அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை!
* அட்மிஷன்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும், மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skiltrainig.tn.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள், இவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.
விண்ணப்பம் மற்றும் விளக்க கையேட்டினை மாணவர்கள் இணையதளத்தில் பார்வையிடலாம். மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்து கொண்டு, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான நிகழ்ச்சி நிரலும் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யலாம். பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசு மூலம், உதவித்தொகை ரூ. 500 மாதந்தோறும் (வருகை நாட்களுக்கு ஏற்ப), இலவச பஸ் கட்டண சலுகை, இலவச மிதிவண்டி, இலவச மடிக்கணினி, இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், இலவச சீருடை ஒரு செட், இலவச காலணி ஒரு செட் ஆகியவை வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.5.2019.
|