஜாதக அலங்காரம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு உங்கள் அண்ணனின் ஜாதகத்தை ஆராய்ந்தோம். அவர் ஜாதகத்தில் உத்யோகஸ்தானமான 10ம் இடத்திற்குரிய கிரகம் 12ம் வீடான பகை வீட்டில் மறைந்திருப்பதாலும், யோகாதிபதியான செவ்வாய் நீசமாகி, பலவீனமாகி மறைந்திருப்பதாலும் உத்யோகத்தில் அடிக்கடி பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. தற்சமயம் அவருக்கு சனி மகாதசை. அது 1.7.2018 வரை நடைபெறும். பஞ்சமத்தில் சனி அமர்ந்து பகைக் கோளின் பார்வைபெற்று சனி மகாதசை நடைபெறுவதாலும் அவருக்குச் சங்கடங்கள் தொடர்கின்றன.

தற்சமயம் 13.2.2013 முதல் சனி மகாதசையில் ராகுபுக்தி நடைபெறுவதால் இந்தக் காலகட்டத்திலிருந்து அலுவலகத்தில் அவமானங்களும், மரியாதைக் குறைவான சம்பவங்களும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. பலவற்றையும் நினைத்து தாழ்வுமனப்பான்மைக்குள்ளாகி ஒதுங்கியுள்ளார். கோச்சார கிரகங்களை பார்க்கும்போது குரு 6ல் மறைந்திருப்பதாலும், ராகு-கேதுவின் போக்கு சரியில்லாததாலும் வருத்தத்தில் பிரிந்துள்ளார். கவலைப்படாதீர்கள். 10.10.2014க்குப் பின்னர் வீடு திரும்புவார். திருமணம் இன்னும் முடிக்கவில்லை. அண்டை மாநிலத்தில் உள்ளார். முடிந்தால்
பைரவருக்கு நெய் தீபமேற்றுங்கள்.

?குருபிரசாத்-பபிதா என்கிற தம்பதிக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இதுவரை குழந்தை பாக்யம் இல்லை. எப்போது மழலை பாக்கியம் கிட்டும்?
- ஆர்.கேசவ மூர்த்தி.

குருபிரசாத், பபிதா இருவரின் ஜாதகத்தை உத்திர காலாமிர்தம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். 24.12.2015 வரை குருபிரசாத்திற்கு சுக்கிர மகாதசை நடைபெறும். நவாம்சத்தில் சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து மறைந்திருப்பதாலும், கடந்த இரண்டு வருடங்களாக அஷ்டமத்துச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் குழந்தை பாக்யம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. பபிதாவின் ஜாதகத்தில் புத்திரகாரகனும், புத்திர ஸ்தானாதிபதியுமான குரு வலுவாக நிற்பதாலும், மீன ராகுவின் தசை நடைபெறுவதாலும் 15.9.2014 முதல் குழந்தை பாக்யத்தை எதிர்பார்க்கலாம். பரிகாரமாக இருவரையும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையை பஞ்சமி திதியில் நெய் தீபமேற்றி வணங்கச்
சொல்லுங்கள். குழந்தை பாக்யம் நிச்சயம் உண்டு.
   
?ஐயா எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இன்று வரை யாருக்கும் எவ்வித கெடுதலும், பாவமும் செய்யவில்லை. முதல் மனைவிக்கு என்னைப் பிடிக்கவில்லை, பிரிந்து சென்று விட்டார். எனக்கு இரண்டு பையன்கள், ஒரு பெண். என் இப்போதைய மனைவிக்கு சர்க்கரை நோய், மூட்டு வலியும் உள்ளது. மூத்த பையனுக்கு திருமணம் தள்ளிப் போகிறது. பெண் குழந்தை பி.பி.ஏ முடித்துவிட்டாள். தாய் சொல் கேட்பதில்லை. எந்தக் கோயிலுக்கும் வருவதில்லை. இளைய மகன் பிரிந்து சென்று தனியாக உள்ளான்.

அவனால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. அவன் எப்போது எங்களுக்கு ஆதரவாக இருப்பான்? எங்களது எதிர்காலம் எப்படி உள்ளது? என் மனைவியின் எலும்பு தேய்மான நோய் எப்போது குணமாகும்? நாங்கள் புதிய வீடு கட்டுவோமா? எனது குடும்பத்தில் முன்னோர் சாபம் உள்ளதா? அல்லது குலதெய்வக் குற்றம் உள்ளதா? எங்கள் ல தெய்வம் எது என்று தெரியாது. கவலைகள் தீர வழி காட்டுங்கள். -சதாசிவம், வேடசந்தூர்.

உங்கள் குடும்ப ஜாதகத்தை பிருகத் ஜாதக நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். உங்கள் ஜாதகத்தில் பூர்வ புண்யாதிபதி குரு நீசமாகி நிற்பதுடன், குரு நின்ற வீட்டாதிபதியான சனி, குருவுக்கு 8ல் மறைந்ததாலும் லக்னாதிபதியான செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து கிரகண தோஷம் அடைந்ததாலும்தான் குடும்பத்தில் தொடர்ந்து சோகங்களையும், பிரச்னைகளையும்,
ஏமாற்றங்களையும் சந்தித்து வருகின்றீர்கள்.

குரு வலுவிழந்து காணப்படுவதால்தான் பிள்ளைகளால் பிரச்னைகளையும், மரியாதைக்குறைவான நிகழ்வுகளையும் ஏற்பட்டிருக்கின்றன. இரண்டாவது மகனுக்கு 5.12.2013 முதல் சந்திரதசை தொடங்கியுள்ளது. ஆனால், தற்சமயம் கண்டகச் சனியும், அடுத்து அஷ்டமத்துச் சனியும் தொடங்குவதால் 18.8.2017 வரை அவர் குடும்பத்தோடு ஒத்துப் போகாமலும், பொறுப்பில்லாமலும்தான் இருப்பார். 19.8.2017 முதல் அவரால் நிம்மதி உண்டாகும்.

மூத்த மகனின் ஜாதகத்தில் சப்தமாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் நல்ல பெண் வாழ்க்கைத் துணையாக அமைவாள். ஆனால், களத்திரகாரகனான சுக்கிரன் ராசியிலும், நவாம்சத்திலும் பலவீனமாக இருப்பதாலும் அயனாம்ச முறைப்படி ஆராயும்போதும் 10.11.2014 முதல் திருமணம் கூடிவரும் வாய்ப்புள்ளது. பரிகாரமாக திருத்துறைப் பூண்டிக்கு அருகிலுள்ள கச்சனூர் சென்று வருவது நல்லது.

உங்கள் மனைவியின் ஜாதகத்தில் எலும்பு, மூட்டுக்குரிய கிரகம் செவ்வாய் ரோகாதிபதியாக வருவதாலும் அந்த ரோகாதிபதியை சனி, சூரியன் பார்வையிடுவதாலும், உடலாதிபதி சந்திரன் கிரக யுத்த அவஸ்தையில் சிக்கி வலுவிழந்து காணப்படுவதாலும் லக்னாதிபதி புதன் நீசம் அடைந்திருப்பதாலும், கை, கால், இடுப்பு வலியும், சர்க்கரை நோயும் உள்ளது. நோயிலிருந்து விடுபட உங்கள் மனைவி வைத்தீஸ்வரன் கோயில் சென்று முத்துக் குமார சுவாமிக்கு நெய் தீபமேற்றி வணங்கி வருவது நல்லது.

உங்கள் மகளுடைய தசா-புக்தியின்படி, 15.2.2015 முதல் நல்ல காலம் பிறக்கிறது. அது முதல் பொறுப்பாக செயல்படத் தொடங்குவார். பஞ்சபூத அடிப்படையில் உங்களுக்கு குலதெய்வம் முழுமையாக அமையாததால் வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சிக்கல் சிங்கார வேலரை தரிசியுங்கள். உங்கள் கஷ்டங்கள் யாவும் தீரும்.

?என் மகள் பிறந்த ஐந்து மாதத்திலிருந்து வலிப்பு வந்து, கை, கால்கள் வலுவிழந்து, மூளையும், பாதிக்கப்பட்டது. எங்களால் ஆன வைத்தியம், பூஜைகள், பரிகாரங்கள் செய்ததின் பலனாக 12 வயதிலிருந்து கை, கால்கள் வலுப்பெற்று தற்போது நன்றாக வளர்ந்திருக்கிறாள். ஆனால், மூளையில் மட்டும் சற்று குறைபாடு உள்ளது. நன்றாக பேசிக் கொண்டிருப்பாள், திடீரென்று கோபித்துக் கொண்டு கத்துவாள். சில சமயங்களில் குழந்தைத்தனமாக பேசுகிறாள். அவளது இந்த நடவடிக்கைகள் மாறி எப்போது திருமணமாகும்? - என். ரகுநாதன், திருப்பதி.

மகள் ஜாதகத்தை கிருஷ்ணமூர்த்தி பத்ததி கணித முறைப்படி ஆராய்ந்தோம் நரம்புக்குரிய கிரகம் சனி வக்ரமாகி கேதுவின் சாரம் பெற்று அமர்ந்திருப்பதாலும், சிறுமூளை கிரகம் புதன் பகைக்கோளான செவ்வாயின் சாரத்தில் அமர்ந்திருப்பதாலும் வலிப்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏறக்குறைய மூன்றரை வயது வரை நடந்த ராகு தசையும் அடுத்து வந்த குருதசையின் முற்பகுதியும் மோசமாக இருந்ததால் அவளுக்குக் கடுமையான மூளை பாதிப்பு ஏற்பட்டது.

தற்சமயம் வக்ரம் பெற்ற சனிதசை நடைபெற்று வருவதால் அவ்வப்போது சின்னச் சின்ன பாதிப்புகள் இருக்கும். சனி லக்னாதிபதி என்பதால் அவர் மகளின் ஆரோக்யத்தை அதிகப்படுத்துவார். நோயையும் குணப்படுத்துவார். ஆனால், சனி வக்கிரமாகி நிற்பதால்தான் உடனடியாக குணமாகாமல் படிப்படியாக குணமாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 19.7.2014 முதல் 19.9.2017 வரையுள்ள சுக்கிர புக்தியின் காலகட்டத்தில் உங்கள் மகளுக்கு கோபமும், குழந்தைத்தனமும் குறையும். இந்தக் காலகட்டத்திலேயே திருமணம் நிகழவும் வாய்ப்பிருக்கிறது. உங்கள் மகளை அழைத்துச் சென்று திருத்தணிக்கு அருகிலுள்ள சோளிங்கரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நரசிம்மரையும், ஸ்ரீஆஞ்சநேயரையும் வணங்குங்கள். ஆரோக்யம் கூடும். 

?திருமணமான நாளிலிருந்து எனது தங்கைக்கும் அவளது கணவருக்கும் இடையில் ஏதாவது பிரச்னைகளை என் தங்கையின் மாமியார் உண்டாக்குகிறார். எந்தவொரு குடும்ப விஷயத்தையும் தன் மனைவியிடம் கலந்தாலோசிக்கவிடாமல் தன் மகனின் மனதை மாற்றி கணவன்-மனைவிக்கிடையே இடைவெளியை ஏற்படுத்துகிறார். என் தங்கையும் இத்தனை வருடங்களாக பொறுமையை கடைப்பிடித்தும் இதற்கு தீர்வு இல்லை. ஆகவே, என் தங்கை மனநிம்மதியுடன் தன் கணவருடனும் வாழ வழிகாட்டுங்கள்.
- ரா. சகுந்தலா தேவி, ஈரோடு.

இருவர் ஜாதகங்களையும் அகத்தியர் ஐநூறு எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம் தங்கை ஜாதகத்தில் மாமியார் ஸ்தானத்திற்குரிய கிரகம் செவ்வாய் 8ல் அமர்ந்து நவாம்சத்தில் நீசம் பெற்றதால்தான், அவருடைய மாமியார் இவ்வாறு நடந்து கொள்கிறார். தங்கையின் ஜாதக தசா புக்திகளின்படி, 20.1.2015 முதல் மாமியாரின் போக்கில் மாற்றம் வரும். மாமியாருடன் இணக்கமாகும் சூழ்நிலையும் உருவாகும்.

தங்கை கணவரின் ஜாதகப்படி 4ம் வீட்டிற்குரிய தாய் ஸ்தானத்திற்குரிய கிரகம் புத்தி ஸ்தானமான 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதாலும், மாதுர்க்காரகனான சந்திரன் லக்ன கேந்திரம் பெற்று வலுவடைந்திருப்பதாலும்தான் அவர் தனது தாய்க்கு அதிக முக்கியத்துவம் தந்து, தாய்ப்பாசம் மிகுந்தவராக உள்ளார். கணவன்-மனைவி உறவுக்குள் தலையீடு இல்லாமல் அன்யோன்யம் அதிகரிக்க மாமியார் தொல்லை குறைய, கும்பகோணம் அருகிலுள்ள அய்யாவாடி ஊரில் அருள்பாலிக்கும் ப்ரத்யங்கிரா தேவியை அஷ்டமி அல்லது நவமி திதி நாளில் வணங்குங்கள். மகிழ்ச்சி கூடும்.