ஆஸ்கருக்கு அவமானம் பார்சல்?





குஜராத்காரரான நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக களத்தில் இறங்கும் நேரத்தில், இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக ஒரு குஜராத்தி மொழிப்படத்தை ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு அனுப்புகிறது இந்தியா. மோடி களம் போலவே இதிலும் சர்ச்சைகளுக்கு சிறிதும் பஞ்சமில்லை. இன்னொரு பக்கம், ‘எங்களை அவமானப்படுத்தும் படத்தை அனுப்பி சர்வதேச தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டார்கள்’ என குஜராத்தில் போராட்டம் நடக்கிறது.

‘சிறந்த வெளிநாட்டு மொழிப்படம்’ என்ற பிரிவில் ஒரு ஆஸ்கர் விருது தரப்படுகிறது. இதற்கு இந்தியாவிலிருந்து ஒரே ஒரு படத்தைத்தான் அனுப்ப முடியும். இந்த ஆண்டு இதற்குக் கடும் போட்டி. கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட 20 படங்களிலிருந்து நடுவர் குழு தேர்ந்தெடுத்தது ‘தி குட் ரோட்’ என்ற குஜராத்தி படத்தை!  
இதுவரை இந்தப் பிரிவில் இந்தியப்படம் எதுவும் ஆஸ்கர் வென்றதில்லை. கடைசிகட்ட நாமினேஷனுக்கு இந்திய சினிமா வரலாற்றில் மூன்றே படங்கள்தான் போயிருக்கின்றன. ‘‘இந்த ஆண்டு இந்தியா கண்டிப்பாக விருது வாங்கியிருக்கும். அந்த வாய்ப்பை நாம் தவற விட்டுவிட்டோம்’’ என சினிமா பிரபலங்கள் பலரும் வருந்துகிறார்கள். காரணம், ‘தி லஞ்ச் பாக்ஸ்’ படம்.



ரிதேஷ் பத்ரா டைரக்ட் செய்த இந்தப் படம் சமீபத்தில்தான் வெளியானது. ஆனாலும், உலகெங்கிலும் பரவலான வரவேற்பு பெற்ற இந்திப் படமாக இது இருக்கிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் விருது வென்றது. டெல்லுரிட் மற்றும் டொரண்டோ திரைப்பட விழாக்களில் பாராட்டப்பட்டது. படத்துக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்துவிட்டு, சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இதை அமெரிக்காவில் வெளியிட முடிவு செய்திருக்கிறது. மைக்கேல் மூர், சல்மான் ருஷ்டி என பிரபலங்கள் இந்தப் படத்தை அப்படி சிலாகித்திருக்கிறார்கள். ‘வெளிநாட்டு மொழி படங்களுக்கான ஆஸ்கர் போட்டியில் டாப் 5 படங்கள் பட்டியலில் இடம்பெறும் தகுதி இதற்கு உண்டு’ என அமெரிக்க சினிமா விமர்சகர்கள் எழுதித் தள்ளியிருக்கிறார்கள்.

‘‘இவ்வளவு பிரபலமான, பாராட்டு பெற்ற ஒரு படம் போட்டிக்குப் போகும்போது, ஜூரிகளுக்கு முடிவெடுக்க அதிக சிரமம் இருந்திருக்காது. சுலபமாக பரிசு கிடைத்திருக்கும். வாய்ப்பு போச்சு’’ என சினிமா பிரபலங்கள் பலரும் புலம்புகிறார்கள்.

‘‘என் படத்தைப் பார்க்காதவர்கள்தான் இப்படி விமர்சனம் செய்கிறார்கள். பார்த்தால் முடிவை மாற்றிக் கொள்வார்கள்’’ எனச் சொல்கிறார் ‘தி குட் ரோட்’ பட இயக்குனர் கியான் கோர்ரியா. விளம்பரப் பட இயக்குனரான இவரது முதல் படமே இதுதான். இத்தனைக்கும் கோர்ரியாவுக்கு ஒரு குஜராத்தி வார்த்தைகூடத் தெரியாது.



உப்புப் பாலைவனமான கட்ச் வளைகுடாப் பகுதி நெடுஞ்சாலையில்தான் கதை பயணிக்கிறது. கொளுத்தும் வெயிலும், வெடித்துப் பிளந்து கிடக்கும் நிலமுமாக இயற்கை இரக்கமற்று சுட்டெரிக்கும் இந்தப் பகுதியில் மனிதர்களும் அதேபோலவே இருப்பார்கள். இந்தச் சாலையில் பயணிக்கும் ஒரு தம்பதியர் தங்களது 7 வயது மகன் ஆதித்யாவைத் தொலைக்கிறார்கள். ஒரு லாரி டிரைவர் அவர்கள் உதவிக்கு வருகிறார். இதேபோல தன் பாட்டி வீட்டுக்குப் போகும் 7 வயதுச் சிறுமி பூனம், வழி தொலைத்து நெடுஞ்சாலை ஓரக் குடில் ஒன்றில் அடைக்கலம் தேடுகிறாள். அது, சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் இடம்.

இந்தக் குழந்தைகளின் நுண்ணிய உணர்வுகளை விவரிக்கும் ஒன்றரை மணி நேரப் படம்தான் இது. தேசிய விருது வாங்கியிருக்கிறது. ‘‘ஆஸ்கரும் வாங்கும்’’ என்கிறார் கோர்ரியா. ஆனால், ‘‘சிறுமிகள் பாலியல் தொழில் செய்வது கட்ச் வளைகுடாப் பகுதியில் இல்லை. இல்லாத ஒன்றைக் காட்டி குஜராத்தை அவமானப்படுத்துகிறது படம்’’ என ஒரு கோஷ்டி போராடுகிறது.
ஆஸ்கரில் என்ன நடக்குமோ?
- அகஸ்டஸ்