பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் வீசுகிறார்கள். ஆபாசமாக திட்டுவதாகவும் வேனுக்குள் வைத்து அடிப்பதாகவும், ஷூவால் உதைப்பதாகவும் கதறுகிறார்கள் பார்வையற்ற பட்டதாரிகள். வாழ்வுரிமை கேட்டுப் போராடும் அந்த அபலைகளை வாகனங்களில் அள்ளிச்சென்று, குப்பைகளைப் போல நகருக்கு வெளியே கொண்டுபோய் கொட்டுகிறது போலீஸ். அத்தனை அடாவடிகளையும் எதிர்கொண்டு, மீண்டும் மீண்டும் வீதிக்கு வந்து, அப்படி என்னதான் கேட்கிறார்கள் அவர்கள்?
‘‘முதல்வர் அம்மாவை சந்திக்கணும். அதுதான் எங்க பிரதான கோரிக்கை. அவங்ககிட்ட எங்க கோரிக்கைகளை சொல்லிக் கதறணும். கடந்த மூணு வருஷமா நாங்க அனுப்புன மனு, கோரிக்கை எல்லாமும் குப்பைக்கூடைக்குப் போயிடுச்சு. எதுவும் நடக்கலே. சட்டப்படி எங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும், கருணை அடிப்படையில சில வேலைவாய்ப்புகளையும்தான் கேட்கிறோம்’’ என்று ஆரம்பிக்கிறார் ‘பார்வை மாற்றுத்திறனாளிகள் சங்க’ நிர்வாகி ராஜா.
‘‘எங்களோட வாழ்க்கையை வேறு யாரும் வாழமுடியாது. அஞ்சு நிமிஷம் கரன்ட் போனாலே மக்கள் துடிச்சுப்போறாங்க. ஆனா வாழ்க்கை முழுதும் இருட்டைச் சுமந்துக்கிட்டு கற்பனை உலகத்துல வாழ்ந்துக்கிட்டிருக்கோம். தமிழ்நாட்டுல மொத்தம் 9 லட்சம் பார்வையற்றவர்கள் இருக்கோம். 70 ஆயிரம் பேருக்குக் கூட அரசாங்கத்தோட ஐ.டி கார்டும் உதவிகளும் கிடைக்கல. வெறும் 12 ஆயிரம் பேர்தான் பள்ளிக்கூடத்தை மிதிச்சிருக்காங்க. 9 ஆயிரம் பேர் பட்டப்படிப்பு முடிச்சிருக்காங்க. பார்வையில்லாத ஒருத்தன் படிச்சு பட்டம் வாங்குறது நம் சமூகத்தில சாதாரண விஷயமில்லை. ‘பார்வையில்லையா... பிச்சை எடு. இல்லைன்னா டிரெயின்ல பர்பி வித்துப் பிழை’ன்னு சொல்ற சமூகம் இது. தடைகளைக் கடந்து படிச்சு பட்டம் வாங்குறவங்களுக்கு சட்டம் சொல்ற இட ஒதுக்கீட்டையாவது தரணும் இல்லையா? தமிழகத்துல 198 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 1183 அரசு உதவிபெறும் பள்ளிகள் இருக்கு. எங்கேயும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படல. ஒரு கல்வி நிறுவனத்துக்கு ஒருத்தருக்கு வேலை கொடுத்தால் கூட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையற்றவர்களுக்கு வேலை கிடைச்சிருக்கும்.
ஆசிரியர் தகுதித்தேர்வில பார்வையற்றவர்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை அறுபதுல இருந்து நாற்பதா குறைக்கணும்; 550 பட்டதாரிகளை கருணை அடிப்படையில இடைநிலை ஆசிரியர்களா நியமிக்கணும்; 100 பேராசிரியர் பணியிடங்களுக்கு பார்வையற்றவர்களை நியமிக்கணும்; இடஒதுக்கீட்டை சரியா பின்பற்றணும்; பார்வையற்ற பட்டதாரிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தணும்; இசை ஆசிரியர் இடங்களுக்கு பார்வையற்ற இசை ஆசிரியர்களையே நியமிக்கணும். இதுமாதிரி 9 கோரிக்கைகளை முன்வச்சு ரெண்டு வருஷமா மனு எழுதுறோம். சின்னச்சின்னதா கவன ஈர்ப்பு போராட்டங்களும் நடத்தியிருக்கோம். போன வருஷம் நவம்பர் மாதம் இதேமாதிரி ஒரு போராட்டம் நடந்தப்போ சமூகநலத்துறை அமைச்சர், ‘ரெண்டு மாசத்துக்குள்ள பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறேன்’னு சொன்னாங்க. ஒண்ணுமே நடக்கல.
அதுக்குப்பிறகுதான் சேப்பாக்கத்துல தொடர் உண்ணாவிரதத்தை ஆரம்பிச்சோம். 9 பார்வையற்றவர்கள். அவங்களுக்கு உதவிக்காக அரைப்பார்வை உள்ள 10 பேர் உண்ணாவிரதம் இருந்தாங்க. ஒரு போராட்டம் நடந்தா எதுக்காக போராடுறாங்கன்னு பார்த்து பேச்சுவார்த்தை நடத்துறதுதான் நடைமுறை. ஆனா, என்ன ஏதுன்னு கேக்காம 19 பேரையும் வேன்ல தூக்கிப்போட்டு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டுப் போயிடுச்சு போலீஸ். நாங்க திரும்பவும் சேப்பாக்கத்துக்கு அவங்களை அழைச்சிட்டு வந்தோம். ராத்திரி 12 மணிக்கு எல்லாரையும் குண்டுக்கட்டாத் தூக்கி வேன்ல போட்டு தாம்பரம், கல்பாக்கம்னு பல இடங்களுக்குக் கொண்டுபோய் ‘இறங்கு, இறங்கு’ன்னு கட்டாயப்படுத்தியிருக்காங்க. ஆனா அவங்க இறங்க மறுத்து ‘எங்களை கண்ணகி சிலைகிட்ட விடுங்க. எங்க கோரிக்கை நிறைவேறுற வரைக்கும் உண்ணாவிரதத்தை தொடருவோம்’னு சொல்லியிருக்காங்க.
ஈசிஆர்ல போய் உத்தண்டி சுடுகாட்டுல வேனை நிறுத்தி, ‘கண்ணகி சிலை வந்திடுச்சு’ன்னு சொல்லி இறக்கி விட்டுட்டுக் கிளம்பிட்டாங்க. அப்போ நடுராத்திரி 2 மணி. சுடுகாடுன்னு தெரியாம அங்கேயே எல்லாரும் படுத்துத் தூங்கிட்டாங்க. காலையில உள்ளூர் ஆட்கள் வந்து எழுப்பி விசாரிக்கும்போதுதான் அவங்களுக்கு விபரம் தெரிஞ்சிருக்கு. பார்வை இல்லாதவங்களை ஏமாத்தி சுடுகாட்டுல இறக்கிவிட்ட காவல்துறை நடவடிக்கையை என்னன்னு சொல்றது? அதுல இருந்த பசங்கள்ல ரெண்டு பேர் பிஹெச்.டி முடிச்சவங்க... அவங்களுக்கு அரசு கொடுக்கிற மரியாதை இதுதான்!
அதுக்குப்பிறகு தான் நாங்க வீதிக்கு வந்தோம். 3 நாள் வரைக்கும் ‘உங்க கோரிக்கை என்ன’ன்னு யாரும் ஒரு வார்த்தை கேட்கலே. மீடியாக்கள் எல்லாம் பேசத்தொடங்கின பிறகுதான் அமைச்சர் வந்தாங்க. அவங்ககிட்ட கோரிக்கைகளை சொன்னோம். எதுவும் நடக்கலே. குற்றவாளிகளைப் போல குண்டுக்கட்டா தூக்கி வேன்ல போடுறது, லத்தியால அடிக்கிறது, கைது செய்து கல்யாண மண்டபங்கள்ல வச்சு ஷூ காலால மிதிக்கிறது, ஆபாசமா திட்டுறது, ராத்திரி பத்து மணிக்கு மேல ரிலீஸ் பண்ணி விரட்டுறதுன்னு எத்தனையோ சித்திரவதைகள். நாங்க என்ன கொலையா செய்தோம்? பெண்களுக்கு நிகழ்ந்த சில சம்பவங்களை சொல்லவே வாய் கூசுது.
உண்ணாவிரதம் இருந்தவங்களை ஒருநாள் வேன்ல ஏத்தி மதுராந்தகத்தில கொண்டு போய் விட்டுட்டாங்க. மயிலாப்பூர்ல ஒரு சமூகநலக் கூடத்துல வச்சு எல்லாரையும் கண்மூடித்தனமா அடிச்சாங்க. அனிதா, ராதிகா, திருநாவுக்கரசு, முத்துப்பிரியா, சரவணன், ராஜவேலு ஆறு பேருக்கும் மோசமான அடி. ஒரு கான்ஸ்டபிளை உக்கார வச்சு, ‘ஏ.சி உக்காந்திருக்கார்... உங்க பிரச்னைகளைச் சொல்லுங்க’ன்னு சொன்னாங்க. நாங்களும் ஒவ்வொரு பிரச்னையா சொன்னோம். அதைக் கேட்டு எல்லா போலீசும் கைதட்டி சிரிச்சாங்க. அந்த அவமானத்தைத் தாங்க முடியாம பலரும் கதறி அழுதாங்க. பாரிமுனையில சாலைமறியல் செய்ய முயற்சி செஞ்சப்போ, ஒரு ஷேர் ஆட்டோ வள்ளியம்மாள்ங்கிற பெண் மேல ஏத்திட்டு நிக்காமப் போயிடுச்சு. அந்தப் பெண்ணுக்கு கால் ஒடிஞ்சிடுச்சு. அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ்காரங்க நின்னாங்க. யாரும் ஆட்டோவை பிடிக்க முயற்சிக்கல.
எவ்வளவு திறமை இருந்தாலும், எவ்வளவு படிச்சிருந்தாலும் தனியார் நிறுவனங்கள் பார்வையற்றவர்களுக்கு வேலை கொடுக்கிறதில்லை. அதனாலதான் அரசாங்கத்துகிட்ட மன்றாடுறோம். ‘ஊனமுற்றோர் சட்டம் 1995’, மாற்றுத்திறனாளிகள் சம உரிமையோடவும், கௌரவமாகவும் வாழ அரசு பொறுப்பேற்கணும்னு சொல்லுது. பிரச்னை தீரும்ங்கற எதிர்பார்ப்போடதான் தினமும் எங்கள் இருட்டு விடியுது...’’ - கலங்கிய கண்களோடு சொல்கிறார் ராஜா.
இதற்கு மேலும் இவர்களை வதைக்காமல் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- வெ.நீலகண்டன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்