நிழல்களோடு பேசுவோம்





அமெரிக்க இந்திய அரேபிய அழகியின் நிறம் ‘மிஸ் அமெரிக்கா 2014’ பட்டத்தை வென்ற நீனா தவுலூரி யார் என்று அமெரிக்கர்கள் சிலர் குழம்பிப் போய்விட்டார்கள். பொதுவாக அழகிகளுக்கு நாடோ, தேசமோ இல்லை. இந்த உலகமே அவர்களை சொந்தம் கொண்டாடுகிறது. இந்த உலகில் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகக்கூடிய ஒரு பாஸ்போர்ட், அல்லது எந்தக் கதவையும் திறக்கக்கூடிய பாஸ்வேர்ட் அழகு மட்டுமே. இருந்தும் அந்த அழகின்மீதும் நிறவெறியின் இருட்டு கொஞ்சம் படிந்துவிட்டது. நீனா தேர்ந்தெடுக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களில் சரமாரியான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. ‘ஒரு அரேபிய நாட்டவர் மிஸ் அமெரிக்காவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்’ என்றும், ‘நீனா ஒரு

பயங்கரவாதி’ என்றும், ‘இது செப்டம்பர் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் கன்னத்தில் அறையும் செயல்’ என்றும், ‘அவர் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்’ என்றும் ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நீனா தவுலூரி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஒரு டாக்டர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த அவரது பெற்றோர்கள் 1981லேயே அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்துவிட்டனர்.

அமெரிக்க அழகியாகத் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது ஆசிய அமெரிக்க நாட்டவர் நீனா. இதற்கு முன்பு 2001ல் ஆஞ்சலோ பெர்ஸி பராகியோ என்ற பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் வாரிசான ஒரு பெண் அமெரிக்க அழகிப் பட்டம் வென்றார். 2001ல் எழாத நிறவெறிக் கூச்சல் 2013ல் எப்படி எழுகிறது?
தன்னை கலாசார பன்முகத் தன்மை கொண்ட தேசமாக அமெரிக்கா காட்டிக்கொள்ள முயன்றபோதும், ஐரோப்பியர்களைவிட ஆழமான இனச் துவேஷமும் நிறவெறியும் அவர்கள் பண்பாட்டில் எப்போதும் ஊறிப் போயிருந்திருக்கிறது.

இதற்குமுன்பு அவர்கள் கறுப்பர்களோடு மட்டும்தான் தமது இனத் துவேஷங்களை வெளிப்படையாகப் பராமரித்து வந்தார்கள். ஆனால் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுர தாக்குதல் அவர்களது பாதுகாப்புணர்வை முற்றிலுமாகச் சீர்குலைத்து விட்டது. ‘அன்னியர்களால் தொட முடியாத ஒரு உயரத்தில் இருக்கிறோம்’ என்கிற அவர்களது கற்பனை சுக்கு சுக்காக அடித்து நொறுக்கப்பட்டது. இந்த உலகத்தைப் பழிவாங்குவதற்காக ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இரண்டு கொடூரமான யுத்தங்களை நடத்தி லட்சக்கணக்கானோரைக் கொன்று தீர்த்தார்கள்.

ஆனால் அதோடு அவர்கள் பயம் போகவில்லை. ஒட்டுமொத்த ஆசியாவுமே தங்களுக்கு எதிரான பயங்கரவாதிகளின் கூடாரம் என்ற பிரமையில் அவர்கள் மூழ்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், அரேபியர்கள் என்று எந்த வித்தியாசமும் இல்லை. இந்த நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல் வேற்றுமைகளோ கலாசார வேற்றுமைகளோ அவர்களுக்கு முக்கியமல்ல. ஒரு இந்திய வம்சாவளிப் பெண்ணை ‘அரேபிய முஸ்லிம் பயங்கரவாதி’ என்று வர்ணிக்கும்போது அவர்களது பொது அறிவு எந்த இடத்திலும் குறுக்கிடுவதில்லை.



வெள்ளை நிறவெறி அமைப்புகளினுள் ஊடுருவி படம் பிடித்த ஆவணப்படம் ஒன்றை ‘அல் ஜசீரா’ தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பியது. அமெரிக்காவில் பெருகி வரும் நிறவெறி பிரசாரத்தையும் ஹிட்லரைத் துதிக்கும் கும்பல்களையும் அது வெளிப்படுத்தியது. இந்த அமைப்புகளும் அவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சி, பயங்கரவாதத்தைவிட அதிக அளவில் அமெரிக்கர்களை நிலைகுலைய வைத்துவிட்டது. வேலை
யிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், கடன் நெருக்கடி போன்றவற்றால் அமெரிக்க சமூகம் முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டது.

இதற்கெல்லாம் தீர்வாக பிற சமூகங்களை எதிரியாகப் பார்ப்பது ஒரு பரவலான கொள்கையாகவே வளர்ந்து வருகிறது. ‘உள்நாட்டுப் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்கள்தான் காரணம்’ என்று நம்புவது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பா முழுக்க இருந்து வரும் பிரச்னை. இதன் அடிப்படையில்தான் ஹிட்லர் ஒரு உலக யுத்தத்தை உருவாக்கினார். லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று தீர்த்தார். நிறவெறிச் சக்கரம் சுழன்று மீண்டும் தன்னுடைய இடத்தை நோக்கி வருகிறது. உலகம் முழுக்க அன்னியர்களுக்கு எதிரான வெறுப்பு, காட்டுத் தீ போல வளர்ந்து வருகிறது.

2007ம் ஆண்டில் ஷில்பா ஷெட்டி ‘செலிபிரிட்டி பிக் பிரதர் ரியாலிட்டி ஷோ’வில் சக போட்டியாளர்களால் நிறவெறி விமர்சனங்களுக்கு ஆளானதை மறந்திருக்க மாட்டீர்கள். ஒரு வீட்டில் தங்கியிருந்து அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் தீர்மானிக்கப்படும் ஷோ அது. ஷில்பா அவரது இந்திய உச்சரிப்பிற்காக கேலி செய்யப்பட்டார். இந்திய உணவுப் பழக்கவழக்கங்கள் கேலி செய்யப்பட்டன. மீதமிருந்த சிக்கன் சூப்பை ஷில்பா கழிவறையில் கொட்டினார். அதனால் அதில் அடைப்பு ஏற்பட்டது. போட்டியாளரான ஜேக் ட்வீட், அதில் அடைபட்டிருந்த எலும்புகளை ஷில்பா தன் பற்களால் கடித்து எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அவரது போட்டியாளரான ஜேட் கூடி அவரை ஒரு கட்டத்தில் ‘இந்திய நாய்’ என்று அழைக்கவும் தயங்கவில்லை. ஒரு கட்டத்தில், ‘‘நான் என்னுடைய கௌரவத்தை இழப்பதாக உணர் கிறேன்’’ என்று கண்ணீருடன் கூறினார் ஷில்பா.

பொதுவாக நிறவெறி என்பது பிற சமூகங்களைப் பற்றிய தப்பெண்ணங்களா லும் கட்டுக் கதைகளாலும் உருவாக்கப்படுகிறது. சாதிவெறி, மதவெறிக்கும் கூட இது பொருந்தும். உணவு, வாழ்க்கை முறை என பல்வேறு விஷயங்கள் சார்ந்து அருவருப்பான, கீழ்த்தரமான எண்ணங்களை பிற சமூகங்கள் மீது உருவாக்கிக்கொள்வதன் வாயிலாக, அந்த சமூகம் தங்களிட மிருந்து முற்றாக விலக்கப்பட வேண்டும் என்றோ அல்லது அழிக்கப்பட வேண்டும் என்றோ முடிவுக்கு வருகின்றனர். இது தங்களைப் பற்றிய ஒரு கலாசார மேட்டிமை உணர்வையும் மேலாதிக்க உணர்வையும் அளிக்கிறது. பிறரை விலக்குவதற்கான ஒரு நியாயத்தை வழங்குகிறது.

பிறரை அன்னியர்களாகக் கருதும் அமெரிக்கர்கள், அமெரிக்காவிற்கு தாங்களே அன்னியர்கள் என்பதை உணர்வதில்லை. நாடு பிடிக்கும் யுத்தத்தில் லட்சக்கணக்கான செவ்விந்தியர்களைக் கொலை செய்து அமெரிக்காவை ஆக்கிரமித்த தங்களது வரலாறு அவர்கள் நினைவில் இல்லை. நீனா தவுலூரியை வெளியேறச் சொல்லும் முன்பு, ஒட்டுமொத்த அமெரிக்காவுமே அமெரிக்காவை விட்டு வெளியேறியாக வேண்டும்.

அழகிப் போட்டி என்ற வர்த்தக சூதாட்டத்தில் நிறவெறி என்பது ஒரு அங்கம். சமீப வருடங்களில் உலக அழகிப் போட்டிகளில் ஆசிய நாட்டவர்கள் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுவது தற்செயலானது அல்ல. ஆசியாவை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தங்களது மிஞ்சியிருக்கும் கடைசி சந்தையாகக் கருதுகின்றன. அதை ஆக்கிரமிப்பதற்கு இந்த நாடுகளைச் சேர்ந்த அழகிகள் தேவைப்படுகிறார்கள். ‘மிஸ் அமெரிக்கா’வாக ஒரு ஆசிய நாட்டவர் தேர்ந்தெடுக்கப்படுவதும் இந்த வரிசையில்தான். அழகிகள் தேர்ந்தெடுக்க ப்படுவது அவர்களது அறிவார்த்தமான, மனிதப் பண்புள்ள, புத்திசாலித்தனமான கேள்விகளுக்காக என்ற ஒரு காரணம் தொடர்ந்து சொல்லப்படுகிறது. ஆனால் நீனா தவுலூரி ‘‘நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதை எதிர்க்கிறேன். ஒருவர் தனது உடலின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’’ என்று சொன்னதை உலக மகா தத்துவமாகக் கருதி அமெரிக்க அழகியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். உண்மையில் பெண்களின் உடல்தான் இந்தப் போட்டிகள் அனைத்திலும் ஆதாரமான காட்சிப்பொருளாகிறது. அதைச் சுற்றி ஒரு பெரிய வர்த்தகம் இருக்கிறது. ஒரு கலாசார அரசியல் இருக்கிறது. பெண் பண்டமாகும் அரசியல் அது. (பேசலாம்...)

மனுஷ்ய புத்திரன் பதில்கள்
சுப்ரமணியம் சுவாமி, நாராயணசாமி... என்ன வித்தியாசம்?
- வண்ணை கணேசன், சென்னை.

முதலாமவர் என்ன பேசினாலும் கோபம் வருகிறது; இரண்டாமவர் என்ன பேசினாலும் சிரிப்பு வருகிறது.
இன்றைக்கு பத்திரிகைகளில் எழுதுவதற்கு என்ன தகுதிகள் வேண்டும்?
- கா.சுப்பிரமணியன், நன்னிலம்.

வெவ்வேறு பத்திரிகைகளுக்கு வெவ்வேறு தகுதிகள் இருக்கின்றன.
‘எதிரியைக்கூட மன்னிக்கலாம், துரோகியை மன்னிக்கக் கூடாது’ என்கிறார்களே... ஏன்?
- எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. யாரும் யாரையும் மன்னிக்க வேண்டிய நேரம் ஒன்று வாழ்க்கையில் வரும்.
சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாதா?
- பி.கோபி, கிருஷ்ணகிரி.

முடியலாம். இந்திய சினிமாவின் 200ம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது!
பெட்ரோல் விலையேற்றத்தை மக்கள் கண்டுகொள்ளவில்லையே?
- டி.ஜெய்சிங், கோயமுத்தூர்.

பாம்புக்கூண்டில் வசிப்பவர்களுக்கு
பாம்புக்கடி பழகிவிடும்.

நெஞ்சில் நின்ற வரிகள்
தமிழ்ப் பாடகிகளில் ஒரு கலகக் குரல் என்றாலும், ஒரு அந்தரங்கக் குரல் என்றாலும், முதலில் நினைவுக்கு வருவது எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல்தான். இப்போது குத்துப் பாட்டு என்று அழைக்கப்படும் முந்தைய காபரே பாடல்களில் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் ஒரு தவிர்க்க முடியாத அங்கம். காமத்தை துணிச்சலாக முன்மொழியும் குரல் அது. அந்தக் குரலின் மெல்லிய கரகரப்புத்தன்மைக்கு ஒரு ஆழமான வசீகரம் உண்டு. இசையைக் கடந்து தன்னை ஸ்தாபிக்கும் வசீகரம் அது. நிறைய நேரங்களில் ஆண்களை நோக்கி அந்தக் குரல் கேலியான சவாலை முன்வைத்திருக்கிறது. ‘காதோடுதான் நான் பேசுவேன்’ என்ற இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம், ஒரு பெண்ணின் அந்தரங்கக் குரலை இவ்வளவு அழுத்தமாக வெளிப்படுத்த முடியுமா என்று வியந்திருக்கிறேன். தாய்மைக்கும் காதலுக்கும் இடையே ஒரு அழகிய போராட்டத்தைச் சொல்லும் இந்தப் பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு மிகப்பெரிய நாடகத்தன்மையுடன் கையாள்கிறார். எவ்வளவு காலம் கேட்டாலும் தீராத நாடகம் அது...
காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடிமீதுதான் கண்மூடுவேன்

எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்
திராவிட அரசியல் கருத்துகளை முகநூலில் தீவிரமாக முன்வைத்து வரும் டான் அசோக் பக்கத்திலிருந்து:
பெரியாரின் எந்தப் பேச்சை எடுத்துக்கொண்டாலும் அதிலே அடி வேராய் இருப்பது மனிதநேயம். மனு என்பவனின் கோட்பாட்டால் தங்களைத் தாங்களே ‘உயர்ந்த சாதி’ என்று நமக்கு நாமே திட்டத்தின்படி உயர்த்திக்கொண்ட சாதியினரான பார்ப்பனர்களின் கருத்தியலை அவர் மிகக்கடுமையாக எதிர்த்திருக்கிறாரேயொழிய, என்றுமே அவர் பார்ப்பனர்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் இறங்கியதில்லை. பெண்ணுரிமையைப் பற்றிய அவரது சிந்தனைகள் எல்லாமுமே, அடிமை போல நடத்தப்பட்டு வந்த பார்ப்பனப் பெண்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1900களின் இந்திய சமூகம் மிக மோசமானதாக இருந்தது. மிகக்கொடுமையான சாதிப் பாகுபாடுகளும், அநீதிகளும், சாதி அடுக்கின் பெயரால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அரங்கேறிக்கொண்டிருந்த காலம் அது. அவற்றையெல்லாம் பொறுக்கமாட்டாமல் கோபம் கொண்ட பெரியார் வன்முறையில் இறங்க எல்லாக் காரணங்களும், நியாயங்களும் இருந்தன. வன்முறையில் இறங்கி பார்ப்பனர்களை ஒடுக்குவதற்கான பணமும் சரி, பலமும் சரி பெரியாருக்கு வாய்த்திருந்தது. இருந்தபோதும் அவர் எந்தக் காலத்திலும் வன்முறையை தன் போராட்ட முறையாகக் கையாளவில்லை. பேச்சில்கூட பார்ப்பனர்களின் மேல் வன்மத்தைக் கொணரும் கருத்துகளை உதிர்க்காமல், பார்ப்பனீயம் பிற சாதியினரை அடிமைப்படுத்துவதற்காக உருவாக்கி வைத்திருந்த கொடும் ஆயுதமான அறிவுசார் வன்முறையை அறிவால் மட்டுமே முறியடிக்க முடியும் என்பதில் மிகத் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார். அதைச் செய்தும் காட்டினார்.