6 மெழுகுவத்திகள் சினிமா விமர்சனம்





மெரீனாவுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் போதெல்லாம் நெஞ்சைப் பதற வைக்கும் இந்த ‘6’. அன்பில் வாழும் ஷாமின் குடும்பத்தில் திடுக்கிடும் திருப்பம். ரசித்து விளையாடிச் சிரிக்கும் மகன் சில நிமிட அவகாசத்தில் திசை மாறி காணாமல் போக, பதறித் துடித்து தேடும் ஷாம் - பூனம் தம்பதிகளுக்கு மகன் கிடைத்தானா? பிரிந்தவர்கள் கூடினார்களா? என்பதே கண்ணீர் க்ளைமாக்ஸ். அக்கறையில் மின்னும் டைரக்டர் வி.இசட்.துரைக்கு நமது வணக்கம்!

தேடல் படலத்தில் விரிகிறது கதைக்களம். குழந்தைக் கடத்தலில் களைகட்டிச் செழிக்கும் வர்த்தகத்தின் இருண்ட பக்கங்களில் பயணம் போகிறார் ஷாம். ஊரும், மொழியும் அந்நியப்பட, பெற்ற மகனை இழந்த உணர்ச்சிப் பிழியலில் வெறி கொண்டு தேடும் தகப்பனாக அச்சு அசல் பொருத்தம் ஷாம். இதற்கு முன்னால் சிறந்த நடிகர் என நினைவிற்குள் வர மறுக்கும் ஷாம், இதில் தொட்டிருப்பது புதிய மைல்கல். மெலிந்து, அடையாளம் சிதைந்திருப்பதில் சினிமாவின் மீதான அவரது புதிய அக்கறை பளிச். பாசத்தில் திளைத்து, பின் படபடப்பாகி, தேடலில் உறுதியுடன் திரிந்து, கோபத்தில் மிளிர்ந்து... ஷாமிற்கு ஒரு ராயல் சல்யூட்!

நாம் பார்க்காத இருண்ட பக்கங்களைத் திறந்து காட்டுவதில் பதற வைக்கிறார் இயக்குநர். துளியும் ஈரம் இல்லாமல் இந்த ‘வியாபாரத்தை’ நடத்துபவர்களின் வாழ்க்கை, நம்மைப் போலவே இயல்பாக இருப்பதாகக் காட்டுவது தான் பெரும் அதிர்ச்சி. ஒவ்வொரு கண்ணியாகப் பிடித்து, சூழ்ச்சிவலையின் அடையாளங்களுக்குள் ஷாம் பயணமாவது, வெகு இயல்பு. புரிந்துகொண்டால் தவிர, கேலிக் கூத்தாகிவிடக் கூடிய இடங்களில் கூட ‘நச்’சென்று வசனம் தீட்டியிருக்கிறார் ஜெயமோகன்.

‘பாவத்தை பண்ணிட்டுத்தான்டா இங்கே வர்றோம்’ எனத் துவங்கும் புரோக்கர், அடுத்தடுத்து தூக்கிப்போடும் குண்டில் வியர்த்துக்கொட்டுகிறது நமக்கு. மகன் காணாமல் போவதில் அவிழும் முதல் முடிச்சு குப்பத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளியிடம் தொடங்குவது இன்னும் பயங்கரம். மொத்தக் குடும்பமும் அவரின் கால் தொட்டு கதறித் துடிப்பது எந்த நேரமும் வாழ்க்கை திசை மாறும் என்ற பொது உண்மையின் வெளிப்பாடு. கண்ணீரை மிச்சம் இல்லாமல் வழிய வைக்கும் காட்சியமைப்பு, உருக்கம்!

வாடகைக் கார் டிரைவர் மூணாறு ரமேஷ் காட்டியிருப்பது, ஜீவன் ததும்பும் உணர்ச்சிப் பிரவாகம். அவர் தரும் திருப்பம் படத்தின் பெரும் அதிர்ச்சி. இது மாதிரி பயணம் கொண்ட கதையில், கேமராவின் பங்கு கவனத்திற்குரியது. கிருஷ்ணசாமி படத்தின் பரபரப்பை தோள் மீது சுமந்து ஓடுகிறார். இந்தியாவின் பல பகுதிகளில் பயணித்து கேமரா அபாரமாக உழைத்திருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா, முடிந்ததுக்கு மேல் உழைத்திருக்கிறார். வேறு வழியில்லை... கதை அப்படி!

குழந்தை காணாமல் போனவரின் வீடு அடுத்த நாள் எப்படியிருக்கும்? அதன் பரபரப்பே இல்லாதது ஏன்? இவ்வளவு பெரிய ‘வியாபாரி’களின் கடைசி இருப்பிடம் வரைக்கும் சென்று அடைவது சாத்தியமா? மேலும், ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர் போடுகிற சண்டை, நம்ப முடியாமல் இருக்கிறது. அடுத்தடுத்து லிங்க் பிடித்து ஷாம் போவதை யாரும் தெரிந்துகொள்ளாமல் இருப்பது ஏனோ?
இருந்தாலும்... அக்கறையோடு சொல்லியிருக்கும் டைரக்டர், எடுத்துச் சென்றிருக்கும் ஷாம், கதைக்கரு என்ற மூன்றும் இந்த ‘6’க்கு பலம்!
- குங்குமம் விமர்சனக்குழு