பெண்பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு சில ஆலோசனைகள்!



* ஆலோசனை

பெண்களுக்கான கல்வி, உடல்நலம், அதிகாரமளித்தல், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, வளர்ச்சிக்கு முதலிடம் கொடுத்து செயல்பட்டுவருகிறது We Can Voice for women FOUNDATION. இந்த அறக்கட்டளையின் செயலாளராக உள்ள ஊர்வசி பெண்களுக்கு எதிரான மனோநிலையை மாற்றுவதற்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

 சமீபகாலமாக சிறுமிகள், பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது அதிகமாகிவிட்ட சூழலில் ‘‘மிக நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள் மூலமே பெண் குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுகிறது. யாரை நம்பியும் குழந்தைகளை விட்டுச் செல்வது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்’’ என்று சொல்லும் இவர் பெண்பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்…

பெண்பிள்ளைகளின் பெற்றோர் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை!

*  தாய், தந்தையை தவிர யாரும் குழந்தைகளை தீண்ட அனுமதிக்கக்கூடாது.
* குழந்தைகள் தனியாக இருக்கும் சூழலை ஏற்படுத்தக்கூடாது.
* மிகவும் தெரிந்தவர்கள், உறவினர்கள்தானே என்று யாரிடமும் பெற்றோர் இன்றி குழந்தைகளை தனியே அனுப்புவதை பலமுறை பரிசீலனை செய்து முடிவெடுங்கள்.
* பள்ளியிலிருந்து அழைத்து வருபவர் மூன்றாம் நபராகவோ, தனியார் வாகன ஓட்டிகளாகவோ இருந்தால் அவர்களை கண்காணியுங்கள். அவர்களின் முழு விவரங்களை சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
* குழந்தைகள் பயிலும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் குணங்களையும், நடவடிக்கைகளையும் அறிந்து
வைத்துக்கொள்ளுங்கள்.
* பள்ளி சென்று வீடு திரும்பும் குழந்தைகளிடம் பள்ளியில் நடந்த விஷயங்களை மனம் விட்டு பேசி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.
* குழந்தைகளை மிரட்டி விஷயங்களைத் தெரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள்.
* குழந்தைகளோடு அதிகமாக நேரத்தை செலவிடுங்கள். ஏனென்றால் பல இடங்களில் பாசம் கிடைக்காத பிள்ளைகள் அந்நியர்களால் சுலபமாக ஈர்க்கப்படுகிறார்கள். பெற்றோரின் அன்பு, அரவணைப்பு, பாசம் இல்லாத குழந்தைகளே ஆபத்து வளையத்திற்குள் அதிகம் சிக்க வாய்ப்பு உள்ளது.
* ஆசை வார்த்தை கூறி அன்பாகப் பேசும் யாருடனும் குழந்தைகளை பழக அனுமதிக்கக்கூடாது.
* தொலைக்காட்சித் தொடர்கள், மொபைல் போன்களை குழந்தைகளுக்கு நல்ல அறிவை வழங்கும்பட்சத்தில் பார்க்க அனுமதிக்கலாம்.
* குழந்தைகள் வளரும் பருவத்தில் இருப்பதால் அதிகமாக கேள்வி கேட்பார்கள். கேள்வி கேட்பதால் எரிச்சலடைந்து எரிந்து விழவேண்டாம். கேள்விகளுக்கு பதில் அளிக்கப் பழகுங்கள்.
* குழந்தைகள் நிறைய பேசுவார்கள், பேசும்போதுதான் அவர்களின் மனநிலையை, அவர்களின் அனுபவங்களை, பிரச்னைகளை அறிய முடியும். குழந்தைகளை பேச அனுமதியுங்கள்.
* சில குழந்தைகள் பேசுவதே அரிதாக இருக்கும். தனிமையை அதிகம் விரும்புவார்கள். ஆண்களை கண்டாலே அச்சப்படுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளிடம் தனிக்கவனம் செலுத்தி கண்காணியுங்கள். அவர்களோடு இயல்பாக நடக்கப் பழகுங்கள்.
* பிரச்னைகளை சந்திக்கும் குழந்தைகள் அதிகம் பயப்படுவார்கள். பயப்படும் குழந்தைகள் ஏதோ பிரச்னையை, தாக்குதலை சந்தித்திருக்க வாய்ப்புகள் அதிகம். எங்கிருந்து பயம் தொடங்கியது என்று கண்டறிந்தால் பிரச்னையை எளிதில் கண்டறிந்துவிடலாம். தேவையெனில் மனநிலை நிபுணர்கள் உதவியை நாடலாம்.
* குழந்தைகளுக்கு பிரச்னைகள் ஏற்பட்டிருந்தால் மூடிமறைக்க முயற்சி செய்யாதீர்கள். பயத்தை விட்டு விலகுங்கள். முதலில் காவல் துறை உதவியை நாடுங்கள். தேவையெனில் வழக்கறிஞரோடு காவல் நிலையம் செல்லுங்கள்.
* குழந்தைகள் விரும்பாத விஷயங்களை போட்டுத் திணிக்காதீர்கள்.
* பள்ளியில் பெற்றோர் அனுமதியின்றி புதிய நபர்கள் வந்தால் குழந்தைகளை அனுப்ப தடைவிதியுங்கள்.
* பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் குழந்தையை அடித்து, கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்ப முயற்சி செய்யாதீர்கள். எதனால் குழந்தை பள்ளிக்கு போக மறுக்கிறது குழந்தை என்பதை ஆராயுங்கள். பிரச்னை பள்ளியில் இருக்கலாம்.
* பள்ளி விடுமுறை வந்துவிட்டது பாட்டி வீட்டுக்கு, அத்தை வீட்டுக்கு தனியாக குழந்தைகளை அனுப்பிவிட்டு கணவன், மனைவி ஜாலியாக இருக்கலாம் என்று நினைக்க வேண்டாம். உங்கள் இன்பம் குழந்தைகளுக்கு துன்பமாக மாறிவிடக்கூடாது.
* நண்பர்கள் வீட்டிற்கு குழந்தைகளை தனியாக அனுப்புவதை தவிர்த்துவிடுங்கள். முடியாவிட்டால் கண்காணித்துக்கொண்டே யிருங்கள்.
* ஆண்பிள்ளைகளை அடித்து வளர்க்கணும், பெண் பிள்ளைகளை மிரட்டி வளர்க்கணும் என்று பெரியவர்கள் பேசும் பழைய பஞ்சாங்கத்தை ஓரங்கட்டுங்கள்.
* தனிப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும்போது நல்ல சுற்றுச்சூழலா, பாதுகாப்பான இடமா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். குறைந்த கட்டணம் என்று வம்பான இடத்தில் மாட்டிக்கொள்ளவும் வேண்டாம். ஆடம்பரமான இடத்தில் தனிமையிலும் குழந்தையை சிக்கவைக்க வேண்டாம்.
* குழந்தைகளை நீர்நிலைகளுக்கு தனியாக அனுப்புவதை தவிர்த்துவிடுங்கள்.
* பெரியவர்கள் துணையின்றி சிறுவர்களை தனியாக வெளியே அனுப்புவது கூடவே கூடாது.
* வீட்டில் காவலாளி, வேலைக்காரர், ஓட்டுநர், பால் போடும் நபர், பேப்பர் போட வருபவர், பக்கத்து வீட்டுக்காரர்கள், அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் யாராக இருந்தாலும் கண்காணிக்கத் தவறாதீர்கள்.
* கண்காணிப்பு கேமரா இல்லாத வீடாக இருந்தால் முதலில் அந்த மூன்றாவது கண்ணை திறந்துவையுங்கள். சி.சி.டி.வி. இனி தவிர்க்கமுடியாதது.
* குழந்தைகளை விளையாட்டுப் பயிற்சிக்கு தனியாக அனுப்புவது, மைதானத்துக்கு, பூங்காக்களுக்கு தனியாக அனுப்புவது வேண்டாம்.
*பொது வாகனங்களில் பயணிக்கும்போது அங்கிள் மடியில் உட்கார்ந்துக்க, மாமா பக்கத்தில் உட்கார்ந்துக்க என்று புதிய நபர்களோடு குழந்தையை தனியாக அமர வைக்காதீர்கள்.

  - ஊர்வசி