குண்டு போடுகிறார் தினேஷ்!



‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றார். அடுத்தடுத்து நடிப்பிற்கு சவாலான கதாபாத்திரங்களே இவரைத் தேடி
வந்தன. அவற்றில் முக்கியமானவை ‘ராஜு முருகன் இயக்கிய ‘குக்கூ’, வெற்றி மாறன் இயக்கிய ‘விசாரணை’.

சவாலான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் ‘திருடன் போலீஸ்’, ‘அண்ணனுக்கு ஜே’ என பக்காவான என்டெர்டெயின்மென்ட் கதாபாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர்.இப்போது இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில்  ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் நடித்துள்ளார்.

‘‘எங்க ‘குண்டு’ படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடு தொடர்புபடுத்தினாலும் அது அந்த நிலப்பரப்போடு பொருந்திப்போகும். ஒரு இன்டர்நேஷனல் பாலிடிக்ஸ் படத்தில் இருக்கிறது. அதேசமயம் அனைவரும் ரசிக்கும்படியும்  எல்லோருக்குமான ஒரு படமாக வந்திருக்கிறது. என் சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான படம்.

ஒரு லாரி ஓட்டுனராக, வட தமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம். அடுத்தடுத்து தமிழ்,  மலையாளம், தெலுங்குப் படங்களில் வாய்ப்புகள் வருகின்றன. எனக்குப் பொருத்தமான கதைகளைத் தேர்வு செய்து நடிப்பேன்’’ என்கிறார் தினேஷ்.

- சுரா