தொண்டு : வீ.உதயக்குமாரன்





அன்று முகூர்த்த நாள் என்பதால் பேருந்து நிலையத்தில் திருவிழாக் கோலம். நீண்ட நேரம் கழித்து அந்தப் பேருந்து வந்ததால், பெரும் கூட்டம் பின்னாலேயே ஓடியது. உள்ளே இருப்பவர்கள் இறங்கும் முன்பாகவே எல்லோரும் படிகளை அடைத்துக் கொண்டார்கள். முண்டியடித்துக்கொண்டு நெருங்கி, துண்டைப் போட்டு இடம் பிடித்த கலியமூர்த்தி, நிதானமாக உள்ளே போனார். தன் துண்டின் மீது உட்காரப் போனவரைப் பார்த்து சத்தம் போட்டார்.
‘‘யோவ், அது என் துண்டு.’’
உட்காரப் போனவர் கோபத்துடன் சீறினார்.
‘‘உட்கார வேண்டியதுதானே... ஏன் நிக்கிறே?’’
கலியமூர்த்தி சிரித்துக்கொண்டே அந்த மாற்றுத் திறனாளி இளைஞனை சைகை காட்டி, ‘‘தம்பி... நீ போய் உட்கார்’’ என்றார்.

நன்றியை புன்னகையாய் வெளிப்படுத்தியபடி அந்த இளைஞன் அமர்ந்தான். கலியமூர்த்தி தொடர்ந்தார்.
‘‘நாட்டுல மனிதநேயம் கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டிருக்கு. எந்தக் குறையுமே இல்லாதவங்க பஸ்ல உட்கார்ந்துட்டு வர்றாங்க. கர்ப்பிணிகள், கைக்குழந்தையோட வர்றவங்க, மாற்றுத் திறனாளிகள் இவங்க நின்னுக்கிட்டே வந்தாலும் யாரும் கண்டுக்கிறதில்ல. இது துண்டு போட்ட நான் செய்ற தொண்டு. நான் உட்கார இல்லை...’’
பயணிகள் அனைவரும் கலியமூர்த்தியை மரியாதையுடன் பார்த்தார்கள்.