உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ‘எந்திரனி’ன் ஆரவாரம் இன்னும் தியேட்டர்களை நிறைத்துக்கொண்டிருக்க, ரஜினி ரசிகர்களின் நாடியை இன்னும் அதிகரிக்க அடுத்த ரஜினி பட அறிவிப்பும் வந்துவிட்டது.
‘ராணா...’கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இந்தப்படத்துக்கு ‘எந்திரன்’ டீமின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும், ஆஸ்கர் இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரஹ்மானும், எடிட்டர் ஆன்டனியும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர். படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்குகிறது. 2012 பிப்ரவரியில் தியேட்டர்களை ஆக்கிரமிக்கவிருக்கும் படத்தில் ரஜினியின் ஜோடியாக முதல்முறையாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
படப்பிடிப்புக்கு இன்னும் ஒரு மாதமே இருக்க, ஒருபக்கம் படத்துக்கான கதை விவாதத்தையும், இன்னொருபக்கம் மற்ற கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்புக்கான இடங்களின் தேர்வையும் கவனித்து வரும் கே.எஸ்.ஆர்., ரஜினியின் வித்தியாச தோற்றங்களுடன் கூடிய படத்தின் அறிவிப்புக்கான போட்டோஷூட்டை இன்னும் ஒரு வாரத்தில் நடத்தப்போகிறார். ‘ராணா’ என்பது பெயர்ச்சொல்லாக இருக்க, ரஜினியின் முதலெழுத்தான ‘ர’வைக் குறிப்பிடும் விதமாக ‘ரானா’ என்பதே படத்தில் ஹீரோவின் பெயராகவும் வரும்விதமாக ‘ராணா’ என்று வைக்கப்பட்டிருக்கலாம் என்று இப்போதே யூகங்கள் பொறி பறக்க ஆரம்பித்துவிட்டன.
ரஜினியின் லக்கி நம்பரான ‘மூன்று’ ராணாவின் எல்லா மட்டங்களிலும் இடம் பெற்றிருப்பது ஹைலைட்.
‘முத்து’, ‘படையப்பா’ வைத் தொடர்ந்து ரஜினியுடன் கே.எஸ்.ரவிக்குமார் இணையும் மூன்றாவது படம் இது. ‘மூன்றுமுகம்’ படத்துக்குப் பின் மூன்று வேடங்களில் ரஜினி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் தயாராகும் படம் மூன்றாவது மாதமான மார்ச்சில் தொடங்கு கிறது.
‘சன் பிக்சர்ஸ்’ திறந்துவிட்ட தமிழ்சினிமாவின் உலக மார்க்கெட்டே ஈராஸ் இனடர் நேஷனலை தமிழின் சூப்பர்ஸ்டார் நடிக்கும் படத்தை மும்மொழிகளிலும் தயாரித்து உலகமெங்கும் வெளியிடும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எந்த தமிழ்ப்படத்தின் சாயலும் இல்லாததாக சொல்லப்படும் இந்த ‘ராணா’ உலக அளவில் வெற்றியைப் பெறும் என்பதும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உண்மைதான்.
வேணுஜி