சொல்றேண்ணே... சொல்றேன்!





எனக்கு இங்கிலீசுன்னா ரொம்பப் புடிக்கும்ணே. ஆனா, இங்கிலீசுக்குத்தான் நம்மளைக் கண்டாலே ஆவாது. நம்ம நாக்குல இங்கிலீசு வெளையாடும்ணே... அதாவது, கண்ணாமூச்சி வெளையாட்டு. இடுப்பளவு வளந்திருந்த வயசுலயே நான் இங்கிலீசு புத்தகத்துல கவுன் போட்ட ஒரு அம்மாவை வரைஞ்சு வச்சிருப்பேன்ணே. கேட்டா அதுதான் ‘இங்கிலீசு தாய்’ம்பேன். தமிழ்ப் புத்தகத்துல தமிழ்த்தாய் வாழ்த்து படிக்கோம்ல... அப்ப இங்கிலீசுக்கும் ஒரு தாயி இருக்கணும்ல? எப்பிடி நம்ம லாஜிக்கு?

கவுன் போட்ட அந்த இங்கிலீசு தாய விழுந்து விழுந்து கும்புட்டும் அவ நமக்கு வரம் குடுக்கலண்ணே. தமிழ்ல எழுத்துக் கூட்டி ஒரு வார்த்தையப் படிக்கறது ஈசி. ஆனா, இங்கிலீசு வெவகாரம் புடிச்சது. அதுல சைலென்ட்டுனு ரெண்டு எழுத்து வரும்... சத்தம் போட்டுக்கிட்டு நாலு எழுத்து வரும். ஒவ்வொரு வார்த்தையையும் உருப்போட்டு படிச்சாகணும். செரமம்.

அதுலயும் இந்த போயம்னு ஒண்ணு கேப்பாங்க பாருங்கண்ணே... இங்கிலீசு கவித... அதக் கண்டாலே நமக்கு சாமி வரும். ‘ஊரு விட்டு ஊரு வந்து நாட்டப் புடிச்சுக்கிட்டு நாட்டாம பண்ணியிருக்கான். அந்த ரணகளத்துல இப்படி ஒரு கிளுகிளுப்பு தேவையா’ன்னு கோவம் வரும். ஒத்தை வரி புரியாதுண்ணே அதுல. வாத்தியார் சொல்ற அர்த்தத்துக்கும் அதுக்கும் சம்மந்தமே இருக்காது. எங்க வகுப்புலல்லாம் போயம் நடத்தும்போது, தப்பான பக்கத்தைத் திருப்பி வச்சுக்கிட்டு உக்கார்ந்திருந்த அறிவாளிங்கதான் அதிகம். ஒளிச்சு வச்சு கடல மிட்டாய் திங்கிறது, ஜன்னல் வழியா அணில் பாக்குறது, முன்னாடி உள்ளவனை கிள்ளி வெளையாடுறது... இங்கிலீசு வகுப்புன்னாலே இதெல்லாம்தான்ணே ஞாபகத்துக்கு வருது.



பள்ளிக்கூடத்துல ஒரு தடவை தூத்துக்குடிங்கறதை இங்கிலீசுலயும் தூத்துக்குடினு எழுதிப்புட்டேன்ணே. ‘எல கிறுக்காரப் பயலே... இங்கிலீசுல இத டூட்டிகொரின்னு எழுதணும்லே’னு வாத்தியாரு காதத் திருகி சொல்லிக் கொடுத்தாரு. காயாத சிமென்டு தரையில காலடி பட்ட மாதிரி, அது அப்படியே மனசுல பதிஞ்சு போச்சுண்ணே. இன்னொரு நாளு காரைக்குடின்னு எழுதறதுக்கு இங்கிலீசுல காரைக்கொரின்னு எழுதிப்புட்டேன். அன்னைக்கு என்னைய விட்டு தல தெறிக்க ஓடியிருப்பானு நெனைக்கேன் அந்த இங்கிலீசு தாயி.

அந்தக் காலத்துல இருந்து இந்தக் காலம் வரைக்கும் இளவட்டப் பயலுக மத்தியில இங்கிலீசு கொஞ்சம் நஞ்சம் புழங்குதுன்னா அது கிரிக்கெட்டு வழியாதான்ணே. 25 வருசத்துக்கு முன்னாலயே போலரு, பேட்ஸ்மேனு, கீப்பரு, ஃபீல்டருனு நாங்க பேசுற தஸ்ஸு புஸ்ஸு இங்கிலீசக் கேட்டு பெருசுக ஆனந்தக் கண்ணீரே வடிப்பாங்க. உள்ளூருல ஒரணா காசுக்கு வக்கிருக்காது... ஆனா வாயில வேர்ல்டு கப்பு வெளையாடும். கவாஸ்கர் எல்லாம் எங்களுக்கு லோக்கல் ஆளு. கண்ணுமூஞ்சியில முழிக்காத விவியன் ரிச்சர்ட்ஸ்தான் ஹீரோ. திமிரப் பாத்தீயளா?

இந்த கிரிக்கெட்ல பார்த்தீயனாண்ணே... போலரு பந்தை எறிவாரு. அது பேட்டுல பட்டுத்தான் கீப்பரு புடிச்சாருனு தோணிச்சுனு வைங்க... அம்பயர திரும்பிப் பார்த்து ‘ஹவிஸ்தட்’னு கத்துவாரு. அந்தக் காலத்துல ரேடியோ டி.வி எறச்சல்ல அது குத்து மதிப்பாத்தான் கேக்கும். கேட்டாலும் நமக்குப் புரியாது. அவுட்டு கேக்கறதுக்கு அப்படித்தான் கத்தணும்னு நெனச்சுக்கிடுவோம்ணே. ஒரு நாளு ஆத்துக் கரையில கிரிக்கெட்டு ஆடும்போது நான் பந்தைப் போட்டுட்டு அம்பயரா நின்ன பயலைப் பாத்து, ‘அவிச்சு தட்டு’னு கத்தினேன் பாருங்க... அத்தனை பயலும் அரண்டு போயிட்டான். என்ன செய்ய, காலம்காலமா நாம கிரிக்கெட் வெளையாடியா வாழ்ந்தோம். பனங்கெழங்க அவிச்சி தட்டி தின்னுதானே பொழைச்சு கெடந்தோம். அதானே நாக்குல வரும்? அன்னைக்கே பயலுக சொல்லிட்டானுவ... ‘‘நீ மட்டும் நாப்பத்தேழுக்கு முன்னால பொறந்திருந்தீன்னா, இங்கிலீஸ்காரன பேசியே வெரட்டியிருப்பலே!’’

சென்னைக்கு வந்த பெறகு ஒரு நாளு வயித்துப் பசியில ஊரெல்லாம் சுத்தி அலைஞ்சேன். கதீட்ரல் ரோட்ல கேமரா சிட்டி கடை... அதுக்குள்ள புகுந்து வேல கேட்டேன். அங்கெல்லாம் கேமரா வாங்க வாரவங்ககிட்ட இங்கிலீசுல பேசி விக்கணும். கேமராவப் பத்தி வெவரம் எல்லாத்தையும் வெரல் நுனியில வச்சிருக்கணும். அப்பத்தான் வேல. ‘‘ஒனக்கு என்ன வேல தெரியும்’’னு ஓனரு கேட்டாருண்ணே. ‘‘எல்லா வேலையும் தெரியும்’’னு தைரியமா சொன்னேன். தெனம் 40 ரூவா சம்பளம் தந்து எடுபிடி வேலைக்கு எடுத்துக்கிட்டாரு.

கொஞ்ச நாளுதான்ணே... நம்ம கொடி அங்க பறக்க ஆரம்பிச்சிருச்சு. கண்ணாடி தொடைக்கணுமா, காபி, டீ வாங்கணுமா... எல்லாத்துக்கும் மொத ஆளா ஓடுவேன்ணே. ஒரு நாளு அங்க ஒரு வெள்ளக்காரரு கேமரா வாங்க வந்தாருண்ணே... அப்ப பார்த்து ஆளு யாரும் இல்ல. இருக்கவங்களும் பக்கத்துல போயி பேச பயப்படுறாங்க. நமக்குத்தான் பயமே இல்லியே... என்ன பெருசா ஆயிரப் போவுதுனு போயி பேசினேன்ணே.

அப்பதான் சுத்தி இருந்தவங்களுக்கு ஒரு விஷயம் புரிஞ்சதுண்ணே... மனுசனுக்கு மனுசன் பேசிக்க மொழியெல்லாம் பெருசா தேவையில்ல. கேமராவ கையில தூக்கி வச்சிக்கிட்டு அவன் என்ன கேப்பக்களியப் பத்தியா கேக்கப் போறான். அவன் பார்க்குறதுலயும் மொக அசைவுலயுமே தெரியும்ணே என்ன கேக்கறான்னு! அதே மொக அசைவோட நாம தமிழ்ல பதில் சொன்னா நிச்சயமா அவனுக்கும் புரியும்ணே. ஒலகமே ஒண்ணுங்கறாங்க... சக மனுசனை அண்ணன், தம்பியா பாக்கணும்ங்கறாங்க. தமிழ்த்தாயும் இங்கிலீசு தாயும் கூட அக்கா தங்கச்சியாதான் இருந்திருப்பாங்கண்ணே... அந்த தைரியத்துல நானும் சகஜமா பேசுறேன். அவனும் சிரிச்சி சிரிச்சு என்கிட்ட பேசுறான். யாருக்கும் எதுவும் புரியல. கடைசியில அவன் என்னையே உத்துப் பாத்தான்ணே... ஒரு கேமராவை எடுத்து அது வழியா என் முகத்தை ஜூம் பண்ணினான். கடைசியில வாங்கிட்டான்.

அது பெரிய சாதனைண்ணே... ‘மொழி தெரியாத வெள்ளக்காரன்கிட்ட கேமரா வித்துட்டான்’னு அந்தக் கடையே அதிசயப்பட்டுப் போச்சு. பில்லு போடுறப்ப அந்த வெள்ளக்காரன் என்னையக் காட்டிக் காட்டி என்னவோ சொல்லிக்கிட்டிருந்தான்ணே. கவுன்ட்டர்ல உள்ளவங்க கொஞ்சம் படிச்சவங்க. என்ன சொன்னான்னு ஆர்வமா போயி கேட்டேன். நான் பேசினதைக் கேட்டெல்லாம் அவன் கேமராவ வாங்கலையாம்... அந்த லென்ஸு என்னையே அழகா காட்டிச்சாம். அதான் துணிஞ்சு வாங்கிட்டானாம்! அடப்பாவி மக்கா... இதுக்கா நான் அண்ணன், தம்பினு இத்தனை டயலாக் வுட்டேன்? கெட்ட ஒலகம்ணே இது!
(இன்னும் சொல்றேன்...)
தொகுப்பு: கோகுலவாச நவநீதன்
ஓவியம்: அரஸ்
படங்கள்: புதூர் சரவணன்