கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படத்தின் கதை!



‘பாபநாசம்’ படத்தில் பாசமுள்ள தந்தையாக, நல்லதொரு குடும்பத் தலைவனாக வெளிப்பட்ட கமல்ஹாசன், அடுத்த படமான ‘தூங்காவனம்’ படத்திலும் இதே பாத்திரத்தை தொடர்கிறார். 2011ல் வெளிவந்த பிரெஞ்சு திரைப்படமான ‘ஸ்லீப்லெஸ் நைட்’ (பிரெஞ்சில் ‘nuit blanche’) தமிழில் அதிகாரபூர்வமாக தூங்காவனம் ஆகிறது.
 2011 டொரொண்டோ திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு, விமர்சகர்களின் பெருவாரியான வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் தமிழில் மட்டுமின்றி, வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தால் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் வேடத்தில் ஆங்கிலத்தில் ‘Django Unchained’ புகழ் ஜேமீ ஃபாக்ஸ் நடிக்கிறார்.

படத்தின் கதை?

கமல்ஹாசன் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. ஒரு போதைக் கடத்தல் கும்பலோடு மோதுகிறார்.அந்த கும்பலின் தலைவன், கமலை அடக்குவதற்காக இவரது மகனை கடத்துகிறான்.

போலீஸ் மடக்கிய போதைப்பொருளை, போதை வியாபாரிகளிடம் கமல்ஹாசனே விற்றுக் கொடுத்தால்தான் மகனை உயிரோடு பார்க்க முடியும் என்பது நிபந்தனை.

ஒரே இரவில் ஒரு நைட் கிளப்பில் கதை நடக்கிறது. தன்னுடைய பணி நேர்மையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், மகனையும் காப்பாற்ற வேண்டும் என்கிற நிலையில் போதைக்கும்பல் தலைவனோடு கமல்ஹாசன் ஆடும் கேட் & மவுஸ் விளையாட்டுதான் ‘தூங்காவனம்’.

ஒரிஜினல் பிரெஞ்சுப் படத்தின் சண்டைக்காட்சிகள் வெகுவாக பாராட்டப்பட்டவை என்பதால், அப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்களையே இந்தப் படத்துக்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.கமல்ஹாசனிடம் நீண்டகாலமாக அசோசியேட்டாக பணிபுரிந்த ராஜேஷ் செல்வா, இந்த படம் மூலம் இயக்குனராக களமிறங்குகிறார். தெலுங்கிலும் ‘சீகட்டி ராஜ்யம்’ என்று இப்படம் வெளியாகிறது.