மூளை நோய்களைக் கண்டறியும் நவீன ஸ்கேன்



மனித உடல் உறுப்புகளில் விந்தையானது மூளை. செயற்கைக் கால், செயற்கைக் கை, செயற்கை இதயம், செயற்கை சுவாசக் கருவி என்றெல்லாம் வந்துவிட்டது. ஆனால், செயற்கை மூளை என்று ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காரணம், மூளையைப் பற்றி நம்மால் இன்னமும் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான்.

சராசரியாக ஒன்றரை கிலோ எடையுள்ள மூளை, தலையில் கபால எலும்புகளால் மூடப்பட்டு பத்திரமாக உள்ளது. பெருமூளை, சிறுமூளை, மத்திய மூளை, தலாமஸ், ஹைப்போதலாமஸ், பான்ஸ், முகுளம் என்று மூளையில் பல பகுதிகள் உள்ளன. கை, கால் அசைவுகளில் தொடங்கி, பேசுவது வரை உடலின் பல இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும் பெருமூளை யின் பணி. மனிதருக்கே உரித்தான சிந்தனை சக்தி, ஞாபக சக்தி, பகுத்தறிவு, ஆராய்ச்சி போன்றவை பெருமூளையின் கட்டுப்பாட்டில் உள்ளன. பார்ப்பது, கேட்பது, வாசனையை நுகர்வது ஆகிய சிறப்புப் புலன் உணர்வுகளை உணர்ந்து சொல்வதும் இதுவேதான். மேலும் இது வலது, இடது என இரு பிரிவுகளாக உள்ளது. உடலின் இடது பகுதியை வலது பெருமூளையும் வலது பகுதியை இடது பெருமூளையும் கட்டுப்படுத்துகின்றன.

தலாமஸ், உணர்ச்சிகளைத் தொகுத்தும் பகுத்தும் உணரக் கூடிய பகுதியாக செயல்படுகிறது. பெருமூளைக்குச் செல்ல வேண்டிய எல்லா செய்திகளையும் உள்வாங்கிப் பதப்படுத்தி அனுப்புவது இதன் பணி. ஹைப்போதலாமஸில் பசி, தாகம், உறக்கம், உடல் வெப்பம், மகிழ்ச்சி, கோபம், பயம் போன்றவற்றின் கட்டுப்பாடு உள்ளது. தசைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி, உடல் சமன்பாட்டைக் கவனித்துக்கொள்வது, சிறுமூளை.

சுவாசம், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், விழுங்குதல், இருமல், தும்மல் போன்றவற்றுக்கான கட்டுப்பாட்டு மையங்கள் முகுளத்தில் உள்ளன. மூளையின் தோகை போல முதுகுத்தண்டுவடம் அமைந்துள்ளது. இது முதுகெலும்புத் தொடருக்குள் பாதுகாப்பாக உள்ளது; முகுளத்தில் தொடங்கி இடுப்பில் முடிகிறது. மூளையிலிருந்து 12 ஜோடி நரம்புகளும் தண்டுவடத்திலிருந்து 31 ஜோடி நரம்புகளும் புறப்பட்டு, உடல் முழுவதும் பரவியுள்ளன. உடலின் பல பகுதிகளிலும் நடைபெறுகின்ற பல்வேறு செயல்களுக்குக் காரணமாக இருப்பவை இந்த நரம்புகளே.

மூளையிலும் சரி, நரம்பிலும் சரி கோடிக்கணக்கான நியூரான்கள் உள்ளன. தரைக்குள் வேர்கள் பின்னிப் பிணைந்து இருப்பது போல் மூளைக்குள் நியூரான்கள் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. இவைதான் மூளைக்கும் உடல் பகுதிக்கும் இடையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவுகின்றன. ஒவ்வொரு நியூரானிலும் தகவல் அனுப்பும் பகுதி என்று ஒன்று உண்டு. இதற்கு ஆக்ஸான் என்று பெயர். இதுபோல் தகவலைப் பெறும் பகுதி என்று ஒன்று உண்டு. அதற்கு டென்ட்ரான் என்று பெயர்.

தகவல் பரிமாற்றத்தின்போது இந்த ஆக்ஸானும் டென்ட்ரானும் இணைந்திருக்கிற பகுதியில் மிகச் சிறிய அளவில் மின்னோட்டம் ஏற்படும். இது நியூரான்களுக்கு இடையில் அலை வடிவில் நகரும். இதை அளந்தோமானால், மூளையின் செயல்பாட்டை அறியலாம். இந்த அடிப்படையில்தான் இ.இ.ஜி., எனும் பரிசோதனைக் கருவி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், பெட் ஸ்கேன் என்று பல பரிசோதனைக் கருவிகள் களத்துக்கு வந்தன. இவை முறையே எக்ஸ் கதிர்வீச்சு, காந்த எதிரலைகள், கதிர்வீச்சு ஐசடோப் போன்றவற்றைப் பயன்படுத்தி மூளை நோய்களைக் கண்டுபிடித்தன. இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட்,  மேக்னெட்டோ என்செபலோகிராபி (Magneto encephalography  MEG scan). சுருக்கமாக எம்.இ.ஜி ஸ்கேன்.

மூளை பாதிக்கப்படும்போது வலிப்பு, அல்ஸீமர் நோய், பார்க்கின்ஸன் நோய், மூளைக் காய்ச்சல், மூளையில் கட்டி, ரத்த ஓட்டம் குறைந்து பக்கவாதம் ஏற்படுவது என்று பல நோய்கள் நம்மைத் தாக்கும். தலையில் அடிபட்டாலும் மூளைக்குப் பாதிப்பு உண்டாகும். இந்த பாதிப்புகளைத் தெரிந்துகொள்ள எம்.இ.ஜி. ஸ்கேன் உதவுகிறது.
எப்படி?

நியூரான்களில் மின்னோட்டம் ஏற்படும்போதெல்லாம் அவ்விடத்தில் காந்தப்புலமும் (விணீரீஸீமீtவீநீ யீவீமீறீபீ) உண்டாவது மூளையில் இயல்பாகவே நிகழ்கின்ற உடலியல் செயல்பாடு. இந்தக் காந்தப்புலத்தை அளப்பதன் மூலம் மூளையில் குறிப்பிட்ட அந்தப் பகுதி எவ்வாறு அமைந்துள்ளது, எப்படிப் பணி செய்கிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம். இதுதான் இந்தப் பரிசோதனையின் அடிப்படைத் தத்துவம். பயனாளியின் தலையில் 3 மின்சாரக் காயில்கள் உள்ள ஒரு வட்ட வடிவ பெல்ட்டை மாட்டி, ஸ்கேன் கருவிக்குள் அனுப்புவார்கள். ஒரு ஹெல்மெட் போன்ற பகுதிக்குள் தலையை நுழைத்துக்கொள்ள வேண்டும்.

இதில் உள்ள மிகக் கூர்மையான சென்ஸார்கள், மூளைக்குள் உருவாகின்ற காந்தப்புலங்களை பகுதிவாரியாக கிரகித்து, இக்கருவியோடு இணைந்துள்ள கம்ப்யூட்டருக்கு அனுப்பி வைக்கும். அங்கு ஒரு மேப் வரையப்படும். இந்த ரிசல்ட்டை ஏற்கனவே கம்ப்யூட்டரில் பாதுகாக்கப்பட்டிருக்கும் மூளையின் நார்மல் எம்.ஆர்.ஐ. ஸ்கேனோடு ஒப்பிட்டுப் பார்த்து, முடிவாக ஒரு ரிசல்ட் கிடைக்கும். இதில் மூளையின் அமைப்பும் பணியும் தெரியும். அமைப்பில் மாறுதல் தெரிந்தால் அல்லது பணியில் கோளாறு இருந்தால் அதை வைத்து அடுத்த சில நிமிடங்களில் மூளை நோயைக் கணிக்கவும் முடியும்.

இதன் சிறப்பம்சம், மூளையில் ஒரு மில்லிமீட்டர் அளவுக்குக் குறைவாக கட்டி இருந்தால்கூட தெளிவாகத் தெரிவித்து விடுகிறது. சி.டி ஸ்கேனில் உள்ளது போன்று இதில் எக்ஸ் கதிர்வீச்சு இல்லை. இதனால் இப்பரிசோதனையை எத்தனை முறை செய்துகொண்டாலும் உடலுக்கு ஆபத்தில்லை. பெட் ஸ்கேனில் ஐசடோப் கதிர்வீச்சுப் பொருளை ஊசி மூலம் செலுத்தினால் மட்டுமே நோயைக் கண்டுபிடிக்க முடியும். இந்தக் கதிர்வீச்சுப் பொருள் இதற்குத் தேவையில்லை.

ஆகவே இதுவரை உதவிய டெக்னாலஜிகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது இது. இந்தப் பரிசோதனையின்போது பயனாளிக்கு வலியேதும் இல்லை. பக்க விளைவும் இல்லை. மூளையில் கட்டி அல்லது ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கும், வலிப்பு நோயாளிகளுக்கும் இது மிகப் பெரிய வரப்பிரசாதம். குறிப்பாக, மருந்துகளுக்குக் கட்டுப்படாத வலிப்புக்குக் காரணம் கண்டுபிடிக்க இது நன்றாக உதவுகிறது. இதன் மூலம் நோயாளிக்குத் தகுந்த சிகிச்சை கொடுத்து வலிப்புக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதற்கும் வழிவகுக்கிறது.
 
(இன்னும் இருக்கு)

டாக்டர் கு.கணேசன்