வன உயிர்களைப் பாதுகாப்பதற்காக நான் பூமியில் பிறந்துள்ளேன்!



முத்தாரம் நேர்காணல்

உலகப் புகழ்பெற்ற வன உயிர்களின் காதலர் ஸ்டீவ் இர்வின். காட்டுயிர்களைப் பாதுகாப்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த இயற்கை ஆர்வலர்.  இவரின் ‘The Crocodile Hunter’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வை உண்டாக்கியது.
இர்வினுக்கு முன்பு  யாரும் இப்படியொரு நிகழ்ச்சியை நிகழ்த்திக் காட்டியதில்லை. நிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தை எல்லாம் வன உயிர்களின் பாதுகாப்பிற்காகவே செலவிட்டவர்.

ஆஸ்திரேலியாவில் பிறந்த ஸ்டீவின் பெற்றோர்களும் வன உயிர்களின் காதலர்கள்தான். 6 வயதிலேயே மலைப்பாம்புகளுடன் விளையாடத் தொடங்கி விட்டார் ஸ்டீவ். தந்தையின் உதவியுடன் 9 வயதில் முதலைகளைக் கையாள ஆரம்பித்த ஸ்டீவை ‘முதலைகளின் காதலன்’ என்றே  அவரின் ரசிகர்கள் அழைக்கின்றனர்.

ஆழ்கடலைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தை எடுக்கும்போது திருக்கை மீன் தாக்கி தனது 44-வது வயதில் இறந்துவிட்டார் ஸ்டீவ் இர்வின். கடந்த பிப்ரவரி 22 அன்று ஸ்டீவின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக கூகுள் தனது முகப்பு பக்கத்தில் அவரின் படத்தை வெளியிட்டு கௌரவித்தது. அவருடைய சிந்தனைகள் இன்றைக்கும் தேவையானது. ஸ்டீவ் இறக்கும் முன்பு கொடுத்த நேர்காணலின் சிறு பகுதி இது.

முதலைகளைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள்...

முதலைகள் பழகுவதற்கு ரொம்பவே சுலபமானது. அவை உங்களைக் கொன்று சாப்பிட்டு விடும். ஆனால், மனிதர்கள் கடினமானவர்கள். அவர்கள் முதலில் ஒரு நண்பனைப் போல பாவனை செய்வார்கள்.

இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்த பூமி நமக்குச் சொந்தமில்லை. இந்த பூமியில் நாம் வசிக்கிறோம். அவ்வளவுதான். நம்மைப் போலவே இந்த பூமியில் வன உயிரினங்களும் வசிக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பது என்பது நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதாகும். ஆனால், உண்மையில் வன உயிர்களைப் பாதுகாக்காமல் அவற்றை அழித்து வருகிறோம்.

மரணம் பற்றிய பயமில்லையா?

மரணம் பற்றி ஒருபோதும் நான் பயப்படவில்லை. வன உயிர்களைப் பாதுகாப்பதற்காக நான் பூமியில் பிறந்துள்ளதாக அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார். என் வாழ்க்கையில் ஒரு முதலையையோ அல்லது ஒரு கோலா கரடியையோ பாதுகாத்தாலே எனக்குப் போதும். பிறகு நிம்மதியாக இறப்பேன்.

வன உயிர்களின் மீதான காதலுக்குக் காரணம்?

என் பெற்றோர்கள்தான் முழுமுதற் காரணம். நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்குள் முதலைகளும், பாம்புகளும் சுற்றிக்கொண்டிருக்கும்.  நான் அவற்றோடு சேர்ந்துதான் வளர்ந்தேன்.  நான் வளர்ந்த மாதிரிதான் என் குழந்தைகளையும் வளர்க்கிறேன். இந்த வாழ்க்கை என் பெற்றோர்கள் கொடுத்த பரிசு.