புத்தனின் சிரிப்பு
அக்ரி படித்துவிட்டு சொந்த மண்ணில் விவசாயம் செய்து பசுமைப் புரட்சி பண்ண வேண்டும் என்கிற லட்சியத்துடன் வாழ்கிறார் மகேஷ். நாட்டில் உள்ள குப்பைகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அதே வேளையில் நாட்டை தூய்மை இந்தியாவாக மாற்ற வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிறார் சுரேஷ் சக்காரியா. நாட்டில் எங்கும் பரந்து விரிந்து இருக்கும் லஞ்ச-லாவண்யத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்கிற துடிப்போடு வேலை செய்கிறார் சமுத்திரக்கனி. இந்த மூவரும் தங்கள் லட்சியத்தை அடைந்தார்களா, இல்லையா என்பதுதான் படம்.
 கிராமத்து இளைஞன் வேடம் மகேஷுக்கு பொருத்தமாக இல்லையென்றாலும் முடிந்தவரை கேரக்டருக்குள் தன்னை பொருத்திக் கொள்கிறார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரி வேடத்துக்கு கம்பீரம் சேர்க்கிறார். குமரிக்கும் காஷ்மீருக்கும் எவ்வளவு தூரமோ அதுபோல சுரேஷ் சக்காரியாவுக்கும் நடிப்புக்கும். அழகு ஓவியமாக வரும் மித்ரா குரியன் நடிப்பு ஓ.கே. விவேக் காமெடியுடன் கருத்தும் சொல்லியவிதம் நன்று.
அலி மிர்ஷா இசையில் பாடல்களை ஒரே ஒரு முறை மட்டும்தான் கேட்க முடியும். சமூக அவலங்களைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு இடமளிக்காமல் ஒரு படத்தை கொடுக்க முன்வந்திருக்கிறார் இயக்குனர் விக்டர் டேவிட்சன்.
|