அறுவைசிகிச்சை செய்ய உதவும் ஒலி கிடுக்கி



புதுமை

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற 96 வயது ஆர்தர் ஆஷ்கின் 1970-ல் ஒளியை வைத்து செய்த ஆய்வு முடிவுகளை, ஒலியை வைத்தும் சாதிக்க முடியும் என்று ஸ்பெயினில் உள்ள நவாரே பொதுப் பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனிலுள்ள பிரிஸ்டால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

வெறும் ஒலியின் ஆற்றலால் நினைத்தபடி பொருட்களை அசைக்கவும், அந்தரத்தில் நிறுத்தவும் உதவும் ஒலிக்  கிடுக்கியை இந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஐநூறு மிகச்சிறிய ஒலிப் பெருக்கிகளை ஒரு சட்டகத்தில் வைத்து இடைப்பட்ட காற்றுவெளியில் ஒலி அலைகளை செலுத்தி, நுண்ணிய பொருட்களை அப்படியே நிறுத்தவும், நகர்த்தவும் இந்த  ஒலிக் கிடுக்கியால் முடிகிறது.

ஒலிக் கிடுக்கியில் உள்ள பல நூறு ஒலிப் பெருக்கிகள் மனிதனின் செவிகளால் உணர  முடியாத 40 கிலோ ஹெர்ட்ஸ் அலைவரிசையில் ஒலியைக் கிளப்பி பொருட்களை அந்தரத்தில் ஆட்டுவிக்கின்றன. ஒலிக்கிடுக்கி கருவியை விரிவுபடுத்தி, தொலைக்காட்சித் திரை போன்ற கருவியை உருவாக்கி அதில் முப்பரிமாணத்தில் காட்சிகளை உருவாக்க முடியும்.

இதில் ஒலி அலைகளை உடலின் குறிப்பிட்ட பகுதியில் செலுத்தி திசுக்களை அசைக்கவும், துண்டித்து அகற்றவும் முடிகிறது. இதனால் கத்தி இல்லாமல் நோயாளியின் உடலுக்குள் எந்த கருவியையும் செலுத்தாமல் அறுவை சிகிச்சையை செய்ய முடியும். மேலும் எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் இந்த ஒலிக் கிடுக்கி தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

- கெளதம்