அழகும் இளமையும் கூடப பெறுவீர்கள் : என்ன சொல்லுது எதிர்காலம்?





? எங்களுக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆகின்றன. மழலை செல்வம் இதுவரை கிட்டவில்லை. எங்களுக்கு மழலை பாக்கியம் உள்ளதா?  
- ஜி. லெனின், பட்டுக்கோட்டை


உங்கள் இருவரின் ஜாதகத்தையும் டிகிரி சுத்தமாக ஆராய்ந்து பார்த்தோம். இருவருக்குமே புத்திர ஸ்தானம் பலவீனமாக இருக்கிறது. புத்திரகாரகனான குரு இருவர் ஜாதகத்திலும் வலுவிழந்து காணப்படுகிறார். கோச்சாரப்படி உங்களுக்கு இப்போது ஏழரைச் சனி நடைபெற்று வருவதாலும் குழந்தை பாக்யம் தடைபடுகிறது. தசா-புக்திகளை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது 10.5.2014க்கு பிறகு குழந்தை பாக்யத்தை எதிர்பார்க்கலாம். இருவர் ஜாதகத்திலும் ரத்த கிரகமான செவ்வாய், ராகு-கேதுவுடன் சேர்ந்திருப்பதாலும் யூரியா போன்ற ரசாயன உரம் இல்லாத ஆர்கானிக் இயற்கை உணவுகளை உட்கொள்ளுங்கள். இருவரும் பழனி முருகனை சாயரட்சை எனப்படும் மாலை ஆறு மணிக்கு நெய் தீபமேற்றி வணங்குங்கள்.   

? என் மகளுக்கு ஐப்பசி 15ம் நாளன்று (31.10.2008) திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஒரு வருடம்தான் சேர்ந்து வாழ்ந்தார்கள். சிறிய மனக்கசப்பால் இரண்டு வருடங்களாக பிரிந்துள்ளனர். அவர்களுடைய ஜாதகத்தை இத்தோடு அனுப்பியுள்ளேன். இருவரும் சேர்ந்து வாழும் யோகம் இருக்கிறதா? ஏதாவது பரிகாரம் செய்தால் சேர்ந்து வாழ்வார்களா, இல்லை எனது மகளுக்கு மறுமண யோகம் உண்டா?  
- எஸ். உஷாராணி, சென்னை


உங்கள் மகள் மற்றும் மருமகனின் ஜாதகத்தை சுக்கிர நாடி எனும் நூலை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்தோம். இருவருக்கும் நட்சத்திரப் பொருத்தமும், ஜாதகப் பொருத்தமும் மத்திமமாக இருக்கிறது. குறிப்பாக மருமகனின் ஜாதகத்தில் சப்தமாதிபதி சூரியன் தனக்கு 6ல் சென்று மறைந்தது, ஈகோ பிரச்னையால் கணவன்- மனைவிக்குள் பிரிவை உண்டாக்கும் அமைப்பாகும். இருவருக்கும் திருமணம் நடந்த நாளன்று உள்ள நட்சத்திர, ராசி, கிரக அமைப்புகள் எதுவும் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் கோச்சார கிரகங்கள் மற்றும் உங்கள் மகளின் தசா-புக்தி அந்தர அமைப்புகள் எல்லாம் தற்சமயம் சாதகமாக இருப்பதால் அக்டோபர் மாதத்திலிருந்து சேர்ந்து வாழும் யோகம் உண்டு. பரிகாரமாக திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வில்வார்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வர நல்லது நடக்கும்.              

? எனது ஜாதகத்தை இத்துடன் இணைத்துள்ளேன். 2018 மார்ச் வரை அதாவது எனது 60 வயது வரை அரசு உத்யோகத்தை பூர்த்தி செய்வேனா? சொந்த வீடு எந்த திசையில் அமையும்? எனது மகள் என்னை அந்திமக் காலத்தில் கவனித்துக் கொள்வாரா? எனது ஆயுட் காலம் எப்படியுள்ளது? எனது பேரனின் பிறந்த குறிப்புகளை அனுப்பியுள்ளேன். அவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?  
- தனசிங் மணியம், திருச்சி.


உங்கள் ஜாதகம் நன்றாக இருக்கிறது. நீங்கள் அனுப்பிய ஜாதகத்தில் சனி பகவானை குறிக்காமல் விட்டு விட்டீர்கள். உத்திர காலாமிர்தம் அடிப்படையில் நவாம்சம் மற்றும் ஷட்பலத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கும்போது உங்கள் ஜாதகத்தில் ஆன்மிக சக்தி அதிகம் நிரம்பியிருப்பதை அறிய முடிகிறது. ஆயுட்காரகன் சனி உங்கள் ஜாதகத்தில் 8ம் வீட்டில் மறைந்தாலும், கோதண்டத்தில் அமர்ந்திருப்பதால் உங்களுக்கு தீர்க்காயுசு யோகம் உண்டு. தற்சமயம் உங்களுக்கு அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள், நிம்மதியற்ற போக்கு, இடமாற்றங்கள் வந்துபோகும். ஆனால், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சுக்கிர தசையில் புதன் புக்தி 18.9.2014 வரை நடைபெறுவதால் அஷ்டமத்துச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். அறுபது வயது வரை உத்யோகத்தைப் பூர்த்தி செய்வீர்கள். உங்களின் சொந்த வீடு கிழக்கு, தென்கிழக்கு திக்கில் அமையும். உங்கள் மகள் உங்களை கடைசி வரை பாசமுடன் கவனித்துக் கொள்வார். உங்கள் பேரனின் ஜாதகம் அருமையாக இருக்கிறது. குருவின் அம்சம் அவர் ஜாதகத்தில் மேலோங்கியிருக்கிறது. வருங்காலத்தில் சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்துள்ள பதவியில் அமருவார். 10.9.2014லிருந்து உங்கள் பேரனுக்கு ஆரோக்யம் கூடும்.

?  எனக்கு 63 வயதாகிறது. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். குழந்தை பாக்யம் இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு ஹார்ட் அட்டாக் வந்து சிரமப்பட்டு தற்சமயம் மாத்திரையில்தான் காலம் கழிகிறது. தற்போது வயிறு, தொண்டையில் உபாதை, இனம் புரியாத பயம், கெட்ட கனவுகளெல்லாம் வருகின்றன. என் நோய் தீரவும், எதிர்காலம் நல்ல விதமாக அமையவும் பரிகாரம் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.
- அ. பழநி, தெங்கம்புதூர்.


உங்கள் ஜாதகத்தை மணிகண்ட கேரள ஜோதிட நூலை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்தோம். சிம்ம லக்னத்தில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் லக்னாதிபதியான சூரியன், பூர்வ புண்யாதிபதியான குருவுடன் சேர்ந்திருப்பதால் நீங்கள் ஒரு புண்ணிய ஆத்மா. இத்துடன் உங்கள் பிறவி முடிவடைகிறது. லக்னத்தில் சனியிருப்பதால் அனைத்து கஷ்ட, நஷ்டங்களையும் இந்தப் பிறவியிலேயே நீங்கள் அனுபவிப்பதுடன் பிறவிப் பெருங்கடலையும் நீந்திக் கொண்டிருக்கிறீர்கள். உடலாதிபதியும், மனோகாரகனான சந்திரனும் 8ல் மறைந்திருப்பதால்தான் சுக போகங்களை அனுபவிக்க முடியாமல் போனது. 6ம் வீட்டாதிபதியான சனி லக்னத்தில் பகை பெற்று அமர்ந்திருப்பதால்தான் கடைசிவரை தன் கையை ஊன்றி கரணம் போட்டு கொஞ்சம் கஷ்ட ஜீவனம் நடத்த வேண்டியதாகிவிட்டது. 29.1.2002 முதல் தொடங்கிய ராகுதசை 29.1.2020 வரை தொடர்ந்து இருக்கும். 



"வட்டவான் மதிக்கு ரெண்டில் திட்டமாய் அரவுக்கூடி அட்டமாதிபன் பலன் அனைத்தும் தருவான்" என்ற பாடலின்படி ராகு சரியில்லாமல் போனதால்தான் இன்பெக்ஷன், நெஞ்சு வலி,
வயிறு, தொண்டை உபாதைகளும் வந்து கொண்டேயிருக்கிறது. சர்ப்ப கிரகத்தின் தசை நடைபெறுவதால்தான் இனந்தெரியாத மனக் கவலை இருந்து கொண்டேயிருக்கிறது. குலதெய்வத்தை மறவாமல் வணங்குங்கள். முடிந்தால் அருகிலிருக்கும் ஞானிகளின் ஜீவசமாதிக்கோ அல்லது சித்தர் பீடத்திற்கோ சென்று வருவது நலமாகும்.

? எனது இரண்டாவது மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? வங்கியில் கடன், உறவினர்களிடம் கடன், நகைக் கடன் என பல லட்சங்கள் கடன் வாங்கி நெல் அறுவடை இயந்திரங்கள், உதிரிப் பாகங்கள் கடை வைத்துள்ளான். கடன்கள் அடைபடுமா? தொழிலும் வியாபாரமும் முன்னேற்றம் அளிக்குமா? நல்வழி காட்ட வேண்டுகிறேன்.
 - ஓர் வாசகர், விழுப்புரம்.


உங்கள் மகனின் ஜாதகத்தை பிருகத் ஜாதக அடிப்படையில் ஆராய்ந்தோம். நான்கு வீடுகளில் ஒன்பது கிரகங்கள் அமர்ந்திருப்பதால் கடின உழைப்பால் முன்னேற வேண்டிய யோகம் உங்கள் மகன் ஜாதகத்தில் உள்ளது. பிரபல யோகாதிபதியான சுக்கிரன் லக்னத்தில் அமர்ந்திருப்பதால் உங்கள் மகன் சமூகத்தில் பெரிய அந்தஸ்துடன் வாழ்வார். ஆனால், சுக்கிரனுடன் கேது நிற்பதால் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களையும் வாழ்க்கையில் சந்திக்க வேண்டி வரும். உங்கள் மகனுக்கு தற்சமயம் ராகு தசை நடைபெற்று வருகின்றது. 16.9.2013 வரை சூரிய புக்தி நடைபெறும், 17.9.2013 முதல் சந்திர புக்தி நடைபெறும். இவ்விரு கிரகங்களுமே 12ல் மறைந்து கிடப்பதால்தான் அடுத்தடுத்து இழப்புகளையும், ஏமாற்றங்களையும், கடன் பிரச்னைகளையும், உறவினர்களிடம் தலைக்குனிவையும் உங்கள் மகன் சந்திக்க வேண்டியதாகி விட்டது. தசாநாதனான ராகு அதன் எதிர்மறை கிரகமான கேதுவின் நட்சத்திரத்தில் அமர்ந்து தனது தசையை நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் மேற்கண்ட வியாபாரத்தை தொடங்காமல் இருந்திருந்தால் நலமாக இருந்திருக்கும். 5.4.2016லிருந்து தொடங்கும் குரு மகாதசை உங்கள் மகனுக்கு வாகன வகைகளால் ராஜ யோகத்தை தரும்.
குரு யோகாதிபதியின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதாலும், நவாம்சத்தில் வர்க்கோத்தம யோகம் அடைந்திருப்பதாலும் உங்கள் மகனுக்கு விவசாய வகையில் வியாபாரம் நிச்சயம் செழிக்கும். தசா, புக்தி, அந்தரங்களை அடிப்படையாகக் கொண்டு கோச்சார கிரகங்களை கணக்கிட்டுப் பார்க்கும்போது 18.2.2014லிருந்து வருமானம் உயரும். கொஞ்சம் கொஞ்சமாக கடனும் அடைபடத் தொடங்கும். பரிகாரமாக கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருபுவனத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை தரிசித்து சிறப்பு பூஜை செய்து வணங்கி வருவது நல்லது.  

?  என்னுடைய ஜாதகத்தில் 7ம் இடமான களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன், செவ்வாய், ராகு, சுக்கிரன் ஆகிய ஐந்து கிரகங்கள் இருக்கின்றன. எனக்குத் திருமணமாக வாய்ப்பு உண்டா? மேலும், ராகு தசை முடிந்து குரு தசையில் என் எதிர்காலம் சிறப்பாக அமையுமா? எனக்கு அரசு ஆசிரியர் பணி அமைய வாய்ப்பு உள்ளதா? என் உடல் எப்போதும் மெலிந்தே காணப்படுகிறது. எனவே ஒரு சிலர் கிண்டல், கேலி செய்கிறார்கள். இந்நிலை மாறுமா?  
- ஒரு வாசகர், மணல்மேடு, மயிலாடுதுறை.


உங்கள் ஜாதகத்தை அகத்தியர் நாடி ஜோதிட நூல் மூலம் ஆராய்ந்தோம் ரிஷப லக்னம், கன்னி ராசியில் பிறந்திருக்கும் நீங்கள், ஆராய்ச்சி மனப்பான்மை அதிகமுள்ளவர். நகைச்சுவை உணர்வும் உங்களிடம் அதிகம் உண்டு. உங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் கேது அமர்ந்திருக்க, லக்னாதிபதி சுக்கிரனும் ராகுவுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கும். ஐந்து கிரகங்கள் ஒன்றாக அமர்ந்து பரஸ்பரம் கிரக யுத்தம் செய்து கொண்டிருப்பதாலும் 16.12.2014 வரை ஏழரைச் சனி நடைபெற்று கொண்டிருப் பதாலும்தான் திருமணம் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. உங்கள் லக்னம், ராசிக்கு குரு யோகாதிபதியாக இல்லாவிட்டாலும் ராகுவின் நட்சத்திரத்தில் 10ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் தற்சமயம் தொடங்கியுள்ள குருதசை சிறப்பாக இருக்கும். ராஜாங்க கிரகமான குருவின் தசை தொடங்கியிருப்பதால் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குவீர்கள். அரசுப் பணியும் கிட்டும். லக்னத்தில் பாவ கிரகம் அமர்ந்து லக்னாதிபதியும் கிரக யுத்தத்திற்கு ஆளாகியிருப்பதால்தான் மெலிந்து காணப்படுகிறீர்கள். 15.6.2014 முதல் உடல் பருமனாகும். கேலி, கிண்டல் எல்லாம் விலகி அழகு, இளமை கூடப் பெறுவீர்கள்.

?  எங்கள் வீட்டில் எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் அண்ணனுக்கு திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. என் அக்காவுக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை இல்லை. என் மணவாழ்க்கை எப்படி இருக்கும்?
என் அண்ணியைப்போல் கோபமும், பிடிவாதமும் உள்ள பெண் எனக்கு மனைவியாக வருவதாக இருந்தால் நான் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்துவிடலாம் என நினைக்கிறேன்.
- ஆர். கல்யாண சுந்தரம், அவிநாசி.


உங்கள் ஜாதகத்தை சுகர்நாடி என்ற நூலின் மூலம் ஆராய்ந்தோம். களத்திரகாரகனாகிய சுக்கிரன் யோகாதிபதியான புதனுடன் சேர்ந்து நிற்பதுடன் 7ம் வீட்டை குரு பார்ப்பதாலும் சப்தமாதிபதி ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதாலும் உங்களுக்கு நல்ல குணவதியாக மனைவி அமைவாள்.
    
    "சீரேழிற் தூயோரிருக்கச்  
        சுபர் சுங்கனோடிருக்க
    வேயேழவன் ஆட்சிமேவி                         நிற்கத் - தீயோர்கண்
    நோக்கமற நோக்க நல்லோர்நோக்க                       அருந்ததியும்
    ஏக்க முறுங் கற்பேகதாரமாம்"
            -களத்திரபாவகம் - பாடல் 297, 298
இந்தப் பாடலின்படி உங்கள் ஜாதகத்தில் சில கிரக அமைப்புகள் சிறப்பாக உள்ளதால் மணவாழ்க்கை அற்புதமாக இருக்கும். மனைவியால் நிம்மதி உண்டு. 15.10.2013 முதல் 10.7.2014க்குள் திருமணம் முடியும்.

ஜாதகம் அனுப்புங்க, வாழ்க்கையை தெரிஞ்சுக்கோங்க!
உங்கள் ஜாதகங்களை, உங்கள் கேள்விகளோடு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஜாதகம் இல்லாதவர்கள் பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம், பிறந்த இடம் ஆகிய குறிப்புகளை அனுப்புங்கள். வண்ணமயமான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்!
என்ன சொல்லுது எதிர்காலம்?
தினகரன் ஆன்மிகம் பலன், தபால் பை எண்: 2910, மயிலாப்பூர், சென்னை - 600 004.