கோணம் : சூர்யகுமாரன்





பிரபல டி.வி சேனலின் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சி...
கடைசி வரிசையில் ஓரத்தில் அமர்ந்திருந்தார் காமெடி நடிகர் கடிமுத்து. சீனியரான தனக்கு சிறந்த காமெடி நடிகருக்கான விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை... நேற்று முளைத்த புது காமெடியனுக்கு கிடைத்து விடக்கூடாதே என பதைபதைப்பாக இருந்தது. வந்த கொஞ்ச நாளில் நமக்கு வாய்ப்பு கிடைக்கவிடாமல் ஓரங்கட்டி விட்டானே... விருதும் கிடைத்தால் இன்னும் என்ன ஆட்டம் போடுவானோ!
சிறந்த காமெடியன் விருது அறிவித்தார்கள்.
நினைத்த மாதிரியே அந்தப் புது காமெடியனுக்குத்தான் விருது. நேற்று வரை தன்னோடு சைடு கேரக்டரில் வந்து போன பயல்... டி.வி ஷோக்களில் தலை காட்டிவிட்டு தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்து நின்றவன்... அவனுக்கு இப்படி ஒரு வாழ்வா? அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அத்தனை ஹீரோக்களும் புது காமெடியனைப் பாராட்டிப் பேசப் பேச, கடிமுத்துவின் முகம் கருத்துப் போனது.

தொய்ந்து போய் வெளியே வந்தபோது, ‘‘என்ன ஆச்சர்யம். என்னால நம்பவே முடியலை’’ என்றார் பிரபல இயக்குநர்.
‘‘என்ன சார் சதாய்க்கறீங்களா?’’
‘‘உங்க முகத்தை இப்பத்தான் இன்னொரு கோணத்துல பார்க்கறேன் சார். என்ன ஒரு கடுகடுப்பு... என்ன கோபம். என் அடுத்த மெகா பட்ஜெட் படத்துல புது வில்லன் நீங்கதான்!’’ என்றதும் பரவசமானார் கடிமுத்து.