‘‘சேகர், பாபு ரெண்டு பேருமே உன்னைக் காதலிக்கறதா சொல்றாங்க. உன் சாய்ஸ் யாருன்னு நீ வாய்திறந்து சொல்லலையே... இந்த விஷயத்தில் சீக்கிரமா முடிவுக்கு வர்றதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன்’’ என்று தோழி பானுவுக்கு அறிவுரை சொன்னாள் பாவனா.
‘‘அடுத்த வாரம் வரப்போற என் பிறந்த நாளுக்கு இரண்டு பேருக்கும் அழைப்பு கொடுத்து, பிறகு முடிவு செய்கிறேன்’’ என்று புதிர் போட்டாள் பானு.
பிறந்த நாள் விழா முடிந்தது...
‘‘பாபுவுக்குத்தான் உன்மேல எவ்ளோ ப்ரியம் பார்த்தியா..? லோன் போட்டு உனக்கு விலை உயர்ந்த பரிசுப்பொருட்களைக் கொடுத்திருக்கார். சேகர் வெறும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொல்லிட்டார். அப்போ, பாபுதானே உன் சாய்ஸ்?’’ என்று ஆவலோடு கேட்டாள் பாவனா.
‘‘காதல்ங்கறது பொருள் சம்பந்தப்பட்டது இல்லை. உணர்வு சம்பந்தப்பட்டது. பணத்தைச் செலவழிச்சு காதலை வாங்க நினைக்கறவங்க, அதே பணத்தைப் பயன்படுத்தி வெட்டி விடவும் தயங்கமாட்டாங்க. பரஸ்பர உணர்வு பரிமாற்றங்களால் நிதானமாக சேகரிக்கப்பட்டால்தான், தேன் மாதிரி அது இனிமையாக மாறும். எனக்குப் பிடிச்ச பூக்களை பரிசா கொடுத்து, என் உணர்வுகளுக்கு மதிப்பளித்த சேகர்தான் எனக்கு ஏற்றவர்!’’ என்ற பானுவின் விளக்கத்தால் ஆச்சரியம் அடைந்தாள் பாவனா.
எஸ்.ராமன்