காதலி : காயத்ரி





‘‘ஆயிரம் இருக்கட்டும் வித்யா. ஒரு ‘ஹலோ’ கூடவா சொல்ல முடியாது. டீசன்ட்டாதானே பிரிஞ்சோம். அவ பண்ணினதுதான் அநியாயம்!’’
ஜெகன் புலம்பினான். மனைவி வித்யா சமாதானப்படுத்தினாள்.

‘‘விடுங்க... அவளுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்!’’
நண்பனின் ரிசப்ஷனுக்கு அவனது மாஜி காதலி ராதா தன் கணவனோடு வந்திருந்தாள். ஜெகனைக் கண்டுகொள்ளவில்லை.
‘‘நான் ஒண்ணு சொன்னா கோபப்பட மாட்டீங்களே?’’
‘‘சொல்லு வித்யா...’’
‘‘வாழ்க்கை விசித்திரமானதுங்க! இதே ஃபங்ஷன்ல, எனக்கு லவ் லெட்டர் தந்தவனை நானும் பார்த்தேங்க. என்னோட அவன் பேசலை...’’
‘‘வாட்? யார் அது... நீ சொன்னதே இல்லையே!’’

‘‘நான் சொல்லலைதான்! அவன்தான் என் பின்னாடியே சுத்தினான். அலைஞ்சான். நான் ஏத்துக்கவே இல்லை. தட்ஸ் ஆல்ங்க...’’
‘‘அப்புறமா என் ஃபிரெண்ட் கிட்ட கல்யாண சி.டியை வாங்கிட்டு வரேன். யாருன்னு காமியேன்...’’
வித்யா நிதானமாய்ப் பேசினாள்... ‘‘இதனாலதாங்க உங்க எக்ஸ் காதலி உங்களோட பேசலை. எனக்கு முன்னாள் காதலனுமில்லை; ஒண்ணுமில்லை! சும்மா சொன்னதுக்கே நோண்டி நோண்டி விசாரிக்கறீங்களே, உங்க மாஜி காதலி பேசியிருந்தா, குஷியா பேசியிருப்பீங்க! அது அவ புருஷன் மனசுல சந்தேகத்தை விதைச்சிருக்கும். பயந்துதான் அவ பேசலை. பொதுவா பழைய காதல் கதையை ஆம்பளைங்க பேசினா ஓப்பனானவர்னு சொல்லிக்குவீங்க. லேடீஸ் பேசினா விவகாரமா விசாரிப்பீங்க. எங்கயும் இந்தக் கதைதாங்க...’’
ஜெகனிடம் பதில் இல்லை.