எங்கு பொறுமையும் நம்பிக்கையும் இருக்கின்றனவோ, அங்கு நான் சேவகனாக என்றும் இருக்கிறேன். இந்த இரண்டும் இல்லாதவர்கள் என்னை என்றுமே எட்டிப் பிடிக்க முடியாது!
- பாபா மொழி
குல்கர்னி வைத்தியனுக்கு தன் தவறு புரிந்தது. ‘‘சேச்சே! அப்படியில்லப்பா... என் வைத்தியத்தில் எப்படி குணமாகாமல் போகும்? பரம்பரை பரம்பரையாக வைத்தியம் பார்க்கும் வீடு இது!’’ என்றான் அவன்.
‘‘வைத்தியரே! பேச்சை நிறுத்திவிட்டு சிகிச்சை அளியுங்கள்’’ என்றான் சங்கரோடு வந்தவன்.
ரோஷத்துடன் அவனைப் பார்த்து, ‘‘நீ ஒண்ணும் எனக்கு புத்தி சொல்ல வேண்டாம்’’ என்ற குல்கர்னி, ‘‘சரி... படு’’ என்றான் சங்கரிடம்.
சங்கர் படுத்தான். அவனுடைய கண்கள் கோவைப் பழம் போல சிவந்திருந்தன. கற்பூர வில்லைகளைக் கண் மேல் வைத்தான் குல்கர்னி. சிறிது நேரம் கழித்து, ‘‘முன்னைவிட இப்பொழுது தேவலை அல்லவா?’’ என்றான்.
‘‘இல்லை...’’
‘‘சரி! நான் போய் பச்சிலையுடன் வருகிறேன். கற்பூர வில்லையை எடுக்காதே’’ என்றபடி நகர்ந்தான் குல்கர்னி. சங்கர் பேசாமல் படுத்திருந்தான். கூட வந்தவனும் உட்கார்ந்திருந்தான். சிறிது நேரங் கழித்து, ‘‘சங்கர், எப்படிடா இருக்கு?’’ எனக் கேட்டான்.
‘‘அப்படியே இருக்கு! நாம் சாய்பாபாவிடம் போயிருக்கணும். அனாவசியமாக இவனிடம் வந்தோம்!’’ - சங்கர் வெறுப்புடன் சொன்னான். கடும் வேதனையால் அவன் துடித்தான். அப்போது வைத்தியனின் மனைவி அங்கு வந்தாள். ‘‘உங்களுடைய பேச்சிலிருந்து நான் சாயியின் பெயரைக் கேட்டேன். அவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?’’
‘‘பாபா பெரிய வைத்தியர், யோகி, பரமேஸ்வரர் என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்!’’
குல்கர்னியின் மனைவி கையைக் கூப்பி, ‘‘இந்த வைத்தியராஜ் என் கணவர்தான். இருந்தாலும் நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் சாயிபாபாவிடம் போங்கள். சாட்சாத் கடவுள் இருக்கும்போது எதற்காக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? போங்கள், சீக்கிரம். என் நமஸ்காரத்தை பாபாவிடம் சொல்லுங்கள்!’’ என்றாள்.
இருவரும் வாசலை நெருங்கியபோது வைத்தியன் வந்துவிட்டான். ‘‘உங்களுக்காக ரொம்ப தூரம் சென்று பச்சிலை பறித்துக்கொண்டு ஓடோடி வருகிறேன். நீங்கள் எங்கோ புறப்பட்டுவிட்டீர்களே?’’
‘‘வைத்தியரே! அவனுடைய கண்கள் நெருப்பு போல எரிகின்றன. வீக்கம் குறையவே இல்லை. நாங்கள் பாபாவிடம் போகிறோம்.’’
‘‘நினைத்தேன். நான் வைத்தியன், எனக்கு ஆயுர்வேதம் தலைகீழ் பாடம். அந்த பக்கீருக்கு மருந்தைப் பற்றி என்ன தெரியும்? துனியிலிருந்து இரண்டு சிட்டிகை சாம்பல் எடுத்து கண்களில் விடுவான். அவ்வளவுதான்... நீ குருடனாகிவிடுவாய்!’’
வைத்தியன் சொன்னதற்கு பலன் இருந்தது. இருவரும் உள்ளே வந்தனர். சங்கரைப் படுக்க வைத்து, ஒரு கண்ணில் பச்சிலையைப் பிழிந்தான்... அவ்வளவுதான்! ‘‘அம்மா, நான் செத்தேன்...’’ என்று பெரிதாக ஓலமிட்டான் சங்கர். அவனுடைய உடல் நடுங்கியது. கை, கால்களை உதற ஆரம்பித்தான்.
‘‘சங்கர்... முதலில் இப்படித்தான் எரிச்சல் இருக்கும். மனதை திடப்படுத்திக் கொள். இரண்டு நிமிடங்களில் சாந்தமாகும்’’ - மனதில் பயந்துபோன வைத்தியன், ஏதேதோ நம்பிக்கை வார்த்தைகளைச் சொன்னான். உள்ளே இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த வைத்தியனின் மனைவிக்குக் கண்ணில் நீர் வழிந்தது. அவள் அங்கிருந்தபடியே பாபாவை மனதால் வேண்டிக் கொண்டாள்.
சங்கரின் கண் உபாதை தேறுவதாகத் தெரியவில்லை. எரிச்சல்தான் இன்னும் அதிகமாயிற்று. அரை மணி நேரம் கழிந்தது.
‘‘அம்மா... என்னால் பொறுக்க முடியவில்லையே. இந்த வைத்தியன் மருந்து போடவில்லை. விஷம் போட்டிருக்கிறான்...’’ - சங்கர் அலறினான். அவனால் அழக்கூட முடியவில்லை. காரணம், கண்ணிலிருந்து கசியும் நீர், எரிமலைக் குழம்பு போல வேதனையை அதிகப்படுத்தியது.
‘‘கடவுளே! இவனுக்காக நான் எவ்வளவு பிரயாசைப்பட்டேன். இவன் என்னவோ நான் கண்ணில் விஷம் விட்டதாகச் சொல்கிறானே. ராம்... ராம்! எழுந்திருப்பா... போ... எங்கே போகணுமோ அங்கே. ஓடு அந்தப் பக்கீரிடம். அவன் உன் கண்ணில் முந்திரிக்கொட்டையைப் பிழிந்துவிடுவான். அவ்வளவுதான் போச்சு! நீ ஆயுள் முழுவதும் கையில் தடியுடன் குருடனாகத்தான் வாழணும்! எனக்கு என்ன போச்சு!’’ என்று வசைபாடி வைத்தியன் அவர்களை விரட்டினான்.
உள்ளே நின்றிருந்த தன் மனைவியைப் பார்த்ததும் குல்கர்னிக்கு இன்னும் ஆத்திரம் வந்தது. ‘‘நான் போன பிறகு அவர்களுக்கு நீ ஒன்றும் சொல்லவில்லையே, அந்த பக்கீரைப் பற்றி?’’
‘‘நான் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அதுதான் சாயிபாபாவைப் பற்றி ஊரே சொல்லுகிறதே!’’
‘‘அட்ரா சக்கை! இப்பொழுது நம் வீட்டிலேயே விரோதி கிளம்பியாச்சா? சொல்கிறேன் கேட்டுக்கோ... மகாராணி அவர்களே! அந்த மசூதி பக்கம் கால் எடுத்து வைத்தாயோ, காலை உடைத்துவிடுவேன். நான் போகிறேன். அந்தப் பைத்தியக்கார பக்கீர் என்ன மருந்து கொடுக்கிறான் என்று பார்க்கத்தான் வேண்டும். நீ போ உள்ளே... சமையலை கவனி!’’ என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தான்.
சங்கர் துவாரகமாயிக்கு வந்து சேர்ந்தான். ‘‘பாபா... என்னைக் காப்பாற்றுங்கள். நான் குருடனாகிவிடுவேன் போல் இருக்கிறது!’’
சங்கரைப் பார்த்து அதிர்ந்துவிட்டார் சாயி. கண்களைப் பார்க்க முடியாமல் வீங்கியிருந்தன. இவ்வளவு பயங்கரத்தை அவர் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை. ‘‘இப்படி உட்கார். என்ன இப்படி நோயை அதிகமாக்கிக் கொண்டு வந்திருக்கிறாய்? சரி... சரி... பயப்படாதே. ஷாமா...’’
‘‘என்ன பாபா?’’
‘‘கொஞ்சம் முந்திரிக்கொட்டையைக் கொண்டுவா!’’
சங்கருக்கு வைத்தியன் சொன்னது அப்போது ஞாபகத்திற்கு வந்தது. சிறிது நேரத்தில் வைத்தியனும் அங்கு வந்தான். ‘‘என்ன சாயி மகராஜ்?’’ - குதர்க்கமாகப் பேசலானான் வைத்தியன். ‘‘இவர்களுக்கு நான் முன்னமேயே சொல்லியிருந்தேன், நீ கொட்டையைப் போடாமல் இருக்கமாட்டாய் என்று. அதேபோல செய்யப்போகிறாய். உன் புத்தியை எங்காவது அடகு வைத்துவிட்டாயா? கொட்டையைப் பிழிந்து அதன் சாறு கண்களில் விழுந்தால் என்னவாகும்?’’
‘‘வைத்தியரே, பிழிவதற்கு நான் யார்? மேலே அல்லா உட்கார்ந்திருக்கார். அவர்தான் எல்லாம் செய்யப் போகிறார்!’’
‘‘நன்றாக நாடகமாடுகிறாய்! நானும் பார்க்கிறேன், என்ன ஆகிறதென்று?’’

‘‘அல்லாஹ் மாலிக்!’’ என்று சொல்லி, கொட்டையை நன்கு நசுக்கி, இரண்டு உருண்டைகளாக்கி, சங்கரின் கண்களின்மேல் அழுத்தி வைத்தார். பிறகு அதன்மேல் கட்டுப் போட்டார்.
எல்லோரும் பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சங்கர் ஒருகணம் பெரிதாக முனகினான். பிறகு முனகல் சற்றுக் குறைந்தது. ஒரு மணி நேரம் கழித்து அமைதியானான். ‘‘அவன் அமைதியாகத் தூங்குவான். காலையில் அழைத்துவா, அல்லா அவனை நலமாக்குவார்’’ என்றார் பாபா.
‘இந்த பக்கீர் பையன் ரொம்பவே புத்திசாலியாகக் காணப்படுகிறான். மந்திரக்காரன், சூனியக்காரன்! ராம்... ராம்... இவனை விட்டு தூரப் போவதுதான் நல்லது’ என்று நினைத்தபடி குல்கர்னி மறைந்துவிட்டான்.
மறுநாள் சங்கரின் கட்டை அவிழ்த்தார் பாபா. கண்களில் குளிர்ந்த நீரை விட்டார். வீக்கம் ரொம்பவே குறைந்திருந்தது. கண்களின் சிவப்பும் குறைந்திருந்தது. கண்களில் வந்த நோய் ஓடிப் போயிற்று. பளிச்சென்ற கண்களுடன் கண்குளிர பாபாவைப் பார்த்து வணங்கினான்.
‘‘கண்களைப் போலவே, மனத்தையும் சுத்தமாக வைத்திரு!’’ என்று அவனை ஆசீர்வதித்து அனுப்பினார் பாபா.
ஒருநாள் பாபா கொளுத்தும் வெயிலில் தோளில் ஜோல்னாப் பையும், கையில் தட்டும் எடுத்துக் கொண்டு ஷீரடிக்குள் நுழைந்தார். முதலில் மசூதி அருகிலிருக்கும் பயாஜி கோதே பாட்டீலின் வீட்டு வாசற்படியில் வந்து நின்று, ‘‘குழந்தைகளே! ஒரு ரொட்டி இருந்தால் கொண்டுவாருங்கள்’’ எனக் குரல் கொடுத்தார்.
உள்ளே ஒரு சின்னப்பெண் இருந்தாள். ‘‘அம்மா, பாபா வந்திருக்கார்... பாபா வந்திருக்கார்... சீக்கிரம் ரொட்டி கொண்டா, நான் கொடுக்கிறேன்...’’ - பாபாவைப் பார்த்ததும் ஆனந்தத்துடன் குதித்துக் கத்தினாள்.

‘‘சூடாக இருக்கு, உன் கையைச் சுட்டுடும். நான் அவருக்குக் கொடுக்கிறேன்’’ என்றாள் தாய்.
‘‘முடியாது! பாபாவிற்காக என் கை சுட்டாலும் பரவாயில்லை. நானே கொடுப்பேன்’’ - சிறுமி அடம் பிடித்தாள்.
‘‘சரியான அடங்காப்பிடாரி... இந்தா, ரொட்டி நல்ல சூடு...’’ - சிறுமியின் கையில் தாய் வைத்தாள். அதை இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி சூட்டுடன் ஓடிவந்து, சாயியின் ஜோல்னாப் பையில் போட்டாள்.
‘‘குழந்தாய்’’ - அன்புடன் பாபா அவளை அழைத்தார்.
‘‘என்ன பாபா?’’
‘‘நான் எவ்வளவு ரொட்டி கேட்டேன்?’’
‘‘ஒன்று!’’
‘‘ஒன்றுதானே?’’
‘‘ஆமாம்!’’
‘‘பின் ஏன் இரண்டு வைத்தாய்?’’
‘‘அம்மாதான் சொன்னாள், ‘நாம் எவ்வளவு கொடுக்கிறோமோ, அதற்கு இரண்டு மடங்கு பாபா நமக்குக் கொடுப்பார்’ என்று...’’
இதைக் கேட்டு பாபா பெரிதாகச் சிரித்தார். ‘‘அடப் பைத்தியமே! உங்களுக்கு இரண்டு மடங்கு கொடுக்கும் நிலையில் நான் இருந்தால், நான் ஏன் ஒரு ரொட்டிக்காக பிச்சை எடுக்கிறேன்?’’
அச்சிறுமிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘‘பாபா, நீங்கள் ஒரு தெய்வம் என்று என் அம்மாவும் அப்பாவும் சொல்கிறார்கள். எனவே, உங்களுக்கு ரொட்டி கொடுப்பதில் எனக்கு சந்தோஷம் உண்டாகிறது. தினமும் என்னிடம் வாருங்கள். நானே தினமும் உங்களுக்கு ரொட்டி தருகிறேன். வருகிறீர்களா?’’
பாபா அந்தச் சிறுமியை அன்புடன் தூக்கிக்கொண்டார். அவளை கிச்சுகிச்சு மூட்டினார். கன்னத்தில் முத்தமிட்டார். பிறகு அவளைக் கீழே இறக்கிவிட்டுச் சொன்னார். ‘‘இவ்வளவு சூட்டிகையான பெண் என்பதால், நான் தினமும் வருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை...’’
‘‘என்ன?’’
‘‘நீயும் என் இடத்திற்கு வரணும்!’’
‘‘எங்கே?’’
‘‘துவாரகமாயிக்கு...’’
‘‘வருகிறேன். விளையாட வருவேன். நாம் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடலாமா?’’
‘‘நிச்சயமாக!’’
‘‘ஆனால் பாபா...’’
‘‘என்ன?’’
‘‘நீங்களோ தெய்வம்...’’
‘‘அதற்கென்ன?’’
‘‘தெய்வம் எப்படி மனிதர்களுடன் விளையாடும்?’’
‘‘குழந்தே! அல்லா கடவுள்... அங்கு மேலே உட்கார்ந்திருக்கிறார். நானோ அல்லாவின் அடிமை. உண்மையைச் சொல்லட்டுமா? கடவுளின் வசீகரம், முகலட்சணம் எல்லாம் உன்னைப் போன்ற குழந்தைகளிடம்தான் காணப்படுகின்றன. எனவே, உங்களுடன் விளையாடுவது என்றால், கடவுளிடம் விளையாடுவது போலத்தான்!’’
‘‘அப்படியா? நாங்களும் கடவுள், நீங்களும் கடவுளா? தெய்வம் தெய்வத்தோட விளையாடுமா? நல்லா இருக்குமே! கடவுள் ஒளிந்துகொள்வார். கடவுள் தேடுவார்! ஒரே சந்தோஷம்தானே!’’
‘‘சரி, இப்போது விளையாடலாமா?’’
‘‘இப்பவேவா?’’ - நாக்கை வெளியே நீட்டி, மிகுந்த ஆச்சரியத்துடன் அச்சிறுமி கேட்டாள்.
‘‘ஆமாம்! இப்பவே...’’
‘‘என்ன விளையாட்டு?’’
‘‘தட்டாமாலை...’’
‘‘அம்மாடி...’’ - லஜ்ஜையுடன் முகத்தில் கை வைத்துக்கொண்டு, ‘‘இது பெண்களின் விளையாட்டல்லவா?’’ என வினவினாள்.
‘‘அதனால் என்ன? நான் விளையாடுகிறேன்!’’
‘‘நிஜமாகவே விளையாடலாம்...’’
‘‘சரி, இப்படி வா...’’ - பாபா தட்டை அருகில் வைத்தார். ஜோல்னா பையையும் கீழே வைத்தார். பிறகு இருவரும், வலது - இடது கையை ஒருத்தருக்கு ஒருத்தர் பிடித்துக்கொண்டு, தட்டாமாலை சுற்றலானார்கள். சிறிது சிறிதாக வேகத்தைக் கூட்டினார்கள். இதைக் கண்டு, இன்னும் சில குழந்தைகள் கூடினார்கள். பெரியவர்களும் சேர்ந்து, இந்த விளையாட்டைப் பார்த்து மகிழ்ந்தார்கள். பாபாவே குழந்தைகளுடன் சேர்ந்து குழந்தையாகி விளையாடினார். மற்ற குழந்தைகளும் ஜோடி சேர்ந்து விளையாடினார்கள். சந்து பொந்துகளிலிருந்து கிழவிகள், பெண்கள் வந்து வேடிக்கை பார்த்ததோடு நிற்காமல், அவர்களும் ஜோடி சேர்த்துக்கொண்டு தட்டாமாலை விளையாடினார்கள். முதலில் இதை பாபாதான் ஆரம்பித்து வைத்தார்.
எல்லோருக்கும் சந்தோஷம்... சொல்ல முடியாத உற்சாகம்!
மனம் திறந்து, சுத்தமான எண்ணங்களுடன் ஆடிப் பாடினார்கள்.
வாராவாரம் ஷீரடிவாசிகள் மத்தியில் பாபாவே விளையாட்டில் கலந்துகொண்டு அவர்களை உற்சாகமூட்டியதால், மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
(தொடரும்...)