தமிழில் வருகிறதா ட்ரிபிள் எக்ஸ் படம்?



அயல்நாடுகளில் எல்லாம் ஹீரோ ஹீரோயின்கள் ‘முற்றிலும் துறந்த நிலையில்’ நடிக்கும் காட்சிகள் அமைந்த படங்கள் சகஜம். XXX (ட்ரிபிள் எக்ஸ்) என்று முத்திரை குத்தப்படும் இத்தகைய படங்களைப் பார்க்க உலகம் முழுக்கவே ஆர்வலர்கள் அதிகம்.

நம் நாட்டைப் பொறுத்தவரை சென்ஸார் போர்டு இத்தகைய படங்களை அனுமதிப்பதில்லை. அதிகபட்சமாக XX (டபுள் எக்ஸ்) படங்களை ஏகத்துக்கும் வெட்டித் தள்ளி அனுமதிப்பதுண்டு. சில காலம் முன்பு ‘எக்ஸ் சோன்’ என்கிற பெயரில் ஓர் இந்திப்படம் சென்ஸாருக்கு வந்து, அனுமதிக்கப்படாமலேயே பொட்டிக்குள் முடங்கியது. மேல்முறையீட்டுக்கு போயும்கூட இந்தப் படத்தை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டது சென்ஸார்.

அதேநேரம் இப்போது ‘எக்ஸ் வீடியோஸ்’ என்கிற படம் சென்ஸார் போர்டின் பெண் உறுப்பினர்களிடம் பாராட்டு வாங்கி ‘ஏ’ சான்றிதழோடு வெளியாகவிருக்கிறது என்கிற விஷயம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இப்படம் இந்தி, தமிழ் என்று இரண்டு மொழிகளில் தயாராகி இருக்கிறது. படத்தை இயக்கியிருப்பவர் ஹரியின் உதவியாளர் சஜோ சுந்தர்.

அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை கலர் ஷாடோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.இயக்குநர் சஜோ சுந்தரை, ‘வண்ணத்திரை’க்கு வண்ணமயமான படங்களைக் கொடுங்கள் என்கிற வேண்டுகோளோடு சந்தித்தோம்.“நிறைய பேர், எங்கள் படத்தை கசமுசா படமென்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். டைட்டில் அப்படி இருந்தாலும், இந்தப் படத்தில் நான் மையப்படுத்தி சொல்லியிருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த விஷயங்களை. வெறுமனே சதையைக் காட்டி கதை இல்லாமல் எடுக்கப்பட்ட படமல்ல இது.

சமூக வலைத்தளங்கள் இன்றைய தேதியில் உலகம் முழுக்க நட்பு வலையை உருவாக்கக்கூடிய பாசிட்டிவ்வான அம்சங்களைக் கொண்டிருந்தாலும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆண்ட்ராய்ட் மாபியாக்கள் அழகான பெண்களைக் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார்கள். அத்தகைய ஆண்ட்ராய்ட் மாபியாக்களை தோலுரிக்கும் படமாக எங்கள் ‘எக்ஸ் சோன்’ இருக்கும்.

இப்போதைய பெண்களுக்கு அவசியமான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கருத்தினைக் கொண்டிருப்பதாலேயே படம் பார்த்த பெண்கள் எங்களைப் பாராட்டுகிறார்கள். சென்ஸார் அமைப்பும் சான்றிதழ் வழங்கியிருக்கிறது. கதைக்குத் தேவையான கிளாமர் மட்டுமே படத்தில் இடம்பெறும். எனவே, அம்மாதிரி கவர்ச்சி கதையிலிருந்து துருத்திக் கொண்டு தனியாகத் தெரியாது.

படம் பார்த்து முடித்த ரசிகன் ஒவ்வொருவனுக்கும் எங்கள் படம் சொல்லும் மெசேஜ்தான் மைண்டில் நிற்குமே தவிர, படத்தில் இடம்பெற்ற கவர்ச்சியை மறந்துவிடுவான்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் சஜோ சுந்தர்.

- ராஜா