கொரோனா 2வது அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான மக்களுக்கு உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் தாக்கம் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசின் முதல் அலை ஓய்ந்த நிலையில் தற்போது 2வது அலை வீசத் தொடங்கி உள்ளது. இது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக மருத்துவ வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.
கொரோனாவின் 2வது அலை
உண்மையிலேயே 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறதா என்பது குறித்து சென்னையில் உள்ள நியூபர்க் டயக்னாஸ்டிக்சின் மைக்ரோபயாலஜிஸ்ட் ஆலோசகரும் டாக்டருமான உமா செந்தில்குமார், குழந்தைகளை அந்த பாதிப்பிலிருந்து பாதுகாப்பது எப்படி என்பது குறித்தும் விரிவான விளக்கம் அளித்தார்.
“கொரோனா வைரஸ் முதல் அலையைக் காட்டிலும் தற்போது 2வது அலை குழந்தைகளுக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று எங்களுக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. இது சம்பந்தமாக ஏராளமான தரவுகள் எங்கள் ஆய்வகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த ஆய்வுகளை நாங்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் துவங்கி நடத்தி வருகிறோம். இதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாத துவக்கத்தில் குழந்தைகளுக்கு 10 முதல் 11 சதவீதம் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பானது கடந்த 10 நாட்களில் சற்று அதிகரித்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த பாதிப்பானது 1 முதல் 15 வயது உள்ள குழந்தைகளுக்கு அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த தொற்று தற்போது குழந்தைகள் இடையே அதிக அளவில் பரவக் காரணம் அவர்களுக்கு இந்த நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததே ஆகும். அவர்கள் வெளியே செல்லும்போதும், விளையாடும்போதும் முகக்கவசம் அணிவது இல்லை. விளையாடி முடித்து வீட்டிற்கு வந்த உடன் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வதும் இல்லை. மேலும் ஊரடங்கு முடிந்த நிலையில் அவர்கள் தங்கள் பெற்றோருடன் மால்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்கிறார்கள்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். அப்போது அவர்கள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. முகக்கவசம் அணிவது இல்லை, சமூக விலகலை கடைபிடிப்பதில்லை, சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வதில்லை. இதன் காரணமாக இது குழந்தைகளிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கொரோனா முதல் அலையின்போது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எந்தவிதமான அறிகுறிகளும் தெரியவில்லை. தற்போது 2வது அலையில் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இல்லாமல் சற்று வித்தியாசமாக வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
இந்தநிலையில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு அது குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ் முற்றிலும் அழிந்து போகவில்லை என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்வதோடு, அவர்களை அரசு வகுத்துள்ள விதிமுறைகளை அதாவது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் வெளியே சென்று வந்தவுடன் கைகளை சுத்தமாக கழுவுதல் போன்ற விழிப்புணர்வை பெற்றோர் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
முடிந்த வரை பொது இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. அப்படி செல்லும்போது போதிய பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பெற்றோரும் குழந்தைகளும் கடைபிடிக்க வேண்டும்.மேலும் துரித உணவுகளை குழந்தைகள் தவிர்க்க வேண்டும். உடலுக்கு தேவையான வைட்டமின்கள், பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் போன்றவற்றை எடுத்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்க உதவும்.
குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் அது குறித்து அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் தங்களை வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே அதன் தாக்கத்தில் இருந்து எளிதாக விடுபடலாம். தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு துவக்கி இந்தியா முழுவதும் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி தொடர்பாக எந்தவிதமான நடைமுறைகளும் தற்போது மேற்கொள்ளப்படவில்லை. அது தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் வெளிவந்த பின் அவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து முடிவு செய்யப்படும்.
மேலும், ஒரு முறை கொரோனா பாதித்தவர்களுக்கு மீண்டும் கொரோனா வராது என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அவர்கள் கட்டாயம் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அவர்களுக்கு மீண்டும் கொரோனா வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. காய்ச்சல் மற்றும் சளி என்று வரும் குழந்தைகளை, குழந்தைகள் நல மருத்துவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
அப்போதுதான் அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா அல்லது சாதாரண காய்ச்சலா என்பது பற்றி தெரிய வரும். அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது மட்டுமே நம்மையும் நமது குழந்தைகளையும் கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்க சிறந்த வழிமுறையாகும்” என்று தெரிவித்தார் டாக்டர் உமா செந்தில்குமார்.
ஜெசி
|