குடும்பம் : பர்வதவர்த்தினி





‘‘ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வர்றேன்...’’ என்றவாறே அம்மா வெளியேறியதும் வாசு கோபத்தோடு மனைவி பானுவிடம் சத்தம் போட்டான்...
‘‘காலங்காத்தால வயசானவங்களை பட்டினியாவா வெளிய அனுப்புறது... டிபன் சாப்பிட்டுட்டுப் போங்கன்னு ஒரு வார்த்தை கேட்டியா?’’

‘‘வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியாம ஒரு ஆம்பிளை கத்தக் கூடாது. டாக்டர் அவங்களை வெறும் வயித்தோடதான் வரச் சொல்லியிருக்கார். ஏதோ டெஸ்ட் எடுக்கணுமாம். அதான் சாப்பிடாம போறாங்க...’’
இதைக் கேட்டதும் வாசுவின் கோபம் இன்னும் வீரியம் ஏறியது.
வெளியே எட்டிப் பார்த்தான். அம்மா தெருமுனையை எட்டியிருந்தாள். வேகமாக பைக்கில் சென்று அம்மாவைப் பிடித்தான்.
‘‘அம்மா, ஒரு நிமிஷம் நில்லு... ஓட்டல்ல இட்லி வாங்கித் தர்றேன். டாக்டரைப் பார்த்ததும் சாப்பிட்டுட்டு நிதானமா வீட்டுக்கு வா... பட்டினி கிடந்தா உனக்குத் தலை சுத்தும்!’’
அம்மா சைக்கிளைப் பிடித்தபடி நிதானமாகக் கேட்டாள்...
‘‘வீட்ல என்ன நடக்குதுன்னு நீ கவனிக்கவே மாட்டியாடா? ஓட்டல் இட்லியை வாங்கித் தர்றேன்னு இப்படி ஓடி வர்றீயே... அப்போ, பானு டிபன் பாக்ஸ்ல போட்டுக் கொடுத்து அனுப்பின இந்த வீட்டு இட்லியை என்ன செய்றது?’’
வாசு வழிந்தபடி நின்றான்!