சிபி



வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதோடு, நேர்மறையான எனர்ஜியையும் நமக்குள் விதைக்கிறது சிபியின் வாழ்க்கை. கேரளாவைச் சேர்ந்த இந்தப் பெண்மணி கோகுலம் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. எழுத்து மற்றும் ஓவியத்தின் மீது தீராத காதல் கொண்டவர் சிபி. புற்று நோய்க்கான சிகிச்சையின் போது அவரின் பார்வைத் திறன் குறைய ஆரம்பித்தது. ஏறக்குறைய 70 % பார்வையை இழந்துவிட்டார்.

ஆனால், அவர் எழுதுவதையும் வரைவதையும் எதனாலும் தடுக்க முடியவில்லை. மனதுக்குள் இருப்பதையெல்லாம் சிபி சொல்ல, அவரின் நண்பர்களில் ஒருவர் அதை எழுதுவார். ஓவியம் வரைவதற்குத் தேவையான வண்ணங்களை சிபி சொல்ல, நண்பர்களில் ஒருவர் வண்ணத்தை எடுத்துத் தருவார். சிபி ஓவியம் வரைவார். கடந்த வாரம் சிபி எழுதிய புத்தகம் வெளியான அன்று, அவரின் ஓவியங்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.