தங்கத்தட்டு வாங்கிய தமிழ் இசை!
யாரிடமும் கற்றுக்கொள்ளாமல் சினிமாவின் அத்தனை துறையிலும் முத்திரை பதிப்பவர் டி.ராஜேந்தர். தேசிங்குராஜ உடையார்- ராஜலட்சுமி அம்மாள் தம்பதியின் மகனாக மயிலாடுதுறையில் பிறந்த இவருக்கு கல்லூரிப்பருவத்தில் கவிதை கைவரப்பெற்றது.
 தினமும் சிதம்பரம் ஏ.வி.சி கல்லூரிக்கு ரயிலில் போகும்போதும் வரும்போதும் இவர் தாளம் தட்டி, சொந்தமாக மெட்டுக்கட்டிப் பாடும் பாடல்களைக் கேட்பதற்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்திருக்கிறது.
பெரிய போராட்டத்துக்குப்பிறகு தயாரிப்பாளர் இப்ராஹிம் இவரது திறமையை நம்பிக்கொடுத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். ‘ஒருதலை ராகம்’ படம் உருவானது. அந்தப்படத்தில் எல்லாப்பாடல்களையும் எழுதி இசையமைத்தார் டி.ராஜேந்தர். அதில் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடிய ‘இது குழந்தை பாடும் தாலாட்டு...’ மற்றும் ‘வாசமில்லா மலரிது...’,
 டி.எம்.செளந்தர்ராஜன் பாடிய ‘என் கதை முடியும் நேரமிது...’ மற்றும் ‘நான் ஒரு ராசியில்லா ராஜா...’, ஜாலி ஆபிரஹாம் பாடிய ‘அட மன்மதன் ரட்சிக்கணும்...’, பி.ஜெயச்சந்திரன் பாடிய ‘கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்...’, மலேசியா வாசுதேவன் பாடிய ‘கூடையில கருவாடு கூந்தலில பூக்காடு...’ என ஏழு பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
‘நான் ஒரு ராசியில்லா ராஜா’, ‘என்கதை முடியும் நேரமிது’ என்பதெல்லாம் அறச்சொல்லாக இருப்பதால், தன்னால் பாடமுடியாது என்று மறுத்திருக்கிறார் டி.எம்.எஸ். ‘கதைக்கேற்ற வரி இதுதான்; காதலின் வலி இதுதான்’ என்று ஆரம்பப்படத்திலேயே அடம்பிடித்து வெற்றிகண்டிருக்கிறார் டி.ஆர். அந்தப்படத்தில் ‘கூடையில கருவாடு...’ பாடலில் வரும் திருநங்கைகளின் குரல் டி.ராஜேந்தருடையது.
ஒரு காதல் படத்தில் பெண்குரலே இல்லாமல், அத்தனை பாடல்களையும் ஆண் பாடகர்களை வைத்தே பாடச்செய்து புதுமை படைத்தார் டி.ஆர். அந்த நேரத்தில் ‘ஒருதலை ராகம்’ பாடல்கள் இல்லாத கச்சேரிகளே இல்லை என்கிற நிலை இருந்தது. திரையுலகமே டி.ஆரைத் திரும்பிப் பார்த்தது. சக இசையமைப்பளர்கள் வெளியே காட்டிக்கொள்ளமுடியாத பொறாமையோடு வெறித்துப் பார்த்தார்கள்.
‘இரயில் பயணங்களில்’ படத்திலும் அதனை பாடல்களையும் எழுதி, இசையமைத்தார் டி.ஆர். அதில் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடிய ‘அட யாரோ பின்பாட்டுப் பாட...’, ‘வசந்தம் பாடிவர வைகை ஒடிவர...’, டி.எம்.எஸ் பாடிய ‘அமைதிக்குப் பெயர்தான் சாந்தி...’, ‘நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா...’, ஜெயச்சந்திரன் பாடிய ‘வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்...’ஆகிய அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றன. அந்தப்படத்தில் ஒரே ஒரு பெண்குரல். அது ஜானகி. ‘வசந்தம் பாடிவர...’ என்று எஸ்.பி.பி பாடியதையே அவர் மீண்டும் பாடினார்.
மோகன்- பூர்ணிமா நடித்த ‘கிளிஞ்சல்கள்’ படத்துக்கு பாடல்கள் எழுதி, இசையமைத்தார் டி.ஆர். அதில் ‘விழிகள் மேடையாம்...’ பாடல் பெரிய வீச்சு கண்டது.தயாரிப்பாளராக உயர்ந்து இவர் இயக்கி, இசையமைத்த படம் ‘தங்கைக்கோர் கீதம்’. அதில் எஸ்.பி.பி பாடிய ‘தஞ்சாவூரு மேளம்...’, எல்.ஆர்.அஞ்சலி பாடிய ‘தண்ணியில மீனப்போல...’ மற்றும் இவர் பாடிய ‘தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி...’ உள்ளிட்ட அனைத்துப்பாடல்களும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டன.
‘உயிருள்ளவரை உஷா’ வில் ஜேசுதாஸ் பாடிய ‘வைகைக் கரை காற்றே நில்லு...’ சோகரசத்தையும், எஸ்.பி.பி பாடிய ‘கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு...’பாடல் துள்ளல் சுகத்தையும் ரசிகர்களுக்குத் தந்தன.
இரட்டை வேடங்களில் நடித்து பாட்டெழுதி இசையமைத்த ‘உறவைக் காத்த கிளி’ படத்தில் இவர் பாடிய ‘அடங்கொப்பன் மவனே டண்டணக்கா...’ மற்றும் ஜேசுதாஸ்-சசிரேகா பாடிய ‘எந்தன் பாடல்களில் நீ நிலாம்பரி...’ பாடல்கள் பாட்டுப் பிரியர்களால் கொண்டாடப்பட்டன.‘பூக்களைப் பறிக்காதீர்கள்’ படத்தில் எஸ்.பி.பி பாடிய ‘மானே தேனே கட்டிப்பிடி...’ மற்றும் மலேசியா வாசுதேவன் பாடிய ‘பூக்களைத்தான் பறிக்காதீங்க...’ பாடல்கள் வெற்றிப்பாடல்களின் வரிசையில் விலாசம் பெற்றன.
‘மைதிலி என்னை காதலி’ படத்தில் ‘காதல் பட்ட பாவத்தால்’ என்று தொகையறாவைத் தொடங்குவார் ஜேசுதாஸ். ‘அட பொன்னான மனசே பூவான மனசே...’என்று பாடலைத் தொடர்வார் டி.ஆர். அதில் எஸ்.பி.பி பாடிய ‘எங்கும் மைதிலி...’, ‘சாரீரம் இல்லாமல் சங்கீதமா...’, ‘தண்ணீரிலே மீன் அழுதால்...’, இவர் பாடிய ‘என்னாச மைதிலியே...’ உள்ளிட்ட அத்தனை பாடல்களும் ஆரவாரமாக கொண்டாடப்பட்டன.
‘ஒரு தாயின் சபதம்’ படத்தில் ‘சொல்லாமத்தானே...’, ‘எனது கானம்...’, ‘என் தங்கை கல்யாணி’யில் ‘தோல் மீது தாலாட்ட...’, ‘தங்கச்சிக்குச் சீமந்தம்...’ ‘எல்லாமே என் தங்கச்சி...’, ‘போட்டானே மூணு முடிச்சுத்தான்...’, உள்ளிட்ட அத்தனை பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப்படத்துக்கான இசைத்தட்டு விற்பனைச் சாதனையால் தங்க இசைத்தட்டுப் பரிச பெற்றார் டி.ராஜேந்தர்.
இளைஞன் ஆனதும் ‘சொன்னால்தான் காதலா’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியிருப்பார் சிம்பு. ‘வேலா வேலா எங்க வீட்டு வேலா...’ என்ற பாடலை ஷங்கர் மகாதேவனுடன் இணைந்து பாடினார் சிம்பு. கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ படத்தில் ‘ஜோதிகாவா...’, ‘கிளிண்டன் மகளா...’ என்று இரண்டு பாடல்களைப் பாடி வரவேற்பைப் பெற்றார் சிம்பு.
தனது படங்களுக்கு மட்டுமல்ல, வெளியார் படங்களுக்கும் இசையால் பெருமை சேர்த்திருக்கிறார் டி.ஆர்.சிம்பு நாயகனாக நடித்த ‘ஒஸ்தி’ படத்தில் ‘கலாசலா கலசலா...’ பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து டி.ஆர் பாடியது, இளம் பாடகர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது.
‘வல்லவன்’ படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில், டி.ஆர் பாடிய ‘அம்மாடி ஆத்தாடி...’ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என்ற வகையில் டி.ராஜேந்தரின் பாட்டுச்சாலைப் பயணம் வெற்றிகரமாக தொடர்கிறது.
அடுத்த இதழில்
வீணை எஸ். பாலச்சந்தர்
நெல்லைபாரதி
|