குடிகாரன் : சோமசேகர்

சிவராமன் சார் ஏதோ தைரியத்தில் அந்தப் பையனின் அப்பாவை பள்ளிக்கு வரவழைத்து எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டாரே தவிர, உள்ளுக்குள் நடுக்கம்தான்! அந்தப் பையன் ராஜா ஒன்பதாம் வகுப்பு படித்தாலும், கல்லூரி மாணவன் போல கட்டுமஸ்தாக இருப்பான். இவரே அவனை நிமிர்ந்து பார்த்துத்தான் பேச வேண்டியிருக்கும். படிப்பு, ஒழுக்கம் என கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், கடைசியாக அவனிடம் சாராய நெடி வந்ததும்தான் சிவராமன் வாத்தியாருக்கு கோபம் தலைக்கேறியது. உடனே அவன் அப்பாவை அழைத்து பையனைப் பற்றிப் போட்டு உடைத்து விட்டார்.
சனி, ஞாயிறு விடுமுறை. திங்களன்று சிவராமன் கொஞ்சம் தயக்கத்தோடுதான் வகுப்பறைக்குள் நுழைந்தார். கண்கள் அலைமோதின... அந்தப் பையன் ராஜா அன்று பள்ளிக்கு வரவில்லை. ‘‘என்னாவாயிருக்கும்?’’ - குழப்பத்துடனே பொழுது ஓட, மாலை பள்ளி விட்டதும் வெளியே வந்த சிவராமனின் அருகே ராஜா! ‘‘வணக்கம் சார்! ரொம்ப நன்றி சார்...’’ “எதுக்கு?’’
‘‘அன்னைக்கு நான் உண்மையில பள்ளிக்கூடத்துக்கு குடிச்சிட்டு வரலை சார்... சும்மா ஷர்ட் மேல தெளிச்சிட்டு வந்தேன்! எங்க அப்பா மோசமான குடிகாரர். நீங்க அவர்கிட்ட என்னைப் பத்தி சொன்னதும், ‘தன்னாலதான் நானும் குடிகாரன் ஆயிட்டேன்’னு நொந்துபோய் குடிக்கிறதையே விட்டுட்டார்! மறுவாழ்வு மையத்துக்குத்தான் இன்னைக்கு அழைச்சிட்டுப் போயிருந்தேன். நாளைக்கு ஸ்கூலுக்கு வர்றேன் சார்!’’
|