கடைசி பக்கம் : நிதர்ஸனா

காலிங் பெல் ஓசை கேட்டு கதவைத் திறந்தார் அந்தப் பெண். வாசலில் கண்ணியமான தோற்றத்தோடு ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி நின்றிருந்தார். அவர் கையில் ஒரு ஆல்பம். ‘‘பக்கத்து ஏரியாவில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தறோம். நிறைய குழந்தைங்க இருக்காங்க. உங்க பிள்ளைகளோட பழைய துணிகளைக் கொடுத்து உதவ முடியுமா? ப்ளீஸ்...’’ என்றார்.
குழந்தைகள் வளர்ந்துவிட்டதால், நல்ல நிலையிலேயே நிறைய பழைய டிரஸ் வீட்டில் இருந்தது. வார்ட்ரோபை அடைத்துக் கொண்டிருந்த அவற்றை யாரிடமாவது தந்துவிடலாமா என அவரே யோசித்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது பிள்ளைகளை ஸ்கூலுக்குக் கிளப்பும் அவசரத்தில் இருந்தார். ‘‘சனிக்கிழமை வர முடியுமா?’’ என்றார்.
வந்த பெண்மணியும் புரிந்துகொண்டார். ‘‘நான் நிதானமா சனிக்கிழமை வர்றேன். ஒருவேளை நீங்க வெளியில போறதா இருந்தாலும், ஒரு பையில போட்டு கதவுக்கு வெளிய இருக்கற இந்த வராண்டாவுல வச்சிடுங்க. நான் எடுத்துக்கறேன்’’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
சனிக்கிழமை அவர்கள் குடும்பத்தோடு சினிமா பார்க்கப் போனார்கள். அப்படியே ஷாப்பிங் மாலில் சுற்றிவிட்டு, வெளியில் டின்னர் சாப்பிட்டுவிட்டு இரவு களைப்பாக வீட்டுக்கு வந்தபோது வராண்டாவில் ஒரு கவர் இருந்தது. ‘‘அடடா! இந்த தொண்டு நிறுவனத்துல இருந்துதான் டிரஸ் வந்து கேட்டாங்க. எடுத்து வைக்கணும்னு நினைச்சேன். மறந்துடுச்சு’’ என்று கணவனிடம் சொன்னபடி அந்தப் பெண் கடிதத்தைப் பிரித்தார். ‘நீங்கள் துணிகள் கொடுத்து உதவியதற்கு நன்றி’ எனக் கடிதம் இருந்தது. அப்போது தான் உறைத்தது... இஸ்திரி செய்வதற்காக மூட்டையாகக் கொடுக்கும் துணியை அவர்கள் வழக்கமாக வராண்டாவில் வைப்பார்கள். அந்தப் பையைக் காணோம். மறதியால் எப்போதுமே இழப்புகள்தான்!
|