கொம்பன் கதை யாருக்குச் சொந்தம்?



சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ‘கொம்பன்’ படத்தின் கதை தன்னுடையது என்று சொல்லி ஒரு குண்டைத்தூக்கி எறிந்திருக்கிறார் உதவி இயக்குனர் துரை. ’வல்லரசு’ படத்தின் தமிழ், இந்திப் பதிப்புகளின் இணைக்கதாசிரியராக மகாராஜனிடம் பணியாற்றியவர் இவர். பேரரசு, அம்மு ரமேஷ் ஆகியோரிடமும் உதவி இயக்குனராகப் பணியாற்றிய இவருக்கு 15 ஆண்டு திரை அனுபவம் இருக்கிறது.

திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் தமிழ்த்திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திலும் ‘கொம்பன் கதை என்னுடையது’ என்று புகார் செய்திருக்கிறார் இவர். இயக்குனர்கள் சங்கம் ‘கொம்பன்’ படத்தயாரிப்பாளர்களிடம் விளக்கம் கேட்டிருப்பதே தனக்குக்கிடைத்த முதல் வெற்றி என்கிறார்.

‘‘இந்தக்கதையை 1.2.2012 லேயே திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். 2014ல் சூப்பர் குட் சவுத்ரியிடம் கதை சொன்னேன். அவர் விஷாலை வைத்து படமாக்க முடிவு செய்திருந்தார். அதற்குள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கார்த்தியை வைத்து படமெடுக்க முடிவு செய்தபோது முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுத்தேன். தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு எனக்கு அனுப்பிய மெயில் ஆதாரம் உள்ளது. நியாயம் கிடைக்க காத்திருக்கிறேன்’’ என்கிறார் துரை.

-நெல்பா