இலையில் சோறு போட்டு...



இயற்கையின் அதிசயம்

வாழை இலை என்பது உணவை உண்பதற்கான ஒரு பொருள் மட்டுமே அல்ல. அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. வாழை இலையில் உணவு உண்ணும்போது நோய்கள் வராமல் தடுக்கப்படுவதுடன், பல நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். இதை நவீன ஆராய்ச்சிகளும் ஒப்புக்கொண்டு வாழை இலை குறித்து வியக்கிறது.

* வாழை இலையில் இருக்கும் Chlorophyll என்ற வேதிப்ெபாருள் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இது உணவை சீக்கிரமாக செரிமானமடையச் செய்வதுடன் குடல் புண்களையும் ஆற்றுகிறது.

* உணவில் இருக்கும் நச்சுக்களும்கூட வாழை இலையால் சாப்பிடும்போது நீங்கிவிடும். இதனால்தான் ஆன்டி பாக்டீரியல் குணம் கொண்டது வாழை இலை என்கிறார்கள்.

* பழங்காலப் பேரரசர்களும், முகமதிய மன்னர்களும் வாழை இலையை முக்கிய மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். உயிரணுக்கள் அதிகரிக்க பிசைந்த வாழை இலையை உடலில் தடவிக் கொள்வது நடைமுறையில் இருந்திருக்கிறது. இதனால் உயிரணுக்கள் அதிகரிப்பது மட்டுமன்றி, சருமமும் ஆரோக்கியம் பெறுகிறது, உடல் பருமனும் குறைகிறது என்று நம்பினார்கள்.

* அரைத்த வாழை இலையை உடம்பில் தேய்த்து குளித்தால் Allantoin மற்றும் Antioxidants சத்து கிடைக்கும். சருமம் பளபளப்பாக இருக்கும். உடம்பில் அல்லது முகத்தில் உள்ள சுருக்கங்கள் கரும்புள்ளிகள், தோல் எரிச்சல் குணப்படுத்தும், முகப்பரு மற்றும் பருக்கள் நீங்கி மேனி ஈரப்பதமாகவும், மென்மையாகவும் தோற்றம் கொடுக்கும்.

* கடுமையான வயிற்று போக்கு உள்ளவர்கள் வாழை இலைச்சாறு ஒரு  வேலை எடுத்துக்கொண்டால் Allantoin மற்றும் Polyphenols சத்து கிடைத்து நலம் பெறுவர்.

* காய்ச்சல் ஏற்பட்டவர்கள் வாழை இலைச்சாற்றை டிக்காக்‌ஷனாக வைத்து குடிக்கலாம். இதனால் Allantoin என்ற  ஊட்டச்சத்து கிடைத்து காய்ச்சல் நீங்கும்.

* உணவு உண்ணப் பயன்படுத்துவது போலவே சருமம் தொடர்பான பல பிரச்னைகளுக்கும் வாழை இலையைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக  தோலழற்சி(சரும நோய்கள்) ரத்த இழப்பு நோய்களுக்கும்  மருந்தாக பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது.

* வாழை இலையில் சாப்பிடுபவர்களுக்கு Antioxidants கிடைப்பதால் நோய்  எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதனால் நவீன வாழ்க்கையின் தாக்கத்தால்  ஏற்படும் புற்றுநோய் வராமலும் தவிர்க்கலாம்.

* இருமல், சுவாச பிரச்னை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கு, முகப்பரு, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் வாழை இலைச்சாற்றினை ஜூஸாகக் குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* ஆயுர்வேதத்தில் வாழை இலை குளியல் நச்சு மற்றும் கொழுப்பு நீக்கும் சிகிச்சையாக செய்யப்படுவது மிகவும் பிரபலமாக இருக்கிறது.

* வாழை இலையை அரைத்துத் தலையில் தேய்த்து 10-15 நிமிடம் ஊற வைத்தபின் குளிர்ந்த நீரில் குளித்தால் தலை முடி பார்ப்பதற்கு அழகாகவும் பளபளப்பாகவும் பொலிவு தரும்.

* தொண்டைப் புண் (டான்சில்) உள்ளவர்கள் வாழை இலைச்சாறு ஒரு வேளை குடித்தால் தொண்டைப் புண் விரைவில் குணமாகும்.

* இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் மருத்துவர்கள் எலும்புருக்கி நோய்,  குடல் நோய்க்கு மருந்தாக வாழை இலையை பரிந்துரை செய்கின்றனர். ஜெர்மனி  மருத்துவர்கள் மூச்சுக்குழாய் அழற்சி, ரத்தப்போக்கு, சளி, இருமல் ஆகிய  நோய்களுக்கு அருமருந்து என வாழை இலையைப் பரிந்துரை செய்கின்றனர்.

* காயங்கள் அதனால் ஏற்படும் எரிச்சலுக்கு கட்டு போட வாழை இலை பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று இலைகள் வைத்து கட்டுப்போட்டால் காயங்கள் ஆறும், எரிச்சலும் குணமாகும். இதனால்தான் நெருப்பால் காயம்பட்டவர்களை வாழை இலையில் படுக்க வைக்கின்றனர்.

தொகுப்பு : அ.வின்சென்ட்