‘‘வயித்துல இருக்கிற வரைக்கும்தான் வலி. குழந்தை நல்லபடியா வெளியே வந்திட்டா அதையே சுகம்னு சொல்வாங்க. ‘என்றென்றும் புன்னகை’ முடிந்ததும் அந்த சுகத்தை உணர்கிறேன். ‘வாமனன்’ படத்துக்குப் பிறகு நிறையவே காத்திருந்தேன். கொஞ்சம் நிதானிக்க வேண்டியிருந்தது. நெறிப்படுத்திக்க அவசியம் வந்தது. ஒவ்வொரு மனுஷனுக்கும் மூச்சு மாதிரி இருக்கிற ஃப்ரண்ட்ஷிப், காதல், குடும்ப உறவுகள்னு நெருக்கமா, காமெடியா, இயல்பாக சேர்க்க நினைச்சேன்... அது நிறைவா வந்திருக்கு. ‘என்றென்றும் புன்னகை’ என தலைப்பிலேயே எவ்வளவு உற்சாகம் இருக்கு. உங்களால் உணர முடியுமே?’’ - ரசித்துப் பேசுகிறார் டைரக்டர் அகமத். டைரக்டர் கதிரின் முதல் வரிசை சீடர்.
‘‘ ‘என்றென்றும் புன்னகை’ என்ன கான்செப்ட்?’’
‘‘நான் கதையை வெளியே தேடலை. இதுவரை கேள்வியே பட்டிராத கதைன்னு மறந்துகூட சொல்ல மாட்டேன். அப்படியே நண்பர்களா ஒண்ணுமண்ணா இருப்போம். குரூப்ல ஒருத்தனுக்கு கல்யாணம் ஆகும். அவ்வளவுதான்... நட்பு போன இடமே தெரியாது. பத்து மணி நேரம் சேர்ந்திருந்து அரட்டை அடிச்சவங்க, பத்து நிமிஷத்தில் பிரியற காலமும் வரும். ‘இந்த வம்பே வேண்டாம்... காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம், சேர்ந்தே இருப்போம்’னு நினைக்கும் மூன்று நண்பர்களைப் பத்தின கதை. அதோட ஜீவா, சந்தானம், வினய், த்ரிஷா, ஆண்ட்ரியா, மதி, ஹாரிஸ் ஜெயராஜ்னு செம டீம். சந்தேகமே இல்லாம படம் பெரிதாகிடுச்சு. இவ்வளவு அருமையான டீமை வச்சுக்கிட்டு ஒரு அழகான சினிமா தர்றதுக்கு என்ன குறைச்சல்! அன்பான இந்த மூன்று பேர் ஃப்ரெண்ட்ஷிப்பில் இருக்கிற சந்தோஷம், அனுபவம், சந்திக்கிற சுவாரஸ்யம்தான் படமே...’’
“ஜீவாவை அருமையாகக் கையாண்டால் வேற ஆளாகத் தெரிவாரே...’’
‘‘எஸ்... அதை நானே உணர்ந்தேன். இந்தப் படம் தொடங்கணும்னு தோணினதும் முதலில் மனசில் வந்தவர் ஜீவா. அவரால் எதையும் செய்ய முடியும். கடந்த வருடங்களில் செழுமையான நடிகராக அவர் வந்திருக்கிறார். அவர் ரொம்ப அருமையா நடிப்பைக் கொடுத்து நடிச்ச படம், ‘என்றென்றும் புன்னகை’. அவருடைய இயல்பு நடிப்பை யோசிச்சு யோசிச்சு செய்றதில்லை. முன்மாதிரியே இல்லாம ஒவ்வொரு விதத்தில் செய்து காட்டுவார். எல்லாமே நமக்கு பிடிக்கும்னாலும், எதாவது ஒண்ணைத்தானே நாம் எடுத்துக்க முடியும்.

அதே மாதிரி ஜீவா, சந்தானம், வினய் மூணு பேரும் நிஜமாவே திக் ஃப்ரெண்ட்ஸ். அவரவர்களுக்கான சீன் முன்பே வரையறுக்கப்பட்டது. அதைப் புரிஞ்சுக்கிட்டு அவங்க அருமையா செய்து கொடுத்தது படத்திலேயே தெரியுது. இத்தனை பேரை வச்சுக்கிட்டு படமெடுத்திருக்கேன்... யாருக்கும் யார் மீதும் புகாரில்லை. அதுதான் விசேஷம்! தயாரிப்பாளர்களாக வி.ராம்தாஸ், ஜி.கே.எம்.திருக்குமரன் இருவரும் இல்லைன்னா இவ்வளவு பெரிய படம் சாத்தியமே ஆகியிருக்காது...’’
‘‘சந்தானம் இதில் நீக்கமற நிறைஞ்சிருக்காரோ?’’
‘‘அவர் கமென்ட் அடிச்சு அடிச்சே இப்ப காமெடி நடிகரா இருக்கலாம். ஆனால், அதுக்கும் மேல அவர் மிக அருமையான நடிகர். இன்னும் சொன்னால், குணச்சித்திரத்தில் கூட அவர் ஒரு படத்தை தூக்கிட்டுப் போயிட முடியும். அவர் 60 நாளுக்கு மேல் தன் நடிப்பைக் கொடுத்த படம் இது. நான் அவரோட நெருக்கமாப் பழகினதால, இன்னும் ஆழமா அவருடைய விருப்பங்கள் எனக்குத் தெரியும்.’’
‘‘ஒன்றுக்கும் மேற்பட்டஹீரோயின்கள்... தகராறு ஒன்றும் இல்லையே?’’
‘‘எனக்கு சினிமாவில் ஆச்சரியமா இருப்பது ஒன்றே ஒன்றுதான். இந்த மாதிரி செய்திகளைப் பொறுத்தமட்டில் பொய் 99% இருக்கும், உண்மை 1% இருக்கும். த்ரிஷா, ஆண்ட்ரியா ரெண்டு பேரும் கொடுத்தது பெரிய ஒத்துழைப்பு. அவங்க சின்சியரான ஆர்ட்டிஸ்ட்ஸ். ரெண்டு பேரும் வந்தா கலகலன்னு ஷூட்டிங்களை கட்டும். ரெண்டு பேருக்குமே செம காமெடி சென்ஸ் உண்டு. அது இந்தப் படத்தில நல்லா தெரியும்!”

‘‘ஜீவா - ஆண்ட்ரியா கெமி ஸ்ட்ரி அள்ளுது...’’
‘‘சும்மா போகிற போக் கில் வந்திட்டுப்போகும். அவ்வளவுதான். குடும்பம் குடும்பமா வந்து பார்க்க வேண்டிய கதைதான் இது. இதுல கிளாமரை எங்கே கொண்டு போய் வைக்கிறது? ‘அடடா, இந்தப் பொண்ணு நல்லா இருக்கே’ன்னு சொன்னால் அதுக்கு ஆள் இருக்குன்னு அப்டேட் கொடுக்கிறாங்க. அப்படி இருக்கிற காலத்தில், காதலும் கல்யாணமும் வேண்டாம்னு முடிவெடுத்து இருக்கிறவங்களைப் பத்தின கதை. இத்தனை பேரை வச்சுக்கிட்டு த்ரிஷா கிட்டே போனால் ‘சரி’ன்னு சொல்லுவாங்களான்னு பயந்துகிட்டேதான் போனேன். கதையைக் கேட்டதும் சந்தோஷமா சரின்னு சொன்னாங்க. இப்ப இருக்கிறவங்களுக்கு எல்லாம் தெரியும். தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சரியா உணர்வு ரீதியா பண்ணிட்டு போய்க்கிட்டே இருக்காங்க.’’
‘‘ஹாரிஸ் ஜெயராஜ்னா பாடல்கள் பேசப்படுமே...’’
‘‘ ‘என்னங்க நல்ல பாடல்களாகவே கேட்கறீங்க. பரபரப்பா கொளுத்திப் போடுற பாடல் வேண்டாமா’ன்னு கேட்டார். ‘கதை அனுமதிக்கலையே’ன்னு சொன்னேன். அவருக்காகக் காத்திருப்பது ரொம்ப சுகம். காத்திருப்புக்கு நியாயம் பண்ணுபவர். ஒரு படத்தில் டைரக்டர் ஒண்ணும் ஆணியைப் பிடுங்கிறதில்லை. அது ஒரு டீம் ஒர்க். எல்லோரும் தங்களை ஒப்புக்கொடுத்தால்தான் இங்கே எல்லாமே சாத்தியம். கேமராமேன் மதி, இந்தப் படத்தை வேற ஒரு இடத்திற்குக் கொண்டு போயிருக்கார். இந்திப் படத்துலதான் ஒண்ணும் அவசரமில்லாம ஒவ்வொரு ஷாட்டுக்கும் அதிக கவனம் எடுப்பாங்க. தயாரிப்பாளர் எங்களுக்குக் கொடுத்த சுதந்திரத்தை நாங்க சரியா பயன்படுத்திக்கிட்டோம்னு சொல்லணும்!’’
- நா.கதிர்வேலன்