கர்ணனின் கவசம்





‘‘வைகுண்டத்தோட கதவு எப்ப வேணா திறக்கலாம்...’’ - வரிசையில் கடைசியாக நின்று கொண்டிருந்த குள்ள மனிதன், தனக்கு முன்னால் நின்றிருந்த மத்திம மனிதனின் காதில் வேறு யாருக்கும் கேட்காதபடி முணுமுணுத்தான்.
‘‘ம்...’’ என்று சொன்ன மத்திம மனிதன், ஓரப் பார்வையால் குள்ள மனிதனைப் பார்த்தான்.

இருவரும் கண்களால் பேசிக் கொண்டார்கள். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக மத்திம மனிதன் தலையசைத்தான். அதன்பிறகு அவன் பார்வை, சொர்க்க வாசலுக்கு முன்னால் நின்றிருந்த பரமேஸ்வரப் பெருந்தச்சனின் மீதே பதிந்திருந்தது.
காலத்தின் அளவுகள் நேரத்தின் அளவுகோலில் கடந்தபடி இருந்தது. இன்னும் சில விநாடிகளில் வைகுண்டத்தினுள் நுழைவதற்கான கதவு திறந்துவிடும். அதற்குள் விரும்பியபடி விஷயம் முடிந்துவிட வேண்டுமே என்று மத்திம மனிதனின் மனது அடித்துக் கொண்டது. ‘கிருஷ்ணா... உன்னைத் தவிர வேறு யாராலும் காப்பாற்ற முடியாது. தயவுசெய்து உதவி செய்...’
அவன் பிரார்த்தனை வீண்போகவில்லை. சரியாக சொர்க்க வாசலின் கதவை விஷ்வக்சேனர் திறப்பதற்கு அரை நொடிக்கும் குறைவான நேரத்தில், பரமேஸ்வரப் பெருந்தச்சன் தன் தலையைத் திருப்பி பின்னால் இருந்தவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.

அந்த இமைப்பொழுது மத்திம மனிதனுக்கு போதுமானதாக இருந்தது. தன் கூட்டாளிகள் உட்பட யாரும் அறியாவண்ணம் செய்ய வேண்டியதைச் செய்து முடித்தான்.
அதற்குள் வைகுண்டத்தின் கதவு திறக்கவே, பயபக்தியுடன் பரமேஸ்வரப் பெருந்தச்சன், தன் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தார்.
‘‘நீங்களும் கூடவே வாங்க...’’ - என ஒன்பது பேரையும் பார்த்து மகாவிஷ்ணுவின் தளபதியான விஷ்வக்சேனர் கட்டளையிட்டார்.



‘‘இதை என்னால ஏத்துக்க முடியாது. முதல்ல வந்தவன் நான்தான். அதனால நான் தரிசனம் முடிஞ்சு வந்ததும் இவங்க உள்ள போகட்டும்...’’ - கண்களில் சீற்றத்துடன் சொன்ன பரமேஸ்வரப் பெருந்தச்சனை அலட்சியமாகப் பார்த்தார் விஷ்வக்சேனர்.

‘‘பகவான் விஷ்ணுவை தரிசிக்க நீங்க வரலை. அதுக்கு உங்களுக்கு அனுமதியும் கிடைக்கலை. நீங்க பத்து பேரும் வந்தது பீஷ்மரைப் பார்க்க. அதனால ஒரே நேரத்துல உங்களை கூட்டிட்டு வரச் சொல்லித்தான் உத்தரவு. சம்மதம்னா வாங்க. இல்லைன்னா...’’ - என்றபடியே சொர்க்க வாசலின் கதவை மூட முயன்றார்.
‘‘எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்லை...’’ என்ற குள்ள மனிதன், தனக்கு முன்னால் திமிறிக் கொண்டிருந்த மத்திம மனிதனை அடக்கியபடி தன் ஆட்களுடன் வைகுண்டத்தினுள் நுழைந்தான்.
பரமேஸ்வர பெருந்தச்சனுக்கு இதை ஏற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அனைவருமே நிலைப்படியை குனிந்து முத்தமிட்டார்கள். பக்தி சிரத்தையுடன் வைகுண்டத்தில் நுழைந்தார்கள்.
‘‘இந்தப் பக்கமா வாங்க...’’ என்ற விஷ்வக்சேனரை அனைவரும் தொடர்ந்து சென்றார்கள். ஐந்து நிமிட நடைபயணத்துக்குப் பின் பீஷ்மர் இருக்கும் இடத்தை அடைந்தார்கள்.
அம்புப் படுக்கையில் படுத்திருந்த பிதாமகர், அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.
பத்து பேரும் சாஷ்டாங்கமாக அவரை நமஸ்கரித்துவிட்டு சுற்றிலும் கைகட்டி நின்றார்கள். அவர் தன் இரு கைகளாலும் ஏந்தியிருந்த, அஸ்வத்தாமனால் பாண்டவர்களை அழிக்க ஏவப்பட்ட பிரும்மாஸ்திரத்தை ஒரு கணம் பார்த்தார்கள்.

‘‘பாரத நாடு என்று எந்த மன்னனின் பெயரால் இந்தியா அழைக்கப்படுகிறதோ, அந்த பரத மன்னனின் பேரனுக்கு வணக்கம்...’’ என்று வணங்கினார் பரமேஸ்வர பெருந்தச்சன்.
‘‘கங்கையின் புதல்வருக்கு நமஸ்காரம்...’’
‘‘அரசியலை பிரகஸ்பதியிடமிருந்து கற்ற ஜாம்பவானுக்கு வந்தனம்...’’
‘‘வேதங்களை வசிஷ்டரிடம் கற்ற முதல் மாணவரின் பாதங்களைப் பணிகிறேன்...’’
‘‘வில்வித்தையை பரசுராமரிடமிருந்து கசடறக் கற்ற மூத்தோரின் இதயக் கமலங்களைத் தொட்டு வணங்குகிறேன்...’’
‘‘தான், விரும்பும் நாளில், விரும்பிய நேரத்தில் மரணத்தைத் தழுவும் வகையில் ‘இச்சா மரண’ வரத்தைப் பெற்றிருக்கும் பெரியவரை பூஜிக்கிறேன்...’’
இப்படி பத்து விதமாக பத்துப் பேரும் பீஷ்மரை வணங்கினார்கள். மௌனமாக எல்லாவற்றையும் ஏற்றவர், பரமேஸ்வரப் பெருந்தச்சனை உற்றுப் பார்த்தார். அவர் கண்கள் சட்டென்று ஒளிர்ந்தன. இதைப் பார்த்து மத்திம மனிதன் இருப்புக் கொள்ளாமல் தவித்தான்.

‘‘நீதான் முதல்ல வந்த இல்லையா? அதனால உனக்குத்தான் முதல்ல வரம் தரணும்... சொல்லு பரமேஸ்வரா... என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்த..?’’
பரமேஸ்வரப் பெருந்தச்சன் பதில் சொல்வதற்குள் மத்திம மனிதன் திமிறினான். ‘‘இல்ல... இல்ல...’’ என அலறினான்.
‘‘உஷ்... இந்த இடத்துல பிரச்னை கூடாது. பேசாம இரு...’’ என அவனை அடக்கினான் குள்ள மனிதன். இதைப் பார்த்த பரமேஸ்வரப் பெருந்தச்சனின் முகத்தில் எதையோ சாதித்த உணர்வு. கைகளால் தன் வாயைப் பொத்தியபடி பீஷ்மரை நோக்கிக் குனிந்தார்.
‘‘உங்க முன்ஜென்மக் கதை திரும்பவும் அரங்கேறப் போகுது பிதாமகரே... இதை நீங்க அனுமதிக்கக் கூடாது...’’
பீஷ்மரின் உதடுகளில் புன்னகை பூத்தது. ‘‘புரியலையே பரமேஸ்வரா...’’
‘‘விளக்கமாவே சொல்றேன் பீஷ்மரே... இயற்கையோட ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிக்கிற அஷ்ட வசுக்களோட தலைவரா நீங்க இருந்தீங்க. ‘பிரபாஸ்’ங்கிறது உங்க பேரு...’’
‘‘அதுக்கென்ன இப்ப?’’
‘‘இருக்கு பிதாமகரே... அதைத்தான் சொல்ல வர்றேன். உங்க மனைவி நந்தினி ஆசைப்பட்டாங்கன்னு வசிஷ்ட மகரிஷிகிட்ட இருந்த பசுவைத் திருடினீங்க... அதுக்கு உங்க குழுவைச் சேர்ந்தவங்களும் உதவினாங்க...’’

‘‘ம்...’’
‘‘இந்த விஷயம் தெரிஞ்சதும் வசிஷ்டர் கோபமானார். செய்த தவறை ஒத்துக்கிட்டு எட்டுப் பேரும் மன்னிப்பு கேட்டீங்க... ஏழு பேரை மன்னிச்ச வசிஷ்டர் உங்களுக்கு மட்டும் நீண்ட காலம் பூமில வாழறா மாதிரி சாபமிட்டார்...’’
‘‘ம்...’’
‘‘நீங்க எட்டுப் பேரும் சாந்தனுவுக்கும், கங்கைக்கும் பிள்ளைகளா பிறந்தீங்க... ஏழு பேருக்கு உடனடி சாப விமோசனம் கிடைச்சது. அஷ்ட வசுக்களோட தலைவரான உங்களுக்கு மட்டும் இன்னும் விமோசனம் கிடைக்கல...’’
பரமேஸ்வரப் பெருந்தச்சன் இப்படிச் சொன்னதும் பீஷ்மரின் புருவங்கள் ஏறி இறங்கின. சட்டென்று தன் தவறைப் புரிந்து கொண்டார் பரமேஸ்வரர். ‘‘மன்னிக்கணும் பிதாமகரே... நீங்க ‘இச்சா மரண’ வரத்தைப் பெற்றவர். பாண்டவர் - கௌரவர்களுக்கு இடையிலான யுத்தம் இன்னும் முடியல. கர்ணனோட கவசம் தொடர்பா இப்பவும் பங்காளிங்களுக்குள்ள சண்டை நடந்துகிட்டு இருக்கு. அதனால இன்னும் நீங்க மரணத்தைத் தழுவாம இருக்கீங்க...’’ என்று பதற்றத்துடன் சொல்லி முடித்தார்.

‘‘எதுக்காக இதையெல்லாம் சொல்ற பரமேஸ்வரா?’’
‘‘காரணமிருக்கு பீஷ்மரே... அந்தக் கதையை இவங்க இப்ப தொடர ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்குக் காரணம், கர்ணனோட அம்மாவான குந்தி. ஆதி ஆயியா இருக்கிற அவங்க திரிசங்கு சொர்க்கத்துல இருந்துகிட்டு இவங்களை ஆட்டிப் படைக்கிறாங்க. எந்த வசிஷ்டர் மனமுவந்து தன்கிட்ட இருந்த காமதேனுவை விஸ்வாமித்திரர்கிட்ட கொடுத்தாரோ, அந்த காமதேனுகிட்டேந்து பால் எடுக்க இப்ப முயற்சி நடக்குது. பழைய வரலாறு புதிய வடிவத்துல திரும்புது. இதன் மூலமா இன்னொரு பீஷ்மரை உருவாக்க நினைக்கிறாங்க. இதை நீங்க அனுமதிக்கக் கூடாது...’’
‘‘நான் என்ன செய்யணும்னு நினைக்கிற?’’

‘‘பாண்டவர்களை அழிக்க அஸ்வத்தாமன் ஏவின பிரும்மாஸ்திரம் உங்க கைல இருக்கு. அதை என்கிட்ட கொடுக்கணும்...’’
‘‘கொடுக்காதீங்க...’’ என்று கத்தினான் மத்திம மனிதன்.
பீஷ்மரின் தலைப்பக்கம் நின்றிருந்த விஷ்வக்சேனரின் முகம் அனலைக் கக்கியது. ‘‘இது பூலோகம் இல்ல... வைகுண்டம். இங்க சண்டை போடவோ, கத்தவோ யாருக்கும் அனுமதியில்ல. மௌனமா இருக்கறதுன்னா இரு... இல்லைன்னா வெளில போ...’’ என கர்ஜித்தார்.
‘‘மன்னியுங்கள்...’’ என பற்களைக் கடித்தபடி மத்திம மனிதன் அமைதியானாலும், இருப்புக் கொள்ளாமல் தவித்தான்.
‘‘ம்...’’ என ஒரு கணம் கண்களை மூடி பிரார்த்தித்த பீஷ்மர், பிறகு இமைகளைத் திறந்தார். ‘‘மறுக்க முடியாத நிலைல நான் இருக்கேன்... எல்லாம் கிருஷ்ணரோட விளையாட்டு. நடக்கறதும், நடக்கப் போவதும் அவன் செயல்... இதைத் தடுக்க நான் யார்...’’ என்றபடி பிரும்மாஸ்திரத்தை பரமேஸ்வரப் பெருந்தச்சனிடம் கொடுத்தார்.

இதைப் பார்த்த மற்றவர்கள் அதிர்ந்தார்கள். ‘இவ்வளவு கஷ்டப்பட்டு வைகுண்டம் வந்தது இதற்குத்தானா’ என உள்ளுக்குள் புழுங்கினார்கள்.
‘‘இப்ப நீங்க சொல்லுங்க... என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க?’’ - கேட்ட பீஷ்மரை ஏறிட்ட ஒன்பது பேரின் கண்களிலும் எதையோ பறிகொடுத்த துன்பம் அப்பட்டமாகத் தெரிந்தது.
‘‘சும்மாதான் வந்தோம்...’’ உயரமான மனிதன் கண் கலங்க பதிலளித்தான்.
‘‘அப்படியா? என்கிட்டேந்து எதுவும் வேண்டாமா?’’
‘‘உங்க ஆசீர்வாதம் மட்டும் கிடைச்சா போதும்...’’ குள்ள மனிதன் மகிழ்ச்சியுடன் சொன்னான். எதற்காக இப்படி அவன் சந்தோஷப்படுகிறான் என மற்றவர்கள் குழம்பினார்கள்.
‘‘அது எப்பவும் உங்களுக்கு உண்டு...’’ என கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார் பீஷ்மர்.

மத்திம மனிதன் மட்டும் பரமேஸ்வர பெருந்தச்சனின் கைகளில் இருந்த பிரும்மாஸ்திரத்தை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.
‘‘சரஸ்வதி நதி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சீங்களா?’’ - அனைவரையும் ஏறிட்டபடி பீஷ்மர் கேட்டார்.
‘‘இல்ல...’’ என்று குள்ள மனிதன் பதிலளித்தான்.

‘‘அந்த நதி இருக்கிற இடம் தெரிஞ்சதும் சொல்லுங்க...’’ என்றபடி தன் கண்களை மூடினார் பீஷ்மர்.
‘‘உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிஞ்சுது... கிளம்புங்க...’’ என்று விஷ்வக்சேனர் கட்டளையிட, அனைவரும் மீண்டும் சாஷ்டாங்கமாக பீஷ்மரை நமஸ்கரித்துவிட்டு வந்த வழியே திரும்பி சொர்க்க வாசலை அடைந்தார்கள்.
அனைவரும் வெளியேறியதும் அவர்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு வைகுண்டத்தின் கதவை மூடினார் விஷ்வக்சேனர்.
அடுத்த நொடி யாரும் எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்தது. மத்திம மனிதன் சொர்க்க வாசலுக்கு வெளியே மயங்கி விழுந்தான். அதைப் பார்த்து குள்ள மனிதனும், பரமேஸ்வரப் பெருந்தச்சனும் வாய்விட்டுச் சிரித்தார்கள். மற்ற ஏழு பேரும் அதிர்ந்து நின்றார்கள்.
பாண்டவர்களை அழிக்கக் காத்திருந்த பிரும்மாஸ்திரம், இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது.
‘‘ஆயி... ஆயி... ருத்ரன் இறந்து கிடக்கான். அவன் கொண்டு வந்த கர்ணனோட இதயத்தைக் காணோம்...’’ - பதட்டத்துடன் அறிவித்த
படியே ஓடி வந்தார் பெரியவர்.

அதன் பிறகு ஆயி துளியும் தாமதிக்கவில்லை. ‘‘தாரா, உடனே ஆதித்யாவை எழுப்பு...’’
என்ன ஏது என்று தாரா கேட்கவில்லை. ஓடிச் சென்று வாழை இலையில் படுத்திருந்த ஆதித்யாவை உலுக்கினாள். தூக்கத்தில் இருந்து விழிப்பது போல் ஆதித்யா எழுந்தான். சோம்பல் முறிக்க தன் கைகளை உயர்த்தியவன் திகைத்தான். காஃபீன் மனிதனால் வெட்டுப்பட்ட அவன் கரங்கள் பழையபடி இணைந்திருந்தன.

‘‘ஆதித்யா... இப்ப பேச நேரமில்ல... பொழுது சாயப் போகுது. உடனே போய் காஃபீன் மனிதனை வீழ்த்திட்டு காமதேனுகிட்டேந்து பாலைக் கொண்டு வா. தாரா, நீயும் கூட போ...’’ என்று ஆயி கட்டளையிட்டாள்.
தாராவை அழைத்துக் கொண்டு ஆதித்யா வெளியே பாய்ந்தான்.
அவனது வருகைக்காக காஃபீன் மனிதன் காத்திருந்தான். அவனுக்கு அருகில் ஃபாஸ்ட்டும், சூ யென்னும் நின்று கொண்டிருந்தார்கள். சூ யென்னின் கையில் ருத்ரன் கொண்டு வந்த கர்ணனின் இதயம் துடித்துக் கொண்டிருந்தது.
(தொடரும்)