புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்



மதுரைக் களம் என்றாலே வெட்டுக்குத்துதான் ஞாபகத்துக்கு வரும்.ஆனால், இது மதுரையில் மலரும் மென்மையான காதல் கதை. நாயகன் கிருஷ் வேலைக்குப் போகும்போது தற்செயலாக நாயகி சிருஷ்டியைப் பார்க்கிறார்.

அப்புறம் என்ன? கண்டதும் காதல் கொள்கிறார். பதிலுக்கு சிருஷ்டியும் புன்னகைக்கிறார். ஆனால் தன் மனதில் இருக்கும் காதலைச் சொல்ல தவியாய்த் தவிக்கிறார் கிருஷ். இதற்கிடையே சிருஷ்டிக்கு வேறு  ஒருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. கடைசியில் கிருஷ் தன் காதலைச் சொல்லி ஜெயித்தாரா, இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.

நாயகன் கிருஷ் திறமையான பாடகர் என்பது நாடறிந்த செய்தி. ஆனால் நடிப்பு? பாவம்! சிருஷ்டிக்கு அவருடைய கன்னக்குழிச் சிரிப்பு கை கொடுக்கிறது. டீக்கடைக்காரராக வரும் ‘யோகி’ தேவராஜ் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரெஹைனா சேகர் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.

மதுரை மாநகரின் அழகுக்கு அழகு சேர்க்கிறது செந்தில்மாறனின் கேமரா.  இயக்குனர் தம்பி செய்யது இப்ராஹிம் அழகான காதல் கதையில் பழைய உத்தியை பயன்படுத்தாமல் இருந்திருந்தால் இது எல்லோருக்கும் பிடித்திருக்கும்.