நியூஸ் வே



ஷாரூக் கானின் ‘தில்வாலே’ பட ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடக்கிறது. இங்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சானியா மிர்சா, படக்குழுவினருக்கு தன் வீட்டிலிருந்து ைஹதராபாத் பிரியாணியை பரிமாறியிருக்கிறார்! இதனை, ‘சூடு பறக்குது பிரியாணி’ என ட்விட்டரில் நெகிழ்ந்துவிட்டார் ஷாரூக்!

இந்த மாதம் வெளியாக இருக்கும் ஜேம்ஸ்பாண்ட் படமான ‘ஸ்பெக்டர்’க்காக, ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட ஏழு ஆஸ்டின் மார்ட்டின் கார்களை அழித்திருக்கிறார்கள் படக்குழுவினர்! இதன் மொத்த விலை 238 கோடி ரூபாயாம். அம்மாடியோவ்!

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டம், அவரது சொந்தத் ெதாகுதியான வாரணாசியிலேயே தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்தியா முழுக்க எடுக்கப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில், 476 நகரங்களில் 418வது இடத்தில் இருக்கிறது வாரணாசி!

‘கான்’ படம் கைவிடப் பட்டதில் ரொம்பவும் அப்செட்டில் இருக்கிறார் சிம்பு. செல்வராகவனின் இந்த அறிவிப்பை அவர் எதிர்பார்க்கவே இல்லை. அதனால் நடிகர் சங்க சரத் அணி பிரசாரத்துக்குக் கூட அவர் ஆப்சென்ட்!

‘‘கால்பந்தில் அதீத ஆர்வம் கொண்ட நாடு இந்தியா! இந்த ஆர்வத்தை இப்போதைய தலைமுறை ரசிகர்களிடமும் பார்க்கிறேன்!’’ என செமயாய் மெச்சியிருக்கிறார் முப்பத்தியெட்டு வருடங்களுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கும் பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலே.

தனுஷின் ‘தங்கமகனி’ல் செம மாடர்னாக கலக்கியிருக்கிறார் எமி ஜாக்‌சன். ஸ்பாட்டில் தனக்குப் பிடித்தமான பிரியாணியையும் ஒரு கை பார்த்திருக்கிறது பொண்ணு!

கமல் நேரடியாக மலையாளத்தில் நடித்த கடைசி படம் ‘சாணக்யன்’. இப்போது மலையாள ராஜீவ்குமாரின் இயக்கத்தில் ஒரு மலையாளப் படமும், தமிழ்ப் படமும் செய்கிறார். இதற்காக கமல் தன் சம்பளத்தை கணிசமாகக் குறைத்துக்கொண்டார்.

கடந்த வாரம் சென்னையில் நடந்த ‘இந்தியன் கால்பந்து லீக்’ துவக்க விழாவில், கிரிக்கெட் வீரர் சச்சின், ஐஸ்வர்யா ராய், அலியா பட், நீதா அம்பானி ஆகியோருடன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கலந்துகொண்டார்.

அனைவருடன் சேர்ந்து இந்தி நடிகர் அர்ஜுன் கபூர் செல்ஃபி எடுக்க, அது 24 மணி நேரத்திற்குள் 65 ஆயிரம் லைக்குடன் சமூக வலைதளங்களில் செம வைரல் ஆகியிருக்கிறது. அமெரிக்க டிவி தொகுப்பாளர் எலன் டி ஜெனர்ஸ் எடுத்த ஆஸ்கார் செல்ஃபியோடு இதனை ஒப்பிட்டு, ‘இது பாலிவுட் வெர்ஷன்’ என்கிறார்கள்.

பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்குப் பிறகு பா.ஜ.க.வினரால் அதிகம் அழைக்கப்படும் மூன்றாவது முக்கிய நபர், மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி.  அவரது ஆக்ரோஷமான பேச்சுத்திறனும், டி.வி பாப்புலாரிட்டியும்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் கட்சியினர். இதுவரை நான்கு பேரணிகளில் கலந்துகொண்ட ஸ்மிருதி, இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பேசவிருக்கிறார்.

அஜித்தின் ‘வேதாளம்’ படத்தின் ஒரு பாடலை பஞ்சாப் ராப் பாடகர் பாட்ஷா பாடியிருக்கிறார்.  ஏற்கனவே பாலிவுட்டில் பஞ்சாபி ராப் பாடியிருக்கும் பாட்ஷாவை தமிழுக்கு அழைத்து வந்த கிரெடிட்டை அனிருத்
அள்ளியிருக்கிறார்.

திருமணத்திற்கான ஷாப்பிங் வேலைகளில் பிஸியாகி விட்டார் அசின். இதற்காக லண்டன் சென்று வந்திருக்கும் அவர், மீண்டும் பாரிஸ் செல்வதாக ப்ளான்.

இயக்குநர் மோகன்ராஜாவிடம் கதை கேட்டிருக்கிறார் விஜய். ‘வேலாயுதம்’ படத்திலிருந்து ஒரு வரியை எப்படி தனி ஒருவனாக ஆக்கினாரோ, அதைப் போல ‘தனி ஒருவனி’ல் இருந்து ஒரு வரியை தனியாக எடுத்துக் கூறியிருக்கிறார் மோகன்ராஜா. மீண்டும் இணைய வாய்ப்பு உண்டு போல!

1990ல் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்திருந்தார் கௌதமி. 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோகன்லாலுடன் நடிக்கிறார் கௌதமி. இப்படத்தின் ஷூட்டிங் நவம்பரில் தொடங்குகிறது.

தெலுங்கில் ‘ருத்ரமாதேவி’ செம ஹிட்  அடித்ததில் கிர்ரென எகிறியிருக்கிறது அனுஷ்காவின் மார்க்கெட். நாகார்ஜுன், கார்த்தி, தமன்னா நடிக்கும் ‘தோழா’விலும் கெஸ்ட்  ரோல் முடித்துவிட்டு, இப்போது ‘பாகுபலி 2’வுக்காக காத்திருக்கிறார் அனுஷ்.

இந்த ஆண்டுக்கான ‘ரீடெயில் ஐகான்ஸ்’ விருது பெற்றிருக்கிறது வசந்த் & கோ நிறுவனம். ஆப்டிமல் மீடியா சொல்யூஷன் சார்பாக நுகர்வோர் மின்னணு சாதனங்கள் விற்பனையில் இந்தியாவின் நம்பர் 1 டீலராகத் திகழும் வசந்த் & கோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளர் வசந்தகுமாருக்கு இந்த விருதை தமிழக ஆளுநர் ரோசய்யா வழங்கினார்.

 ‘நானும் ரவுடிதான்’ படத்தை நயன்தாராவுக்கு ஸ்பெஷல் ஷோ போட்டுக் காண்பித்தார் விக்னேஷ் சிவன். படம் முடிந்ததும் சிவனை ஆரத் தழுவி ஒரு மோதிரத்தையும் கைவிரலில் போட்டார் நயன். (இரண்டு பரிசா!)

இந்தியா தோற்ற டி20 போட்டியின்போது ரசிகர்கள் ரகளை செய்ததால் ‘இனி கட்டாக் கிரவுண்டில் சர்வதேசப் போட்டிகள் நடத்துவற்கு தடைவிதிக்க வேண்டும்’ எனக் கொதித்திருக்கிறார் கவாஸ்கர். ஆனால், ஒரிசா மாநில கிரிக்கெட் போர்டு, ‘வர்ணனையாளர் வேலையை மட்டும் பாருங்கள்’ என அவருக்கு எதிராகப் பொங்கியிருக்கிறது.

ஏ.எம்.ரத்னத்தின் அடுத்த படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்துவிட்டார். எஸ்.ஜே.சூர்யா, தரணி இரண்டு பேருமே கதை சொல்லி, இரண்டுமே விஜய்க்கு
பிடித்துவிட்டது. இருவரில் யாருக்கு தாயம் விழும் என்பது முடிவாகவில்லை.

பீகார் தேர்தலில் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப்பும், இளைய மகன் தேஜஸ்வியும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தேஜ் தனக்கு வயது 25 எனவும், தேஜ்ஸ்வி தனக்கு 26 எனவும் குறிப்பிட்டு ‘யார் அண்ணன்?’ என்ற குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர்.

தன் பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடுவது சினேகா ஸ்பெஷல். இந்த பர்த் டேவுக்கு கொளத்தூர் அருகே உள்ள ஆதரவற்றோர் இல்லம் சென்றிருந்தவர், அங்கே டியூப் மூலமாக உணவு பெற்றுக்கொள்ளும் நிலையில் உள்ள குழந்தைகளைப் பார்த்து கண்கலங்கி உருகியிருக்கிறார்.