0 % வட்டியில்லா கடனுக்கு தடை... இனி தவணையில் எதையும் வாங்கமுடியாதா?






வட்டியில்லாக் கடன்... நம் மக்களுக்கு தமிழில் பிடித்த வார்த்தை இதுதான். இந்த சாகச வார்த்தைக்கு மயங்காதவர்களே இல்லை. மாதம் 10 ஆயிரம் சம்பாதிப்பவர் கூட தைரியமாக 20 ஆயிரம் ரூபாய் ஆண்ட்ராய்டு போனில் விளையாடு கிறார். மிடில் கிளாஸ் வீடுகளில் கூட 32 இஞ்ச் எல்.சி.டி டிவி பாடுகிறது. தேவையோ, தேவையில்லையோ... ‘வட்டியில்லாத கடனில்தானே கிடைக்கிறது; வாங்கி வைத்துக்கொள்வோம்’ என்ற மனநிலை இயல்பாகவே வந்துவிடுகிறது. அதுதான் வணிக நிறுவனங்களுக்கு மூலதனம். ஏதாவது பண்டிகை வந்துவிட்டாலே ‘0% வட்டிÕ விளம்பரங்கள் காதைக் கிழிக்கின்றன; கண்களைப் பறிக்கின்றன. சில நிறுவனங்கள், சம்பளச் சான்றிதழைக் கொடுத்தால் வீட்டிலேயே கொண்டு வந்து பொருட்களை வைத்துவிட்டுப் போகின்றன.

 ஆனால் இனி இதெல்லாம் நடக்காது. 0% வட்டி என்ற வார்த்தை எங்கும் ஒலிக்காது. வட்டியில்லாக் கடன் திட்டத்தை கண்காணித்த ரிசர்வ் வங்கி, ‘நூதன முறையில் நுகர்வோரை கடனாளியாக்கி ஏமாற்றும் அத்திட்டத்தை வங்கிகள் இனிமேல் மேற்கொள்ளக்கூடாது’ என்று தடை விதித்திருக்கிறது. இது வணிக நிறுவனங்களை மட்டுமில்லாமல், இ.எம்.ஐ வாழ்க்கை வாழ்ந்துவரும் மாதச் சம்பளக்காரர்களையும் கவலையில் தள்ளி யிருக்கிறது. இந்தத் தடை சரியா? தவணைமுறை வணிகமே இனி முடங்கி விடுமா..?

பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பனிடம் கேட்டோம். ‘‘உண்மையில் இது மிகவும் வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு வியாபாரியும் ஒவ்வொரு விதமான திட்டத்தை அறிவிக்கிறார்கள். எது சரியாக நடக்கிறது, எது மோசடி என்று எவராலும் பிரித்து இனம் காண முடியவில்லை. கடந்த ஆண்டு வங்கிகள் செயல்படுத்திய கடன் திட்டங்களை ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆராய்ந்த பிறகே இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஆண்டுக்காண்டு கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2012-2013 நிதியாண்டில் வங்கிகளின் கடன் 34 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவை தவணை முறை பொருட்கள் வாங்க வழங்கப்பட்டவை.  

இந்த 0% திட்டம் பல வகைகளில் நடத்தப்படுகிறது. சில நிறுவனங்கள் சரியாகக் கையாள்கின்றன; சில நிறுவனங்கள் மோசடி செய்கின்றன. பொருட்களின் தயாரிப்பாளர்கள் டீலர்களுக்கு நிறைய டிஸ்கவுண்ட் தருகிறார்கள். அதனால் டீலர்கள் அளவுக்கு மீறி பொருட்களை வாங்கிக் குவித்து விட்டு வங்கிகளை அணுகுகிறார்கள். ‘வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுங்கள், வட்டியை நாங்கள் தருகிறோம்’ என்கிறார்கள். வங்கிகள் வாடிக்கையாளருக்கு கடன் கொடுத்து விட்டு வட்டியை டீலரிடம் பெற்றுக்கொள்கின்றன. இந்தத்திட்டத்தால் வாடிக்கையாளருக்குப் பாதிப்பில்லை.



ஆனால் சில நிறுவனங்கள் வட்டி இல்லாமல் கடன் தருவதாகச் சொல்லி விட்டு ‘பிராசஸிங் ஃபீஸ்’ என்ற பெயரில் வட்டியை விட அதிகமாகக் காசு வசூலிக்கின்றன. அதை உணராமல்,
‘வட்டிதான் இல்லை என்கிறார்களே’ என்ற நினைப்பில் வாடிக்கையாளர் பிராஸசிங் ஃபீஸை எண்ணிக் கொடுத்துவிட்டு திருப்தியாக வெளியே வருகிறார். இதுதான் மோசடி. மாதத்தவணை கட்ட முடியாத நிலையில் லேட் ஃபீஸ் என்ற பெயரில் மேலும் பணம் கேட்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளை கண்காணித்துதான் ரிசர்வ் வங்கி தடை விதித்திருக்கிறது.
ஆனாலும் இந்த அறிவிப்பு புதிதில்லை. ஏற்கனவே 0% வட்டியில் வணிகம் செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி எல்லா வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. ஆனால் அதை யாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது மீண்டும் எச்சரித்திருக்கிறார்கள். வங்கிகளுக்கு இதில் இருந்து வெளியில் வர அவகாசமும் தரப்பட்டுள்ளது. இதனால் தவணை முறை திட்டமே முடங்கிப்போகும் என்று நான் நினைக்கவில்லை. வட்டியில்லாக் கடன் திட்டத்திற்குப் பதில் வட்டியுடன் கடன் திட்டம் அமலுக்கு வரும். குறைந்தபட்சம் 4 முதல் 8 சதவீதம் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். பொருட்களின் விலை, தவணைக்காலத்தைப் பொறுத்து இது மாறுபடும்’’ என்கிறார் சோம.வள்ளியப்பன்.

‘கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆப் இந்தியா’ அமைப்பின் துணை இயக்குனர் எம்.ஆர்.கிருஷ்ணனும் இந்தத் தடையை வரவேற்கிறார்.
‘‘தகுதிக்கும், அளவுக்கும் மீறி பொருட்களை வாங்குவது குடும்பத்தின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்துவிடும். 0% வட்டி என்ற வார்த்தைக்கு மயங்கி தேவையற்ற பொருட்களையும் வாங்கி வீட்டில் அடுக்குகிறார்கள். இ.எம்.ஐ. கலாச்சாரத்துக்கு பழக்கப்பட்டு காலம் முழுவதும் கடன்காரர்களாகவே வாழ வேண்டியிருக்கிறது. நவீன வியாபார யுத்தியாகவும், மக்களை தொடர்ந்து நுகர்வோராகவே வைத்திருக்கும் தந்திரமாகவும் 0% வட்டி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கும் மிடில் கிளாஸ் மனிதர்கள் முதல் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பணக்காரர்கள் வரை எல்லோருமே இந்த வலையில் சிக்கியிருக்கிறார்கள்.

வட்டியில்லா தவணைமுறைக் கடன் என்றால் எதை வேண்டுமானாலும் விற்கலாம் என்ற எண்ணம் வணிக நிறுவனங்களுக்கு வந்து விட்டது. 1000 ரூபாய் 2000 ரூபாய் விலையுள்ள மொபைல்களின் விற்பனை கணிசமாகச் சரிந்து விட்டது. 4000-5000 என்றிருந்த நிலை கூட இப்போது மாறி ரூ.15 ஆயிரத்துக்கு மேல் விலையுள்ள மொபைல் போன்களே அதிகம் விற்பதாகச் சொல்கிறார்கள். காரணம், இந்த தவணைத் திட்டம். இது ஒருவிதமான அபாயம். இளம் தலைமுறை மத்தியில் உள்ள இந்த மனநிலையைக் கண்டிப்பாகத் தடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கி சரியான நேரத்தில் தடை விதித்துள்ளது. வெறும் அறிவிப்போடு நிற்காமல் தீவிரமாகக் கண்காணித்து செயல்படுத்தவும் வேண்டும்’’ என்கிறார் கிருஷ்ணன்.
- வெ.நீலகண்டன்