பொலிடிகல் பீட்

மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதார இயக்கம் சார்பில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிராமங்களுக்கு டாக்டர்கள் சென்று சிகிச்சை அளிப்பதற்காக இந்த வாகனம் பயன்படுகிறது. பஞ்சாப் மாநிலத்துக்கு இப்படி வந்த வாகனங்களில் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் அவரது மகனும் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதல் படங்கள் பெரிதாக வரையப்பட்டுள்ளன. ‘‘எங்கள் மத்திய அரசு தரும் வாகனத்தில் உங்கள் படமா?’’ என காங்கிரஸ்காரர்கள் கொதிக்க, ‘‘நாங்கள்தானே நடைமுறைப்படுத்துகிறோம். இதில் என்ன தப்பு?’’ என்கிறது அகாலி தளம் கட்சி. ‘எந்த மாநிலத்திலும் முதல்வர்கள் இப்படிச் செய்வதில்லை. படத்தை அகற்றாவிட்டால் நிதி வராது’ என மத்திய அரசு கடுமையாகச் சொல்லி யிருக்கிறது இப்போது!
மம்தா பானர்ஜி மேற்கு வங்காள எதிர்க்கட்சித் தலைவியாக இருந்தபோது அவரது பல்வேறு போராட்டங்களுக்குத் தோள் கொடுத்தவர் சமூகசேவகி மேதா பட்கர். இப்போது கொல்கத்தாவின் 147 பிரதான சாலைகளில் சைக்கிள்களுக்கு தடை விதித்துவிட்டார் முதல்வர் மம்தா. போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த முடிவு! ‘உழைக்கும் மக்களின் வாகனம் சைக்கிள்; சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது. அதற்கு ஏன் தடை?’ என மேதா பட்கர் எழுதிய கடிதங்களுக்கு பதில் இல்லை. இப்போது மம்தா மீது கோபத்தில் இருக்கிறார் மேதா.
எப்போதும் வேட்டி - குர்தாவில் நான்கு நாள் நரை தாடி கெட்டப்போடு இருப்பவர் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா. சமீபத்தில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக சீனா போனார். வழக்கமான கெட்டப் வேண்டாம் என்று நெருக்கமான ஆலோசகர்கள் சொல்ல, புதிதாக அவருக்கு கோட் - சூட் ரெடியானது. புதிதாக அதை அணிந்து நடமாடுவதற்குள் அவஸ்தை ஆகிவிட்டது அவருக்கு. அதைவிட பெரிய அவஸ்தை, சீனத் தலைவர்களின் பெயர். உச்சரிப்பே வராமல் தடுமாறிவிட்டார்; அவர்களும் இவர் பெயரை உச்சரிக்கத் தெரியாமல் தடுமாறியது தனிக்கதை!
கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து அமிர்தசரஸ் தொகுதியில் இரண்டுமுறை ஜெயித்தாலும் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என கடுப்பில் இருக்கிறார்கள் மக்கள். மாநில பாரதிய ஜனதா தலைவர்களும் அவருக்கு ஆதரவாக இல்லை; மாநில அரசு மீது பழியைப் போடலாம் என்றால், அதுவும் கூட்டணிக் கட்சியாக இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க... தவிக்கிறார் அவர். டி.வி கிரிக்கெட் வர்ணனைகளில்கூட அவரால் சிரிக்க முடியவில்லை. இப்போது பஞ்சாப்புக்கு வெளியில் வேறு தொகுதி தேடுகிறார்.
தனிநபர் தாக்குதல்களுக்குப் பெயர் பெற்றது ராஜஸ்தான் மாநில அரசியல். குறிப்பாக, முதல்வர் அசோக் கெலாட். எதிர்க்கட்சித் தலைவியான வசுந்தரா ராஜேவை கடுமையான வார்த்தைகளால் திட்டுவார். இப்போது மாநில சட்டமன்றத் தேர்தல் சூடு உச்சத்தில் இருந்தாலும், பிரசாரத் துவக்கப் பொதுக்கூட்டத்தில் வசுந்தராவின் பெயரைக் கூடச் சொல்லவில்லை கெலாட். பேச்சில் அவ்வளவு கண்ணியம். மேடையில் ராகுல் காந்தி இருந்ததுதான் காரணம்!
|