உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை இல்லாத சாதனையாக மூன்று பதக்கங்களை இந்தியா வென்றிருக்கிறது. சந்தீப் யாதவ், பஜ்ரங், அமீத்குமார் ஆகிய மூவரும்தான் சாதனையாளர்கள். ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற சுஷில்குமாரைப் பார்த்து ஊக்கம் பெற்ற இளைஞர்கள் இவர்கள். ‘‘அடுத்த தலைமுறை நம்பிக்கை தரும் விதமாக இருக்கிறது. அடுத்த ஒலிம்பிக்ஸில் மல்யுத்தத்தில் மட்டும் 5 பதக்கங்கள் உறுதி’’ என்கிறார் சுஷில்குமார்.
இலங்கை வடக்கு மாகாணத்துக்கு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர்தலில் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் விக்னேஸ்வரன். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான இவர்தான் இப்போது ஈழத் தமிழர்களின் நம்பிக்கை வெளிச்சம். ஆனால் அதற்குள்ளாகவே, ‘‘தமிழர் பகுதியில் நடைபெறும் மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டணியின் அரசாங்கம் பெரும் தடைக்கல்லாக இருக்கும்’’ என கிளிநொச்சி பகுதி ராணுவ கமாண்டர் உதயா பெரேரா கூறியுள்ளது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அஜீத் ஆபீஸ் பக்கம் போனால், எங்காவது கார்ப்பரேட் ஆபீஸ் வந்துவிட்டோமோ எனத்தோன்றும். எங்கு பார்த்தாலும் மடிப்பு களையாத பணியாளர்கள்தான் இருப்பார்கள். அங்கே இருக்கும், அஜீத் பிறந்த குழந்தையாய் இருந்ததிலிருந்து இப்போது வரை எடுத்த படங்களின் அணிவகுப்பு உங்கள் நேரத்தை வெகுவாக எடுத்துக்கொள்ளலாம்.
விவசாயி ஆகிவிட்டார் நீது சந்திரா. மும்பையை ஒட்டிய புறநகர்ப் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார். மத்தியில் ஒரு பண்ணை வீடு கட்டி, சுற்றிலும் விவசாயம் செய்வதாகத் திட்டம். இது அவரது அம்மாவின் ஆசையாம்!

தொப்பியைக் கழற்றிவிட்டு தாத்தாவாக ‘தலைமுறை’யில் நடித்திருக்கிறார் பாலுமகேந்திரா. இந்த தாத்தா கேரக்டருக்காக பலரை செலக்ட் செய்தும் சரிவராமல் அவரே நடித்துவிட்டார். சொல்லிக்கொடுத்தவரே நடித்தால் எப்படியிருக்கும்! அப்படி இருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள்.
‘வாய்மை’ படத்திற்குப் பிறகு புதிய படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் கவுண்டமணி. கௌதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கியதாஸ் இயக்கும் அந்தப் படத்தில் கதையின் நாயகனே கவுண்டர்தான். ‘எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பமில்லை’ என்ற கருத்தைப் பதிவு செய்ய தரும் ‘49 ஓ’ படிவத்தின் பெயர்தான் படத்தின் தலைப்பு.
ஓவியாவின் தமிழ் வாத்தியாரைத் தேடிக்கொண்டிருக்கிறது கோலிவுட். ‘‘எனக்கும் தமிழ் நல்லா தெரியும்’’ என பேட்டிகளில் அலட்டிக்கொள்ளும் ஓவியா, ‘மொக்கை’, ‘சப்பை’ போன்ற ‘இலக்கியத்தரமான’ வார்த்தைகளையே பட்டியல் போடுகிறார்.
கௌதம் மேனனோடு கிசுகிசுக்கப்பட்டார். ‘‘திருமணம் ஆகிவிட்டது... அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்’’ என்றார்கள். படிக்கிறார் என்கிறார்கள். ஆனால் திடீரென்று சென்னை திரும்பி ‘விருமாண்டி’யில் பார்த்த அதே அபிராமியாக நிற்கிறார். இப்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் அபி.

எப்போதும் நிதானமாகத்தான் வேலை பார்ப்பார் ஹாரிஸ் ஜெயராஜ். இரவிலும் தொடர்ந்து இசைக்கோர்ப்பு வேலைகள் நடக்கும். போட்ட ட்யூன், பின்னணி இசையையே தொடர்ந்து பாலீஷ் பண்ணிக்கொண்டு இருப்பதால் டைரக்டர்கள் நொந்துபோய் விடுகிறார்கள். அப்படித்தான் வணக்கம் சொல்லிவிட்டுப் பிரிந்திருக்கிறார் செல்வராகவன். ஆனால் தெலுங்கு புரடியூசர்கள் கைவசம் இருப்பதால் ஹாரிஸ் கவலைப்படுவதில்லை. இன்னும் புதுக்கார்கள் வாங்க தமிழ் காசு போதாதாம்.
புதுவையில் செயல்படும் ‘மணற்கேணி’ அமைப்பு ‘நிகரி’ என்ற புதுமையான விருது ஒன்றை வழங்குகிறது. வகுப்பறையில் சாதிப் பாகுபாட்டைப் பார்க்காமல், தலித் மாணவர்களையும் சரிநிகராக நடத்தும் ஆசிரியர்களுக்கு இந்த விருது. ‘‘சமூகநீதி வகுப்பறையில் ஆரம்பிக்க வேண்டும். ஆசிரியர்களே அதை மனதில் விதைக்க வேண்டும். இந்த ஆண்டு கடலூர் நகராட்சிப்பள்ளி ஆசிரியர் பாலுவுக்கும், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.ராமசாமிக்கும் விருது தந்திருக்கிறோம்’’ என்கிறார் ‘மணற்கேணி’யை நிர்வகிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ ரவிக்குமார்.
முன்னால வந்தவர் பின்னாலேயே இருக்கார். பின்னால வந்தவர் முன்னுக்கு வந்துட்டார். புரியாதவங்களுக்கு தெளிவா சொல்றோம், கேட்டுக்குங்க. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஸ்ரீதிவ்யாவின் உடன்பிறப்பு ஸ்ரீரம்யாவும் ஹீரோயின்தான். ‘யமுனா’ படத்தில் நடித்துள்ளார். பிரகாசித்தது என்னவோ தங்கைதான்.
சைலன்ஸ்விழாவிற்குப் போய் கிடைத்த அனுபவத்தில், எரிச்சலின் உச்சத்தில் இருக்கிறார்கள் தலைவாவும், பெரிய நடிகரும். இனி விழாக்களை நாசூக்காக தவிர்க்க முடிவு செய்துவிட்டார்கள். ஷூட்டிங் போய் விடுவது, அல்லது வெளியூருக்கு தப்பி விடுவது என்பதுதான் முடிவாம். கொதித்துக் கூடிய ரசிகர் மன்றத்தையும் கண்டித்து அனுப்ப, அவர்களும் முகம் வாடி திரும்பிவிட்டதாய் தகவல்.
ஒல்லிக்குச்சி மியூசிக் டைரக்டர், நடிகையிடம் தன் துண்டித்த உறவை படு வேகமாக சீர்செய்து வருகிறார். சிட்டியில் எங்கும் சந்திக்காமல் வெளியில்தான் சந்திக்கிறார்கள். சத்தம் காட்டாமல் மலேசியா பக்கம் வேறு ஃப்ளைட்டில் போய் சந்திக்கிறார்கள்!