உமக்கு ஏன் கடுப்பு?





மதுவுக்கு அடிமையாவதைப் போல இன்றைய சமுதாயம் பரோட்டாவிற்கு அடிமையாகி விட்டது. ஆரோக்கியக் கேடான பரோட்டாவை எதிர்க்கும் போராட்டம் போற்றத்தக்கது!
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

‘பாண்டிய நாடு’ திரைப்பட ஜோடி விஷால்-லட்சுமி மேனன் அட்டைப்படம், படு பாந்தம். விஷால் அப்பாவாக பாசத்திற்குரிய பாரதிராஜாவா? அந்தக் காம்பினேஷனைக் காண இப்போதே ஆவல் அள்ளுகிறதே!
- அ.சுகுமார், காட்பாடி.

‘குடிதண்ணீரை அரசு விற்பது சரியல்ல’ என்று சமூக ஆர்வலர்கள் வாதம் பண்ணியிருந்ததெல்லாம் ஓகேதான். ஆனால், அரசு ‘தண்ணி’யையே ஊத்திக் கொடுக்கும்போது, தண்ணீர் விற்பது பாவமா? விடுங்க பாஸ்!
- எஸ்.பிரசன்னகுமார், வேலூர்.

‘சைமா’ விழாவை சுவையான ‘கைமா’ பண்ணி கொடுத்ததுக்கு நன்றி! விழாவை நேரில் பார்த்த மாதிரியே உங்க கவரேஜ் செம கிளுகிளுப்பு. ஆனால், அங்கே ராணா, த்ரிஷா பக்கத்துல உட்கார்ந்தா உமக்கு ஏனய்யா... கடுகடுக்குது?
- ஆறுமுகம், தேனி.

‘மனித உயிருக்கே மதிப்பில்லாத உலகில்’ கிளியைக் காப்பாற்ற உயிர்விட்ட அருண்குமாரின் மறைவு கண்களைக் கரைத்தது. அவர் தந்தையின் வார்த்தைகளில் புத்திர சோகத்தை அப்படியே தரிசித்தோம்!
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

பூனை, அணில், உடும்பு என பல உயிர்களை தன் வருமானம் முழுவதும் செலவு செய்து காப்பாற்றி வரும் கும்பகோணம் சடகோபன் பற்றிப் படித்ததும் மனம் நெகிழ்ந்தது. இவர் போன்ற மனிதர் இருப்பதால்தான் நாட்டில் கொஞ்சமாவது மழை பொழிகிறது.
- எம்.ஜி.பரத், திண்டுக்கல்.

சமீரா ரெட்டியின் ஆடை சர்ச்சையை ஏற்படுத்தியது என்று சொல்லிவிட்டு, நீர் ஏன் மறுபடியும் அதே ஸ்டில்லைப் போட்டு சச்சரவை ஏற்படுத்துறீர்? ரசிக்கணும்னா ரசிச்சுட்டுப் போங்களேன்ய்யா. சர்ச்சையாவது, சாம்பார் வெங்காயமாவது!
- ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.

லீனா மணிமேகலையின் நேர்காணல், ஈழப் பிரச்னையில் முக்கியமானதொரு சாட்சியம். ‘நசிந்து போன ஈழ மக்களின் வீடுகளில் சாமி படங்களை விட, இறந்தவர்களின் படங்கள்தான் அதிகம் இருக்கின்றன’ என்ற வரிகளைப் படித்தபோது கண்கள் குளமாகின.
- மா.மாரிமுத்து, ஈரோடு-1.

இமான் அண்ணாச்சி, ‘கீரையும், தக்காளியும் விற்ற காமெடி அனுபவங்கள்’ அருமைண்ணே... அருமை!
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.

பஞ்சு அருணாசலத்தின் பாடல் வரிகளான ‘வாழ்வே... மாயமா?’ பாடல், ‘காயத்ரி’ படம் வெளியானபோதே சூப்பர் ஹிட். மனுஷ்ய புத்திரனின் நெஞ்சில் நின்ற அந்தப் பாடல் எங்கள் நெஞ்சிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது.
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.