மூட்டுவலியையும் முதுகுவலியையும் மாயமாக்கும் ஒற்றை ஊசி! ஒரு புதுமை சிகிச்சை



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

     லியில்லாத வாழ்க்கைதான் எல்லோருடைய விருப்பமும்! ஆனால் அனேகம் பேருக்கு அது வாய்ப்பதில்லை. எப்போதுமோ, எப்போதாவதோ ஏதேனும் ஒரு வலி விரட்ட... தற்காலிக நிவாரணத்துடன் அதை சகித்துக் கொண்டு வாழப் பழகுகிறவர்களே அதிகம்.

ஆனால், ‘எந்த வலியும் இப்படி அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. வலி என்பதே ஒரு நோய்’ என்று எச்சரிக்கிறார் வலி நிர்வாக மருத்துவ நிபுணரான பிரபு திலக். வலி ஏன்? அது சொல்ல வரும் அபாய அறிவிப்பு என்ன? வலியை மாயமாக்கும் லேட்டஸ்ட் ஓஸோன் ஊசி சிகிச்சை... என சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் அவர்.

‘‘நிறைய பேரு ‘யாருக்குத்தான் வலி இல்லை’னு அலட்சியப்படுத்தறாங்க. அப்படி லேசில விடற விஷயமில்லை வலி. வலி இருந்தா, அதுக்கொரு காரணமும் இருக்கும். உடம்புக்குள்ள ஏதோ கோளாறுங்கிறதுக்கான அலாரம்தான் வலி! அதுக்கான சிகிச்சைங்கறது வலியை மட்டும் நிறுத்தற சிகிச்சையா இருக்கக்கூடாது; வலிக்கு என்ன காரணம்னு கண்டுபிடிச்சு, அந்த காரணத்துக்கு நிவாரணம் தர்றதா இருக்கணும். அதைப் புரிஞ்சுக்காம, தற்காலிக நிவாரணம் மூலமா அதை அடக்கி வைக்கிறதால, பின்னாளில் பிரச்னை பெரிசாகலாம். வலிக்கான மூலத்தையும், காரணத்தையும் தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கான சரியான சிகிச்சை எடுத்துக்கணும். இதை அறிவுறுத்தறதுதான் வலி நிர்வாகத்தோட சிறப்பம்சம்.

வெளிநாடுகள்ல வலி நிர்வாகத் துறையும், வலி நிர்வாக மருத்துவர்களும் பிரபலம். ஆனா நம்மூர்ல எங்க வலிச்சாலும், உடனே ஒரு பெயின் கில்லரை வாங்கி முழுங்கறதும், கிரீம் தடவிக்கிறதுமா அறியாமையிலதான் இருக்காங்க மக்கள். அடுத்தகட்டமா குடும்ப டாக்டரை அணுகுவாங்க. அவங்க ஒவ்வொரு மருந்தா கொடுத்துப் பார்த்து, அப்புறம் வேற ஒரு சிறப்பு மருத்துவருக்கு சிபாரிசு பண்ணி பார்க்கிறதுக்குள்ள நோய்க்கான அடிப்படை காரணம் முற்றிடும். வலி வந்ததும் உடனடியா வலி நிர்வாக மருத்துவரை அணுகறதுதான் சரி’’ என்கிற பிரபு திலக், பொதுவான சில வலிகளைப் பற்றியும், அவற்றுக்கான லேட்டஸ்ட் சிகிச்சைகள் பற்றியும் தொடர்கிறார்.

‘‘ஸ்லிப் டிஸ்க்னு சொல்லக்கூடிய பிரச்னை இன்னிக்கு நிறைய இளைஞர்களை பாதிக்குது. முதுகுத் தண்டுல 2 எலும்புகளுக்கு இடையில உள்ள சவ்வு மாதிரியான பகுதி நகர்ந்து போவதைத்தான் ‘ஸ்லிப் டிஸ்க்’னு சொல்றோம். அந்த சவ்வு பிதுங்கி வெளியே வந்து முதுகுத் தண்டோட பக்கவாட்டுல உள்ள நரம்பு முனைகளை உரசும். இப்படி உரசுவதால வலி ஆரம்பிக்குது. சமீபகாலம்வரை முதுகுத் தண்டுல உண்டாகிற இதுபோன்ற பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வா இருந்தது.

இப்போ புதுசா வந்திருக்கிற ஓஸோன் சிகிச்சை மூலமா அறுவை சிகிச்சையைத் தவிர்க்கலாம். விசேஷ கருவி மூலமா ஆக்சிஜனை ஓஸோனா மாத்தி, அதை ஊசியில நிரப்பி, சவ்வு பிதுங்கின இடத்தைக் கண்டுபிடிச்சு செலுத்தறப்ப, அந்தப் பகுதி அப்படியே சருகு மாதிரி வத்திடும். பக்க விளைவுகளே இல்லாத அருமையான இந்த சிகிச்சை எந்த வயதினருக்கும் ஏற்றது. டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழக மருத்துவமனையில இந்த சிகிச்சையை தர்றாங்க. இதேபோல சென்னையிலும் இப்போ செய்யறோம்.  

அதே மாதிரி ‘ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்’னு சொல்லக்கூடிய மூட்டு வலிக்கும், இந்த ஓஸோன் ஊசி நல்ல பலன் தரும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் தீர்வுங்கிற நிலையில இருக்கறவங்களுக்குக்கூட அதுக்கு மாற்றா, இந்த ஊசியை மூட்டுல போடலாம். இந்த ஊசியைப் போட்டுக்கிட்டு, வெறும் 3 & 4 மணி நேரத்துக்குள்ள வீட்டுக்குத் திரும்பலாம். வலி தர்ற வேதனையோட நடக்கமுடியாம நகர்ந்து வர்றவங்க, சிரிச்சுக்கிட்டே நடந்து வீட்டுக்குத் திரும்பற அதிசயத்தை மூட்டுல போடற இந்த ஓஸோன் ஊசி சிகிச்சை நிகழ்த்துது. முதுமை தர்ற வேதனையா இனிமே மூட்டுவலியை சகிச்சுக்க வேண்டிய அவசியமில்லை!

Trigiminal neuralgia Glossopharyngeal neuralgiaனு சில நோய்கள் இருக்கு. இதனால பாதிக்கப்பட்டவங்களுக்கு முகத்துல மின்சார ஷாக் அடிச்ச மாதிரி சுரீர், சுரீர்னு வலிக்கும். பல் தேய்க்கவோ, சாப்பிடவோ கூட முடியாது. வலி நிர்வாகத் துறைல இந்தப் பிரச்னைக்காகவே பிரத்யேக ஊசிகள் இருக்கு. அதைப் போட்டா மட்டுமே நிவாரணம் கிடைக்கும்.

‘ஃபைப்ரோமையால்ஜியா’னு ஒரு கண்டிஷன் பெண்களை அதிகம் தாக்குது. எங்கேயாவது வலிக்குதுனு சொல்லிட்டே இருப்பாங்க. ஆனா எல்லா டெஸ்ட்டும் நார்மல்னு காட்டும். வலி நிர்வாக நிபுணரால மட்டுந்தான் இந்தப் பிரச்னையைக் கண்டுபிடிக்கவும், சரியான சிகிச்சையைக் கொடுக்கவும் முடியும்’’ என்கிற டாக்டர், கடைசியாகச் சொல்கிற விஷயம் வலியுடன் வாழ்கிற ஒவ்வொருவருக்குமான அவசர அட்வைஸ்!

‘‘சில பேருக்கு சாப்பிட்டா வலி பறந்துடும். சிலருக்கு 2 டம்ளர் தண்ணீர் குடிச்சாலே வலி போன மாதிரி இருக்கும். இன்னும் சிலருக்கு ஓய்வும், நல்ல தூக்கமும் வலியிலேருந்து விடுதலை தரும். இது சாதாரண வலியில்லைனு எப்ப மனசுக்குள்ள மணி அடிக்குதோ, அப்ப உடனடியா வலி நிர்வாக மருத்துவரைப் பார்க்கணும். ஏன்னா, வலிங்கிறதே ஒருவிதமான நோய்தான்!’’
 ஆர்.வைதேகி