ஆசிரியர்களை அலைகழிக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு!



தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு விதிமுறைகளின்படி டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை எதிர்த்து அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலும் ஆசிரியர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை.

இந்த விவகாரத்தில் தகுதி இல்லாதவர்களை ஆசிரியர் பதவியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இந்த விவகாரத்தில் அனுதாபமோ, கருணையோ காட்ட முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை ஆசிரியர் பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் காரணமாக 1,500 ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அதனால் ஏற்படும் காலிப் பணியிடங்களை குறுகிய காலத்தில் அரசு எவ்வாறு நிரப்பும் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்...

பி.பேட்ரிக் ரெய்மாண்ட்,  தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, பொதுச் செயலாளர்

‘‘கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை குழந்தைகளுக்கும் கல்வி என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும், அனைத்து குழந்தைகளுக்கும் எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறும் உரிமை வழங்கப்படுவதாக சட்டம் தெரிவிக்கிறது. இச்சட்டம் கல்வி நிறுவனங்கள் கட்டமைப்பு, பாடத்திட்டங்கள் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி, பயிற்றுவிக்கப்பட வேண்டிய பாடங்கள் குறித்து மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் பிரிவு 23 (1) ன் படி, எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படக் கூடிய ஆசிரியர்களின் கல்வித் தகுதி தேசிய கல்வியியல் குழுமம் NCTE ன் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாநில அரசுகள் வரையறுக்க வேண்டும் என்று கூறுகிறது. அதன் அடிப்படையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் 23.8.2010 அன்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் மத்திய அரசுப் பள்ளிகளில் 6.3.2012 க்கு பின்னர் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மட்டுமே தகுதித் தேர்வு கட்டாயம் என கூறப்பட்டு அதற்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள அரசு 20.9.12 அன்று வெளியிட்டுள்ள அரசாணை எண் 294ன் படி 31.3.2012 க்கு முன்னர் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளது.

கர்நாடக அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட அறிக்கை தேதியான 28 .7.2012க்குப் பிறகே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளது. சிறுபான்மை பள்ளிகளை சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தில் பல்வேறு நீதியரசர்கள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையிலும், மெட்ரிக் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை நியமனம் செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்கிற நிலையிலும், மாநில அரசுகளை இதுகுறித்த சட்ட நடைமுறைகளில் உரிய முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்கிற நிலையிலும் தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு தெளிவான முடிவை எடுக்காததால், தற்போது பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள பல்வேறு உட்பிரிவுகளை செயல்படுத்தாத  தமிழக அரசு, பாடத்திட்டங்கள் அதற்கான ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் நியமனம், வகுப்பறை கட்டமைப்பு போன்றவற்றை கண்டுகொள்ளாத அரசு ஆசிரியர் நியமனத்தில் மட்டும் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்வதும் தொடர்ந்து குழப்பமான பல்வேறு உத்தரவுகளை பிறப்பிப்பதும் அரசின் தெளிவற்ற மனநிலையை காண்பிக்கிறது.

மேலும் பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசு ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டு பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு விலக்களித்து அல்லது ஒரு சிறப்புத் தேர்வை நடத்தி அவர்களை தகுதி பெற்றவர்களாக அறிவிப்பதுதான் தமிழக அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பானதாக அமையும்’’ என்றார்.
ஆசிரியர் பால சண்முகம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாகப்பட்டினம்.

அரசு நடத்தும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயின்று பட்டயம் பெற்றவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது மிகப்பெரிய தலைக்குனிவு. இது யார் மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது. இந்தத் தகுதித் தேர்வு சான்றிதழும் 5 ஆண்டுகள் வரைதான் செல்லுபடியாகும். அதற்குள் வேலை கிடைக்காவிட்டால் மீண்டும் தேர்வு எழுத வேண்டும். என்னங்க சார் உங்க சட்டம்? தற்போது உள்ள விதிகளின்படி தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்கள் பெற்றால் அவர் ஆசிரியர் பணியில் இருப்பதற்கு தகுதியானவர். மற்றவர்களுக்கு அந்தத் தகுதி கிடையாது. பட்டியலின நண்பர்கள்  தங்களுக்கு சலுகை வழங்கப்படவேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியபோது 5 சதவீதம் விலக்கு அளித்து அனைத்து தரப்பினருக்கும் தேர்ச்சி பெறும் மதிப்பெண் 82.5 என குறைக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் பள்ளிகளின் தாளாளர்கள் தொடர்ந்த ஒரு வழக்கில் சிறுபான்மையினர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது? பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலா? சாதி அடிப்படையிலா? அல்லது பள்ளியை நடத்தும் நிர்வாகத்தின் அடிப்படையிலா?

2010 க்கும் 2014க்கும் இடையில் தெளிவான அரசாணைகள் இல்லாததால் ஆசிரியர் தகுதித் தேர்வு இல்லாமல் ஆனால் மாவட்ட கல்வி அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்டு பணியில் உள்ள 1500 ஆசிரியர்கள் நிலை கவலைக்குரியது.

- தோ.திருத்துவராஜ்