கவுண்டமணி பற்றி ஷாருக் கான் விசாரித்தார்! : சத்யராஜ்





இன்றைக்கு சென்னை, நாளைக்கு ஐதராபாத், அடுத்த நாள் மும்பை என்று வட்டமடித்துக் கொண்டிருக்கும் சத்யராஜ், மூன்று மொழியிலும் பிஸியோ பிஸி. ‘சிகரம் தொடு’ ஷூட்டிங் பிரேக்கில் அவரைச் சந்தித்தபோது, ‘‘எங்கிட்ட பேசுறதுக்கு ஒண்ணுமில்லையே பிரதர்...’’ என்றுதான் ஆரம்பித்தார். அதன்பிறகு லொள்ளும் லந்துமாக தூள் பறந்தது ஒரு மணி நேர உரையாடல்...

‘‘இப்பவும் கலக்கிட்டு இருக்கீங்களே?’’
‘‘மணிவண்ணன், பாரதிராஜா, மணிரத்னம், பி.வாசு, ஃபாசிலால் விதைக்கப்பட்ட சத்யராஜ்தான், இன்று ‘நண்பன்’, ‘தலைவா’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’னு வேறு வேறு பரிமாணங்களில் நடிச்சிட்டிருக்கான். அவர்கள் விதைத்த பலனை நான் அறுவடை செய்யறேன். ஒரு பக்கம் ஷாருக் கான், இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன்... பெரிய படம் சின்ன படம்ங்கிற பாகுபாடு பார்க்காமல் என் கேரக்டரை மட்டும்தான் பார்க்கிறேன். இதுவரை வில்லனா 75 படங்கள், ஹீரோவா 100 படங்கள் பண்ணிட்டேன். தொழில் ரீதியா நிறைவான வாழ்க்கையோட நம்ம வண்டி ஜாலியா போயிட்டு இருக்குங்க.’’
‘‘மொட்டை போட்டிருக்கீங்களே...

எந்தப் படத்துக்கு?’’
‘‘அட, இதில என்னங்க ஆச்சரியம் இருக்கு? நமக்கு என்ன ஏற்கனவே மைக்கேல் ஜாக்சன் மாதிரி கர்லிங் ஹேரா இருந்துச்சு. நமக்கு வழுக்கைதானே! இருக்குற நாலு முடியை எடுத்தா மொட்டை அடிச்சிட்டேன்னு சொல்றாங்க. நாமளும் அதை மெயின்டெயின் பண்ண வேண்டியதுதான். இப்போ நான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் வேற வேற கெட்டப்புகள் இருக்கு. அதுக்கு வசதியா இருக்கட்டுமேன்னுதான் மொட்டை. தமிழில் ‘சிகரம் தொடு’, ‘இசை’ படங்களிலும், தெலுங்கில் ராஜமௌலியோட ‘பாகுபலி’ படத்திலும் நடிச்சிட்டு இருக்கேன். ‘சிகரம் தொடு’வில் விக்ரம் பிரபுவுக்கு அப்பாவா நடிக்கிறேன். சிவாஜி சார், பிரபு, இப்போ விக்ரம் பிரபுன்னு நடிகர் திலகம் குடும்பத்தில் மூணு தலைமுறையுடனும் நடிக்கக் கிடைச்ச வாய்ப்பை பெருமையா நினைக்கிறேன்.
ராஜமௌலியோட ‘பாகுபலி’ ஒரு சரித்திரப் படம். இந்தியாவிலேயே அதிக செலவில் எடுக்கப்படும் பிரமாண்ட படம். தமிழ்லயும் ‘மகாபலி’ங்கற பேர்ல வரப்போகுது. மத்தபடி கேரக்டர், கதை பத்தி நான் பேசுறது முறையா இருக்காது!’’

‘‘ ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ அனுபவம் எப்படி?’’
‘‘செம ஜாலி! கேமராமேன் டட்லி, கோத்தகிரிகாரர்தான். பாலிவுட்ல இன்னிக்கு பெரிய ஆளு. ஷூட்டிங் பிரேக்கில் யூனிட்டோட உட்கார்ந்து, நானும் கவுண்டமணி அண்ணனும் நடிச்ச காமெடி சீன்களை சொல்லிச் சொல்லி சிரிப்பார். ஒரு நாள் ஷாருக் கானே, ‘என்னாச்சு... எதுக்கு சிரிக்கிறீங்க’ன்னு கேட்டப்போ, ‘தமிழ்நாட்டில் கவுண்டமணிங்கற நடிகரோட இவர் நடிச்ச படங்களின் காமெடி சீன்கள் அவ்வளவு பிரமாதமா இருக்கும்’னு டட்லி சொல்ல, ஷாருக் ஆர்வமா கேட்டார்.
ஷாருக்குக்கு என்னைப் பத்தி தெரிஞ்சிருந்தாலும், ‘இந்திப் படங்கள் பண்ணியிருக்கீங்களா?’ன்னு விசாரிச்சார். ‘திரிசூல்’ படத்தில் அமிதாப் அப்பாவா சஞ்சீவ்குமார் நடிச்ச கேரக்டரை தமிழில் ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் பண்ணினேன். ‘அக்னிபாத்’ அமிதாப்பச்சன் கேரக்டரையும் தமிழில் பண்ணினேன். இப்ப ‘நண்பன்’ தமிழ் ரீமேக்ல போமன் இரானி நடிச்ச கேரக்டரும் பண்ணியிருக்கேன். இதையெல்லாம் சொன்னதும் ஷாக்காகிட்டார். ‘முப்பது வருஷத்துக்கு முன்னாடியே சஞ்சீவ்குமார் கேரக்டர் பண்ணியிருக்கீங்க. இப்பவும் யூத்தா நடிச்சிட்டு இருக்கீங்க. உங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே’ன்னு சந்தோஷமா கலாய்ச்சார்.



‘என்னம்மா கண்ணு’ன்னு நான் இங்க பேசின டயலாக்கை ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ல அவர் பேசுற சீன் இருக்கு. திடீர்னு அவருக்கு டவுட் வந்து, ‘இது ஒண்ணும் கெட்ட வார்த்தை இல்லையே’ன்னு கேட்டார். யூனிட்டே சிரிச்சிடுச்சு. நாலு தடவை ரிகர்சல் பார்த்து நடிக்கிற சீனை ஒரே டேக்கில் அவர் ஓகே பண்றதை பார்த்துட்டு கட்டிப் பிடிச்சு பாராட்டினேன். ஷாருக் கிரேட்!’’
‘‘அடுத்த இந்திப் படம்?’’
‘‘ம்... ‘நண்பன்’ படத்தோட கதாசிரியர் சேத்தன் பகத்தோட ‘டூ ஸ்டேட்ஸ்’ படத்தில் நடிக்கக் கேட்டாங்க.

இதிலும் தமிழ் அப்பா கேரக்டர். ஒரே மாதிரியான கேரக்டர்ங்கறதாலயும் டேட் இல்லைங்கறதாலயும் வேண்டாம்னு சொல்லிட்டேன். இந்தியை விட தமிழ்தான் நமக்கு வசதியா இருக்கு. எழுதிக் கொடுக்கிற வசனத்தை அப்படியே பேசுற ஆள் இல்லை நான். பேப்பர் வசனத்தை கொஞ்சம் கொஞ்சம் மாத்தி நடிக்கிறவன். அதுக்கு மொழி தெரிஞ்சாதான் நல்லாயிருக்கும். ‘வசனத்தை மனப்பாடம் செய்து நடிப்பது சிறந்த நடிப்பல்ல’ன்னு மார்லன் பிராண்டோ சொல்லியிருக்கார். பின்னணியில் இருந்து வசனத்தை ஒருவர் சத்தமாக சொல்ல, அதை உள்வாங்கி சரியான இடைவெளி விட்டு நடிப்பாக மாற்றி முகபாவனைகளை பிரதிபலிப்பதிலேயே சிறந்த நடிப்பு வெளிப்படும்னு சொல்லியிருக்காங்க. இதை ப்ராம்ப்டிங்னு சொல்வாங்க. இது சிக்கலான விஷயம்னாலும் பழகிட்டா பெஸ்ட். இப்படித்தான் நான் இப்போ நடிச்சிட்டு இருக்கேன். இப்போ சீனா, ஜப்பான் மொழிகளில் நடிக்கச் சொன்னாலும் நடிச்சிடுவேன்.’’

‘‘கவுண்டமணியோட இணைஞ்சு ரொம்ப நாளாச்சே?’’
‘‘ஆமாங்க... நானும் அந்த சந்தர்ப்பத்துக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாவது அவருடன் பேசாட்டி எனக்குத் தூக்கம் வராது. லேசா அவரைக் கிளறினா போதும்... மனுஷன் பேசுற பேச்சில வயிறே புண்ணாயிடும். வீட்டில் என்னோட ரூமில் நான் மட்டும் தனியா சிரிச்சிட்டு இருந்தா கவுண்டமணியோட போன்ல பேசிட்டு இருக்கேன்னு புரிஞ்சுக்குவாங்க. அந்த அளவுக்கு காமெடியா பேசுவார். தமிழ் சினிமாவில் வணங்காமுடின்னா அவர்தான். அவரோட காமெடி மட்டும்தான் பலருக்குத் தெரியும். ஆனா, பழுத்த சிந்தனைவாதி, சுயமரியாதை உள்ள மனிதர்.’’
‘‘பல சீரியஸ் கேரக்டர்களில் நடிச்சிருந்தாலும் சத்யராஜ்னா லொள்ளுதானே ஞாபகத்துக்கு வருது?’’



‘‘ரஜினி சார், ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘ராகவேந்திரர்’னு அற்புதமான படங்களில் நடிச்சிருக்கார். ஆனாலும் ரஜினின்னா ‘மாஸ் ஹீரோ’ ஞாபகம்தான் வருது. அந்த அடையாளத்தை உடைச்சிட்டு வர்றது கஷ்டம். அட, நடிகன்னா ஏதாவது அடையாளம் வேணுமே. நமக்கு லொள்ளுங்கிற அடையாளம் இருந்துட்டுப் போகட்டுமே.’’
‘‘மறுபடியும் ஹீரோவா பார்க்க முடியுமா?’’


‘‘இப்போ சினிமா மாறிடுச்சு சார். புதுசா வர்ற பசங்க டான்ஸ்ல பொளந்து கட்டுறப்போ, நம்ம ஸ்டெப்பெல்லாம் எடுபடுமா? அதான் ரெண்டு ஸ்டெப் தள்ளியே நிக்கணும்னு நினைக்கிறேன். இந்தியில் அமிதாப்பச்சன் நடிச்ச ‘பிளாக்’, ‘சீனிகம்’, ‘பா’ மாதிரி, கதையின் நாயகனா நடிக்கத்தான் விரும்புறேன். தமிழில் இப்போ வித்தியாசமான முயற்சிகள் நடந்துக்கிட்டு இருக்கு. நான் விரும்புற கேரக்டர்களை எனக்காக வடிவமைச்சு கூப்பிட்டா, அடுத்த நிமிஷமே ரெடி!’’
- அமலன்
படங்கள்: புதூர் சரவணன்