மதுரையில் மீனாட்சியாகவும், திருவானைக்காவலிலே அகிலாண்டேஸ் வரியாகவும், காசியிலே விசாலாட்சியாகவும் அருளும் அம்பிகை, காஞ்சியில் காமாட்சியாகத் திருவருள் புரிகிறாள். அகிலத்தையே காத்தருளும் இந்த அன்னைக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்து, துதித்து மகிழ்வது பக்தர்கள் அன்னைக்கு செலுத்தும் நன்றி காணிக்கை. குறிப்பாக அம்பிகைக்கே உரிய நவராத்திரித் திருவிழா காஞ்சி மாநகரில் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதே தலத்தில் அருளாட்சிபுரியும் ஏகாம்பரநாதரும், வரதராஜப் பெருமாளும் தத்தமது உற்சவக் காலங்களில் உற்சவ மூர்த்திகளாக திருவீதி உலாவரும்போது அன்னை காமாட்சியின் கோயிலை வலம் வந்து செல்லும் நடைமுறையிலிருந்து காமாட்சி தேவியின் மகிமையையும், மாட்சி மையையும் புரிந்துகொள்ளலாம்.
நவராத்திரி திருநாட்களில் காமாட்சி அம்மன் வெவ்வேறு அழகுக் கோலங்களில் பரிமளிக்கிறாள். கோயிலைச் சார்ந்தவர்கள் தங்களுடைய பக்தியை இந்த வகையில் அர்ப்பணிப்பதோடு, அதனை அனைவருமே கண்டு மகிழும் வண்ணம் அன்னையை கொலுவிருக்கச் செய்து ஆன்மிக சேவை புரிகிறார்கள். காஞ்சிபுரம் சென்று ஒன்பது நாளும் பல்வேறு விதமாக அலங்கரிக்கப்பட்டு தரிசனம் தரும் அம்பிகையைக் காணும் வாய்ப்பு இல்லாதவர்களுக்காக, இங்கே சில கோப்புப் படங்களை வெளியிட்டிருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அலங்காரம்தான் என்றாலும், அந்தந்த வருடத்து சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து, முக்கியமாக அன்னை காமாட்சியின் ஆக்ஞையைப் பொறுத்து அந்த அலங்காரங்களில் ஒருசில மாற்றங்கள் செய்யப்படுவதுண்டு. ஆனால், எப்போது இந்த அம்பிகையை தரிசித்தாலும், அப்போதுதான் புதிதாக, முதல்முறையாகப் பார்க்கும் பேரார்வம்தான் நம் இதயத்தை நிரப்பும். அன்னையின் மகிமை அத்தகையது.
இதோ அந்த காட்சிகள் சில, உங்களுடைய ஆன்மிக உணர்வுக்கு அரிய பிரசாதமாக -
* கலைவாணி கோலத்தில் காமாட்சி காட்டும் அருட்கோலம். அம்மனின் முக்கியமான அம்சங்களில் ஒன்று கலைவாணி என்ற சரஸ்வதி. கலைகளுக்கெல்லாம் மூலமானவள் என்பது மட்டுமல்ல, தகுதி உடையவனுக்கு, எதிர்பாராதவகையில், திடீரென கல்வி வரமளிக்கும் தேவியும் இவளே. பிறவியிலேயே பேச்சிழந்த மூகனை கவிமழை பொழிய வைத்தவள் இந்தத் தாய். மூகபஞ்சதீ எனும் துதியை அவன் தானே இயற்றிப் பாடும் வகையில் அவனுக்கு அருள் பாலித்தவள். அவ்வாறு அவனால் இயற்றப்பட்ட ஸ்லோகம் ஒவ்வொன்றிலும் காஞ்சி, காமாட்சி அல்லது காமகோடி எனும் பதம் வருமாறு அமைந்ததும் அன்னையின் அருள்தான். அல்லது தனக்கு இப்படி ஒரு அற்புதத்தை அருளிய அன்னைக்கு அவன் காட்டிய நன்றி உணர்வோ இது?
* ஒரு சராசரி மனிதனுக்குத் தேவை என்ன? அடிப்படை கல்வி, வாழ்க்கை நடத்த ஓரளவு செல்வம், பிரச்னைகளை எதிர்கொள்ளும் வீரம் - இவைதானே? தன்னைத் துதிப்போருக்கு அவை அனைத்தையும் குறைவின்றி அருள்வதாக அம்பிகை காட்டும் கோலம் இது. கலைமகளையும், அலைமகளையும் தன் இருபுறங்களிலும் அமர்த்திக்கொண்டு அருட்காட்சி தருகிறாள். கலைமகளின் அருளான கலை, அலைமகளின் அருளான செல்வம் என இரண்டுடன் சேர்த்து, எந்த பிரச்னையையும் சந்திக்கும் மன, உடல் உறுதியைத் தான் அருள்வதாக, அம்பிகை சொல்லாமல் சொல்லும் நேர்த்தி இது. முப்பெரும் தேவியராக சக்தி திகழும் அரிய கோலம். நவராத்திரி வழிபாட்டின் ஆதார நோக்கமே இதுதானே.
* காசி அன்னபூரணி எம்பெருமானின் கபாலத் திருவோட்டில் அன்னமிட்டு அவருடைய தோஷத்தை விலக்கினாள். ஐயனுக்கே படியளந்த அம்பிகை, அன்னபூரணியாக இங்கே அனைத்து மக்களின் பசியையும் ஆற்றிடும் கோலத்தில் வீற்றிருக்கிறாள். கல்வியையோ, செல்வத்தையோ ஒருவருக்கு அளிக்கும் பட்சத்தில் அவற்றைப் பெறுபவருக்கு அதில் முழு திருப்தி இருக்குமா என்பது சந்தேகமே. கல்வியாகட்டும், செல்வமாகட்டும் மேலும் மேலும் தேவை என்ற ஆசையை வளர்த்துவிடுகின்றன. ஆனால், உணவை மட்டுமே யாரும் ஒரு அளவுக்கு மேல் ஏற்க முடியாது. என்னதான் ராஜ விருந்தாக இருந்தாலும், ஒருவருக்கு சாப்பிட்டு வயிறு நிறைந்துவிட்டதென்றால், அதற்குப் பிறகு எவ்வளவுதான் மணமிக்க, ருசிமிக்க உணவை அளித்தாலும், அவர் அதைப் புறந்தள்ளிவிடுவார். ‘போதும், போதும்’ என்று கைகளால் அந்த உபரி உணவை மேலும் பரிமாறாதபடி தவிர்க்கப் பார்ப்பார். அப்படி ஒரு நிறைவு தரும் அன்னபூரணியாக, மலர்ச் சிரிப்புடன் காட்சி தருகிறாள் காமாட்சி.
* தன் பக்தர்களின் துன்பம் காணச் சகியாதவள் அம்பிகை. அவர்களை அணுகும் தீய சக்திகளை வெகுண்டெழுந்து நீராக்கிடுவாள். அதற்காக அவள் கோர உருவம் மேற்கொள்ளவும் தயங்குவதில்லை. அந்தத் தோற்றம், கொடுங்கோன்மை மிக்க அசுர சக்தி வெருண்டு ஓடத்தான். ஆனால், அதே உருவம் பக்தர்களின் பார்வைக்கு கருணை மிக்கதாகத் தெரியும். புராண காலங்களில் சண்ட, முண்டர், மகிஷாசுரன் முதலான அரக்கர் கூட்டத்தை ஓட ஓட விரட்டிய அன்னை, இந்தக் கலியுகத்தில், மக்களிடையே தோன்றும் அரக்க உணர்வுகளை தன் கோபத்தீயால் பொசுக்கிவிடுகிறாள் என்பது உண்மை. வஞ்சக எண்ணமும், எதிர்ப்பும் வெளியிலிருந்துதான் வரவேண்டும் என்பதில்லை; நம் உள்ளத்திலேகூட உருவாகலாம். சந்தர்ப்ப சூழ்நிலைகள், பழகு மக்கள் என்ற பல காரணங்களால் அந்த அசூயைக்கு நம் மனம் இடம் தரலாம். ஆனால், அதுபோன்ற எந்த உணர்வுக்கும் நாம் ஆட்படக்கூடாது என்பதில் அன்னை அதிக அக்கறை கொண்டிருக்கிறாள். அத்தகைய துர்க்கையைத் துதித்தால் நம் மனம் மாசற்றதாகவும், விசாலமானதாகவும் மாறிவிடும். அத்தகைய துர்க்கை கோலத்தில் அம்பிகை காமாட்சி அருட்காட்சி நல்குகிறாள்.
* காமாட்சி அம்பிகை இந்தப் படத்தில் தவக்கோலம் பூண்டவளாகக் காட்சி யளிக்கிறாள். லவங்கமாலை தரித்திருக்கிறாள் அன்னை. தவ வேகம் அதிகரிக்க, அதிகரிக்க லவங்கத்தின் வாசனையும் மேலோங்கும். தன் பக்தர்கள் வாழ்வில் நல்மணம் பரப்ப, தான் தீவிர தவம் மேற்கொண்டு, தன்னையே வருத்திக்கொள்ளும் தியாகப் பிழம்பு அன்னை. மேலே சுட்டெரிக்கும் வெயில், நான்கு திசைகளிலும் திகுதிகுவென எரியும் தீ, இந்த பஞ்சாக்னிக்கு நடுவே அன்னை கடுந்தவம் இயற்றி, ஈசனின் அருளைப் பெற்றது எதற்காக? தன் குழந்தைகளாம் பூவுலகத்தினர் எந்தத் துயரிலும் வாடக்கூடாது என்பதற்காகத்தான். பக்தர்கள், தங்களுக்கு ஏற்படும் தடைகளை, தீவினைகளை, திருஷ்டிகளை, கூடா நட்புகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவாள், இவளை மனமுருக உபாசித்தால்.
டி அம்பிகையின் உலகமான ஸ்ரீபுரத்தில் அம்பிகையின் கொலுமண்டபம் அட்டகாசமான அலங்காரத்துடன் திகழ்ந்தது. கலை விற்பன்னர்கள் எல்லாம் தம் திறமைகளைக் காண்பித்து அம்பிகையை சந்தோஷப் படுத்தினார்கள். அப்படிப்பட்ட கலைஞர்களில் ஒருவராக கலைவாணி தன் வீணையை இசைத்து இனிய நாதம் எழுப்பினாள். அந்த சங்கீ தத்தில் லயித்துப்போன அம்பிகை, ‘ஆஹா, பிரமாதம்’ என்று தன் தேன் குரலில் பாராட்டினாள். அந்தக் குரலினிமையைக் கேட்ட சரஸ்வதி வெட்கினாள். ஆமாம், அந்தத் தீங்குரலுக்கு முன்னால் தன் வீணை நாதம் தோற்றுப் போய்விட்டதாகவே அவள் நினைத்தாள். அப்படி வெட்கப்பட்ட, அனைத்துக் கலைகளுக்கும் வாணியான சரஸ்வதி அப்போதே தன் வீணையை உறையிலிட்டு மூடிவைத்தாளாம்! அப்படி சரஸ்வதியையே வெட்கப்பட வைத்த இனிய குரலுக்குரிய அம்பிகையின் இனிய தோற்றம் இது.
* பக்தியின் பூரணத்துவமே சரணாகதியில்தான் இருக்கிறது. எத்தனையோ கடவுளர்கள் இருந்தாலும், அவர்கள் வெவ்வேறு தோற்றங்கள் கொண்டிருந்தாலும், பல கைகள், பல முகங்கள் அவர்கள் கொண்டிருந்தாலும், அனைத்து உருவங்களிலும் உறைபவன் ஒரே இறைவன்தான் என்பதை அறிவுறுத்துவது பாதம்தான். ஆமாம், கடவுளின் பாதங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதனால்தான் பாத சரணாகதி என்பது பக்தியின் உயர்நிலையைக் குறிக்கிறது. இங்கே அன்னை காமாட்சியும் தன் திருப்பாதங்களைக் காட்டி, அத்தகைய பக்தியை ஏற்கத் தயாராக உள்ள கோலத்தை காட்டுகிறாள்.
* விஜயதசமித் திருநாளில் அன்னை காமாட்சியை இந்தக் கோலத்தில் காணலாம். தூய எண்ணத்தின் அடிப்படையில் ஆற்றப்படும் செயல் பூரணத்துவம் பெறவும், பலருக்கும் நன்மை அளிக்கப்படவும் மனதில் திண்மை வேண்டும். ‘எண்ணத்தில் திண்ணியராகப் பெரின், செயலாக்கம் எளிதாமே’ என்பதுபோல, எந்தத் தடையையும் சுலபமாகத் தகர்க்கக்கூடிய அளவுக்கு மனதில் உறுதி சேரும். பொது நல நோக்கோடு அந்த எண்ணம் அமையுமானால் அது செயலாக மாற அனைவரது ஒத்துழைப்பும், உதவியும் தானாக வருவித்துத் தரும். ஆகவே அடிப்படையில் எதிர்மறை எண்ணங்களை தான் கொண்டிருக்கும் வில்-அம்பால் விரட்டியடிக்கும் கோலத்தில் அன்னை காட்சியளிக்கிறாள்.
இந்த விஜயதசமித் திருநாளன்றுதான் பஞ்ச் பாண்டவர்கள் தாம் ஒரு வன்னி மரத்தில் ஒளித்து வைத்திருந்த தம் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, அம்பிகையை வழிபட்டு போரில் ஈடுபட பரிபூரண வெற்றியை அடைந் தார்கள் என்கிறது புராணம். கல்வி, கலை, போர்த் தந்திரங்கள் அனைத்தையும் அன்போடு புகட்டும் அன்னையின் இந்தத் தோற்றம், சொல்லில் வடிக்கவொண்ணா பேரழகு கொண்டது.
* ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுமை பெறுவது என்பது, அவள் மணமுடித்தலிலும் பிறகு பிள்ளை பெறுதலிலும்தான் என்பது சம்பிரதாய வழக்கு. இறை அம்சங்களும் அந்த வகையில் மணக்கோலம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதை புராண காலத்திலிருந்து இன்றுவரை பார்த்து வருகிறோம். சாதாரண மக்கள் போல தாங்களும் மணக்கோலம் காட்டி, உலகுக்கே தாய்-தந்தை யாகத் திகழ்கிறார்கள் இறைவர்கள். அத்தகைய மங்கலப் பொலிவு கொண்டு நம் மனதை ஈர்க்கிறார் அன்னை காமாட்சி. கழுத்தில் மங்கல நாண் துலங்க, முகத்தில் வெட்கப் புன்னகையுடன் துலங்கும் அன்னையின் அருட்காட்சி இது.
* உலகை ரட்சிக்கும் பேரருள் கொண்டவள் அன்னை காமாட்சி. ரட்சிப்பது என்றால் என்ன? தானே உலகைப் படைத்து, தானே காத்து, தானே அழித்திடவும் செய்யும் தெய்வத் தொண்டு அது. மூவகை செயல்களை முறைபடுத்திச் செய்யும் அன்னை, தானே உலகோர் மீது பரிவு கொண்டு மேற்கொண்டுள்ள செயல் - அனுக்ரஹித்தல். படைக்கும் அன்னை அழித்திடவும் செய்கிறாளே என்று வருந்துவதில் அர்த்தமில்லை, உருவாகும் எல்லாமும் ஒருநாள் அழியத்தானே வேண்டும்! ஆனால், கூடவே அனுக்ரகிக்கிறாளே, அது தாய்மைக்கே உரிய திருவுள்ளம் அல்லவா? அந்த ரட்சிப்புக்கு நன்றி செலுத்தும்வகையில் அன்னையைத் திருத்தேரில் அமர்த்தி வீதிவுலா அழைத்துச் செல்லும் காட்சி இது. அதுவும் தங்க ரதத்தில் திருவுலா. அம்பிகை அளித்திருக்கும் அளப்பறிய நன்மைகளுக்கு எப்படியெல்லாம் நம்மால் நன்றி செலுத்த முடியும் என்பதை வெளிக்காட்டும் பல வழிகளில் ஒன்றுதான் இந்தத் தங்கத் தேர் உலா. இறைவியை அந்தத் தேரில் எழுந்தருளச் செய்து, உலா அழைத்துவருவது என்பது, தத்தமது இருப்பிடங்களை விட்டு அகல இயலாதவர்களும் அந்த திவ்ய தரிசனத்தைக் கண்குளிரக் கண்டு வணங்கும் அடிப்படை மனிதாபிமான முயற்சிதான் இது. திருக்கோலம்தான் இது. நவராத்திரி வைபவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக இந்த தங்கத் தேர் ஊர்வலம் நிகழ்கிறது.
- ந.பரணிகுமார்
படங்கள்: பாஸ்கர்