தண்ணீர்... தண்ணீர்...



நீரின்றி அமையாது உலகு என்பதுபோல், நீரின்றி உடலும் அமையாது. ஏனென்றால் மனித உடல் எடையில் 50 முதல் 75 விழுக்காடு நீரால் நிரம்பியிருக்கிறது. செல்களின் செயல்பாட்டில் இருந்து, தசை ஆரோக்கியம், கழிவுகள் வெளியேற்றம், ரத்த ஓட்டம் என உடலின் அனைத்து இயக்கத்துக்கும் தண்ணீரின் பங்கு அளப்பரியது.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டரை லிட்டர் தண்ணீரையாவது ஒருவர் கண்டிப்பாக குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். முறையாக தண்ணீர் குடிக்காமல் இருந்தால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.  சாதா நாட்களிலேயே இப்படி என்றால், கோடை காலத்தில் சொல்லவே தேவையில்லை. எனவே கோடை வெயிலில் நம் உடல் ஆரோக்கியம் பெற தண்ணீரின் தேவை அவசியமாகிறது. அவ்வாறு தண்ணீர் குடிப்பதால் நமக்கு என்னென்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.

*கோடைக் காலத்தில் வெப்பம் சுட்டெரிக்கும் என்பதால் உடலில் விரைவாக நீர் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய அளவிலான நீர் இழப்புகூட சோர்வு, எரிச்சல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். மூளை முதல் சிறுநீரகங்கள் வரை நன்றாக செயல்பட நீர் தேவைப்படுகிறது. நீங்கள் தண்ணீரை குடிக்காமல் இருக்கும் சமயத்தில் உடல் செயல்பாட்டின் சமநிலை பாதிக்கும். குறிப்பாக, போதுமான தன்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

*உமிழ்நீர் உற்பத்திக்கு தண்ணீர் தேவை. உமிழ்நீர் சுரப்பிகளின் செயல்பாடுகள் நன்றாக இருந்தால் உணவுகளை நன்றாக மென்று தின்பதற்கும் உயவுப்பொருளாக செயல்படும். சரியான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ளாதபோது, வாய் வறண்டுபோகும். மேலும், உமிழ்நீர் சுரக்கவில்லையென்றால் தொற்றுநோய் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

*கோடையில் உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருப்பதென்பது சவாலான விஷயமாகும். அதிக வெப்பம் காரணமாக உடலில் ஏற்படும் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படும். அப்போது, உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். தண்ணீரை சரியான அளிவில் எடுத்துக்கொள்ளும்போது உடல் வெப்பநிலை தொடர்ந்து சமநிலையில் இருக்கும்.

*மூட்டுகள் மற்றும் திசுகள் நன்றாக இயங்குவதற்கு தண்ணீர் பங்கு முக்கியமானது. தண்ணீர் உயவுப்பொருளாக செயல்படுவதால் மூட்டுகள் இயக்கம் நன்றாக இருக்கும். இல்லையென்றால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்பட்டு, கால்வலி, நரம்பு பிரச்சனைகளை எதிர்
கொள்வீர்கள்.

*உடலில் தேங்கியிருக்கும் கழிவுப் பொருட்கள் சிறுநீர், மலம் மற்றும் வியர்வை மூலம் மட்டுமே வெளியேறுகிறது. அந்த கழிவுப் பொருட்கள் உடலில் தேங்காமல் வெளியேற வேண்டுமென்றால் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் கழிவுப் பொருட்கள் தேங்க ஆரம்பித்தால் உடல் உபாதைகளை சந்தித்து, மருந்துகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

*நீர் இழப்பால் ஏற்படும் மிக முக்கிய பிரச்சனை மலச்சிக்கல். ஏனென்றால் உடலுக்கு தேவையான நீர் கிடைக்காதபோது குடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு கடினமாகும். அப்போது, உணவு கழிவுப் பொருட்கள் இயல்பாக வெளியேற முடியாமல் குடலில் கடினமாக சிக்கிக்கொள்ளும். இதனை தவிர்க்க தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

*உடலுக்குள் தண்ணீர் சரியான அளவில் இருக்கும்பட்சத்தில் உணவில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் கரைக்கப்
படுகின்றன. அவை செரிமானத்தை ஊக்கப்படுத்தி, உணவில் இருக்கும் சத்துகளை உறிஞ்சுவதற்கு உதவியாக உள்ளது. மேலும், அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்களை எடுத்துச் செல்வதில் தண்ணீரின் பங்கு இன்றியமையாதது.

*குடிநீர் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு சேர்க்க உதவுகிறது.

*போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரக கற்கள் உருவாகாது. சிறுநீர் பாதை தொற்றுகளில் இருந்து விடுபடுவதுடன், உயர் ரத்த அழுத்த பிரச்சனைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.

*உடல் எடையை சரியான அளவில் நிர்வகிப்பதில் தண்ணீர் முதன்மையாக உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. வளர்ச்சிதை மாற்றத்தை
அதிகரித்து, உடலின் ஆற்றல் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

*நீரிழப்பினால் சரும பாதிப்பு மற்றும் தோல் சுருக்கம் உள்ளிட்டவை ஏற்படும். மந்தமாக இருப்பதுபோல் தோன்றுவீர்கள். போதுமான அளவு தண்ணீரை எடுத்துக்கொண்டால் தோலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.வறண்ட சருமம், உலர்ந்த உதடுகள் ஆகியவை நீங்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறிகளாகும்.

குளிர்ந்த நீரை எடுத்துக்கொள்வதுடன் வெதுவெதுப்பான நீரை குடிக்கலாம். மேலும், தண்ணீரை உறிஞ்சிக் குடிப்பது நல்லது. கோடையில் கிடைக்கும் தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். கீரை, சூப் உள்ளிட்டவை உடலுக்கு நீரேற்றத்தை கொடுப்பதுடன் ஊட்டசத்து மிக்க உணவாகவும் அமையும்.

அன்னம் அரசு