மோடியின் குர்தா ரகசியம்!





புகழ்பெற்ற பிராண்ட் ஆடைகளை அணிந்து தங்களை உயர்த்திக் காட்டுவது வழக்கமான பிரபலங்களின் ஸ்டைல்; ஆனால் தான் அணியும் ஆடைகளையே புகழ்பெற்ற பிராண்ட் ஆக்குவது தன்னிகரற்ற தலைவர்களின் ஸ்டைல். மோடி இரண்டாவது ரகம்.

கண்கள், குரல், டிரஸ் - இந்த மூன்று விஷயங்களில் மோடி எந்த சமரசமும் செய்துகொள்வதில்லை. தன்னை ஒரு ஆதர்ஸ ரோல்மாடலாக உயர்த்திக்கொள்ள முயற்சிக்கும் அரசியல் தலைவர்களுக்கு இந்த மூன்றும்தானே முக்கியம்! அகமதாபாத்தில் இருக்கும் ஜிதேந்திர சௌகான், பிபின் சௌகான் சகோதரர்கள்தான் மோடிக்கு கடந்த 24 ஆண்டுகளாக டிரஸ் தைக்கிறார்கள். மோடி அணியும் குர்தாக்களை ‘மோடி குர்தா’ என்ற பெயரில் தனி பிராண்ட் ஆகவே பதிவு செய்திருக்கிறார்கள் இவர்கள். ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரம் மோடி குர்தாக்கள் விற்கின்றன. 2995 ரூபாய் விலை. ஆனாலும் வாங்க கூட்டம் அலைமோதுகிறது!

காதி, காதி சில்க், லினன் - மூன்றும்தான் மோடியின் விருப்பமான துணிகள். வெளியூர், வெளிநாடு போகும்போது மொத்தமாக துணி வாங்குகிறார். வருடத்துக்கு மூன்றுமுறை மொத்தமாக தைத்துக் கொள்கிறார். ஒரு சமயத்தில் ஒரு டஜன் குர்தாக்கள்! பல ஆண்டுகளாக அவரது வெயிட் மாறாததால், ஒரே அளவுதானாம்!



வழக்கமாக எல்லோரும் முழுக்கை குர்தா அணிவார்கள். மோடி வித்தியாசமாக அரைக்கை குர்தா அணிகிறார். ‘‘ஆர்.எஸ்.எஸ்.பிரசார சேவகனாக இருந்தபோது ஊர் ஊராக சுற்றுவேன். டிரஸ்ஸை ஒரு துணிப்பையில் வைத்துக்கொண்டு அலைவேன். நீளக்கை குர்தாக்களை துவைப்பதும் சிரமம்; பையிலும் இடம் அடைக்கும். வசதிக்காக அரைக்கைக்கு மாறினேன்; அதுவே பழகி விட்டது’’ என மோடியே சமீபத்தில் சொன்னார்.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் எந்தக் கலர் டிரஸ் என பார்த்துப் பார்த்து செலக்ட் செய்கிறார் அவர். சமீபத்தில் அவர் பிறந்தநாளில் முஸ்லிம்கள் பி.ஜே.பியில் இணைந்தனர். குஜராத்தி முஸ்லிம்கள் அணியும் பதான் உடையோடு அங்கு வந்தார். ஒரே நாளில் இரண்டு, மூன்று நிகழ்ச்சிகள் என்றால், ஒவ்வொன்றுக்கும் ஒரு டிரஸ். மதச்சாயத்தைத் தவிர்க்க, சமீபகாலமாக காவி அணிவதில்லை. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது பச்சை அணிந்தார். ‘எல்லோரையும் அரவணைக்கும் இலகுவான ஆள்’ என்ற அடையாளத்தை அந்த வண்ணம் தந்தது.   

அவரது டிரஸ் ஸ்டைல் பற்றிப் பேசுகிறார், அவரைப் புகைப்படம் எடுத்த சென்னையின் முன்னணி புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்... ‘‘ ‘சொசைட்டி’ பத்திரிகைக்காக மோடியை பேட்டி எடுப்பதற்கு பிரத்யேக அனுமதி வாங்கியிருந்தார்கள். அதற்கான புகைப்படங்களை எடுக்கப் போயிருந்தேன். 15 நிமிடம் கொடுத்திருந்தார்கள். இந்த குறுகிய நேரத்துக்குள் எப்போ பேட்டி எடுத்து எப்போ படம் எடுப்பது என்ற குழப்பத்துடன் மோடியின் அகமதாபாத் வீட்டுக்குள் நுழைந்தோம்.


அழகும் எளிமையும் கைகோர்த்திருந்த அந்த வீட்டில் அனுமதியின்றி காக்கா, குருவிகூட நுழைய முடியாது. அத்தனை பாதுகாப்பு. வீட்டிலிருந்த அவரது அலுவலக அறையில் அமர்ந்தபடி வரவேற்றார் மோடி. சோபா, அதன் பின்னே ஒரு ஜன்னல். இங்கே நாம் நினைப்பதுபோல படம் எடுக்கமுடியாது என்று எனக்குள் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தபோதே பேட்டி முடிந்துவிட்டது. ‘சார், இந்த ரூம் கம்ஃபர்டபிளா இல்ல. வெளில போய் எடுக்கலாமா’ என்று அவரிடம் தாழ்வான குரலில் கேட்டேன். புன்சிரிப்போடு வெளியே வந்தார்.

இரண்டு, மூன்று க்ளிக் எடுத்ததும் ‘போட்டோவை காட்டுங்களேன்’ என்றார். லேப்டாப்புடன் கேமராவை கனெக்ட் பண்ணி, எடுத்த படங்களைக் காட்டினேன். சின்ன புன்னகையுடன் அவரது முகம் பிரகாசிக்க, இதுதான் சமயம் என்று, ‘சார், காஸ்ட்யூம் சேஞ்ச் பண்ணி எடுத்தா நல்லாயிருக்கும்’ என்று கேட்டேன். ‘அப்படியா? காஸ்ட்யூம் எடுத்துட்டு வரச் சொல்றேன். உங்களுக்கு என்ன பிடிக்குதோ, அதைப் போட்டுக்கறேன்’ என ஆர்வமாகிட்டார்.

வீட்டை ஒட்டி பச்சை போர்வை போர்த்தியபடி பெரிய புல்வெளி, பின்புறத்தில் மரங்கள் அடர்ந்திருந்தன. அங்கே நிற்க வைத்து படம் எடுத்தேன். கொஞ்ச நேரத்தில் அவரே உற்சாகமாகி, ‘நின்னா போதுமா... இல்ல, நடந்து வருவது போல எடுக்குறீங்களா...’ என அடுத்தடுத்த மூவ்மென்ட்களோடு கேமராவுக்கு தீனி போட்டார். நேரம் போனதே தெரியவில்லை. ‘இப்படி அவர் ஆர்வமா போட்டோ எடுத்துக்கிட்டதே இல்ல. இது நிஜம்தானான்னு சந்தேகமா இருக்கு’ என்று அவரது உதவியாளர் என்னிடம் ஆச்சர்யப்பட்டார்.

சின்ன வயதில் தான் கடந்து வந்த பாதை, காந்தி பற்றி படித்து கற்றுக்கொண்ட விஷயங்கள், கதர் மீது ஏற்பட்ட காதல் என்று நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். 15 நிமிடம் என்று தொடங்கிய சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது. கேமராவுக்கு விருந்து வைத்ததுடன் இல்லாமல், ‘சாப்பிட்டுவிட்டுத்தான் போகணும்’ என்று குஜராத்தி ஸ்டைலில் மதிய விருந்து அளித்து விடைகொடுத்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாகிவிட்ட தருணம்.
- அமலன்
படம் நன்றி: ‘சொசைட்டி’