எவரெஸ்ட்டில் டிராபிக் ஜாம்!



இருபதாம் நூற் றாண்டின் ஆரம்பம். உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டின் உச்சியை அடைய வேண்டும் என்பது ஒவ்வொரு மலை யேற்ற வீரரின் பெருங்கனவு. ஐம்பது வருடங்களாக, நூற்றுக்கணக்கான மலையேற்ற வீரர்கள் முயன்றும் யாராலும் அடைய முடியாத கனவாகவே இருந்து வந்தது எவரெஸ்ட்.

இந்நிலையில் 1953-ம் வருடம், மே மாதம் 29-ம் தேதி அன்று சரியாக காலை 11.30 மணி அளவில் நியூசிலாந்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் எட்மண்ட் ஹிலாரியும், நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நார்கேயும் முதன் முதலாக எவரெஸ்ட்டின் உச்சியை அடைந்து வரலாற்றுச் சாதனை புரிந்தனர். உலகமே அவர்களைக் கண்டு வியந்தது.

‘டைம்’ பத்திரிகை வெளியிட்ட ‘20ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள்’ பட்டியலில் டென்சிங்கும் இடம்பிடித்தார். இதற்குப் பிறகு ஆயிரக்கணக்கானோர் எவரெஸ்ட் உச்சியை அடைந்துவிட்டாலும் எட்மண்ட், டென்சிங்கின் சாகசப் பயணம் இன்றும் தனித்து நிற்
கிறது. தவிர, நேபாளத்தைச் சேர்ந்த காமி ரிடா என்பவர் 24 முறை எவரெஸ்ட்டின் உச்சியை அடைந்து ‘அதிக முறை எவரெஸ்ட்டின் உச்சியைத் தொட்டவர்’ என்ற உலக  சாதனையையும்  படைத்துவிட்டார்.  இப்போது 25-வது முறைக்காக காத்திருக்கிறார் காமி.

இத்தனைக்கும் எவரெஸ்ட மீது ஏறுவது அவ்வளவு சுலபமான காரியமில்லை. உடல் நரம்புகளை உறைய வைக்கும் கடுங்குளிர், இயல்பாக மூச்சு விடவே முடியாத பனிச் சூழல், ஆக்சிஜன் குறைபாடு, உயிருக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாத நிலை என பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே எவரெஸ்ட்டைப் பற்றி நினைக்க வேண்டும்.

இதுபோக எவரெஸ்ட் மீது ஏற நேபாள அரசிடம் முறையாக அனுமதி வாங்க வேண்டும். அனுமதிக் கட்டணம் மட்டுமே எட்டு லட்ச ரூபாய். தவிர, நமக்கு வழிகாட்டி யாக வரும் ஷெர்பாக்கள், சுமை தூக்குபவர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், உணவு என்று  குறைந்தபட்சம் 30 லட்ச ரூபாயாவது கையில் இருக்க வேண்டும்.

நேபாளத்தில் உள்ள இமயமலையின் பல்வேறு பகுதிகளில் நிகழும் மலையேற்றத்தின் மூலமாக மட்டுமே வருடத்துக்கு  சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நேபாள அரசுக்கு வருமானமாகக் கிடைக்கிறது.இதன் மூலம் கிடைக்கும் நிதியே நேபாளத்தில் முக்கிய வருமானமாகும்.
‘‘வருமானம் ஈட்ட நிறைய பேருக்கு அனுமதி வழங்கி வருகிறது. அவர் களில் பலர் மலையேற்ற அனுபவம் இல்லாத வர்கள்...’’ என்று நேபாள அரசின் மீது பலர் குற்றச் சாட்டை வைத்து வரு கின்றனர்.

ஆனாலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்காக நேபாள அரசிடம் அனுமதி வேண்டி விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே இரண்டாயிரத்துக்கும் அதிகமாக இருக்கும். இதில் 350 பேருக்கு சென்றமாதம் அனுமதி வழங்கியது நேபாள அரசு. மே 14 முதல் 21 வரை அவர்கள் பயணம் மேற்கொண்டனர்.

அத்தனை பேரும் ஒரே நேரத்தில் மலையின் மீது ஏறியதால் உச்சியை நெருங்கும்போது டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. மும்பை லோக்கல் ரயி லில் ஏறுவதற்காக பயணிகள் காத்திருப்பதைப்போல எவரெஸ்ட்டின் உச்சியை அடைய வரிசையாக வீரர்கள் காத்திருக்கின்றனர். இதனால் பயண நேரம் அதிகரிப்பதோடு உயிரிழப்புகள் கூட நிகழ்கின்றன. சமீபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பேர் இந்தியர்கள். இந்த உயிரிழப்பை மறுத்துள்ளது நேபாள அரசு.

அத்துடன் அதிக மான நேரம் வரிசையில் காத் திருக்கும்போதும், உச்சியிலிருந்து கீழே திரும்ப இறங்கும்போதும்  மலையேற்ற வீரர்களுக்கு ஆக்சிஜன் பற்றாற்குறை ஏற்பட வாய்ப்புண்டு. தவிர, நிறைய பேர் செல்வதால் ஆக்சிஜன் சிலிண்டர்கள் திருடு போகின்றன. இந்த மாதிரியான ஒரு பயணத்தில் ஆக்சிஜனைத் திருடுவது என்பது கொலை செய்வதற்குச் சமம்.

அத்துடன் சிகரத்தை அடைய ஏராளமானோர் வரிசை கட்டி நிற்பதால் மூச்சுத்திணறல், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க வேண்டிய சூழலும் நிலவு கிறது. இதுபோக மக்கள் குப்பைகளையும் மலையில் நிறைத்துவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும், மலையேற்ற அனுபவம் இல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது, குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நேபாள
அரசிடம் இணைய வாசிகள் வைத் துள்ளனர்.ஒரு காலத்தில் சாகசப் பயணமாக இருந்தது இன்று சோகமாக மாறிவிட்டது.

த.சக்திவேல்