வேலைக்குப் போகாதீர்கள்! : உங்களைத் தேடி வேலை வரும்





விளையாடும்போது அர்ப்பணிப்பை விளையாட்டில் காட்டுங்கள்; வேலை செய்வதை விளையாட்டாக நினைக்காதீர்கள்
- தியோடர் ரூஸ்வெல்ட்
 
வேலையில் பல்வேறு அலைக்கழிப்புகள்... மன அழுத்தங்கள்... போராட்டங்கள்... கசக்கிப் பிழிதல்கள்... இவற்றுக்கு மத்தியில் எது உங்களுக்கு சிறிது இளைப்பாறுதலைத் தரும்? பணியின் தாக்குதல்களிலிருந்து எது தற்காலிகத் தப்பித்தலாக இருக்க முடியும்?
நிச்சயமாக விடுமுறைதான்!
ஏன் விடுமுறை இன்பமாக இருக்கிறது என்றால், அந்த தினத்தில் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிற உரிமை உங்களிடம் இருக்கிறது. முன்பே சொன்னது போல, மனிதன் இயல்பிலேயே சுதந்திரத்தை விரும்பும் பிராணி. இன்றைய சமூக அமைப்பின் காரணமாக வேலைக்குப் போய், தான் எப்படி நடத்தப்பட வேண்டும் என்கிற உரிமையை இன்னொருவரிடம் கொடுத்திருக்கிறான். தனது பொருளாதார சுதந்திரத்திற்காக தனது இயற்கையான சுதந்திரத்தை இழந்திருக்கிறான். எனவே, வாய்ப்பு கிடைக்கிறபோதெல்லாம் அந்தக் கட்டுக்களிலிருந்து வெளியே வந்து இயற்கையான தன்னை அடையாளம் கண்டே தீருவான்.

விடுமுறை அதற்கு ஒரு வாய்ப்பு. இதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் நீங்கள் இன்னும் படுக்கையிலிருந்து எழாமல் சுகமாகப் புரண்டு சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, உங்கள் போன் ஒலிக்கிறது. ‘‘திடீர்னு ஒரு அர்ஜென்ட் வேலை. ஹெட் ஆபீஸிலிருந்து ஒரு தகவல் கேட்கிறார்கள். உடனே வரவும்!’’
பொதுவாகவே, நீங்கள் விடுமுறையைக் கொண்டாட ஆயிரத்தெட்டு திட்டங்களைப் போட்டு வைத்திருக்கிறபோதுதான் எங்கிருந்தோ முதலாளியின் தூரத்து உறவினரோ, மேலதிகாரியோ உங்கள் நிறுவனத்திற்கு வருவார்கள். ‘சுற்றிப் பார்க்க வேண்டும்’ என்பார்கள். இன்ஸ்பெக்ஷன் என்பார்கள். அவர்களுக்கு கம்பெனி கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு வந்து சேரும்.
இப்படிப்பட்ட தருணங்கள் எல்லோர் பணி வாழ்விலும் வந்தே தீரும். உங்களிடம் மறுப்பதற்கு சரியான - ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களும் இல்லை.
என்ன செய்வீர்கள்? குமுறித் தீர்ப்பீர்கள்.



‘‘இவனுகளுக்கு ரிப்போர்ட் கேக்கறதுக்கு நேரம், காலம் கிடையாதா? இதை வச்சுக்கிட்டு என்ன செய்யப் போறான்? இதை நாளைக்கு கேட்டால் என்ன குடியா முழுகிப்போகும்? லீவ் நாள்ல கூட நிம்மதியா இருக்க விட மாட்டேங்கறாங்களே... நமக்குன்னு வந்து சேருறாங்க பாரு...’’ என்றெல்லாம் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் கையறு நிலையை டெவலப் செய்வார்கள். உலகமே விடுமுறை நாளில் கூடி கும்மி அடிப்பது போலவும், நீங்கள் மட்டுமே பெருந்துயரில் வதைபடுவது போலவும் தோன்றும்.
கவலைப்பட வேண்டாம். வேலை பார்க்கும் அனைவருக்குமே இப்படிப்பட்ட நிலை ஏற்படவில்லை என்றால்தான் ஆச்சரியம். நீங்கள் மட்டும் தனி ஆள் இல்லை.
சரி, இப்படி ஏன் அமைகிறது? இதற்கு முதலில் நீங்கள் வேலையின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

1) நீங்கள் ஓய்வு எடுக்கலாம்... ஆனால், உங்கள் வேலை ஒரு போதும் ஓய்வெடுக்காது. நீங்கள் கண் மூடினாலும், உங்கள் கடமைகள் 24 மணி நேரமும் விழித்தே இருக்கும். எப்படி நீங்கள் தூங்கினாலும், உங்கள் இதயம் தூங்காமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறதோ அதைப் போல... ரத்த ஓட்டம் போல... அது இயங்கிக் கொண்டேதான் இருக்கும்.
2) உங்கள் வேலை என்பது நீங்கள் மட்டும் அல்லவே. அது பலரையும், பலதரப்பட்ட தேவைகளையும் உள்ளடக்கியது. யார் யாருக்கு எப்போது என்னென்ன தேவைப்படும் என்று சொல்ல முடியாது. உங்களுடன் இருப்பவர்கள் ரத்தமும், சதையும், உணர்வுகளும் கொண்ட மனிதர்கள். அவர்களில் சிலர் தெய்வங்களாக இருக்கலாம்... பாதி தெய்வங்களாக இருக்கலாம்... சுயநலமிகளாக இருக்கலாம்... எல்லோரையும் உள்ளடக்கியதுதான் நீங்கள். அவர்களின் முடிவுகள் உங்களைக் கட்டுப்படுத்தியே தீரும்.

3) உங்கள் பார்வையில் அபத்தமாகவும், தேவையின்றியும் இருப்பது உங்கள் மேலிடத்திற்கு முக்கியமானதாகவும், உடனே செய்து முடிக்க வேண்டியதாகவும் இருக்கலாம்.
4) வேலை என்கிற அமைப்பு ஒரு தனி மனிதரை விட எப்போதுமே பெரியது. உங்களை வேலை வாங்குபவரும் கூட, விடுமுறையை இழக்கிறார் என்றால், அது எவ்வளவு முக்கியமான விஷயமாக இருக்கும்? இந்தக் கண்ணோட்டத்தில், உங்களது ‘பாஸின்’ பார்வையில் இந்த விஷயத்தை அணுகுங்கள். அவரது சூழல் எப்படியோ? அவரால் முடியாததால்தானே உங்கள் உதவியை நாடியிருக்கிறார்? அவர் உங்களை அழைப்பதிலிருந்தே நீங்கள் எவ்வளவு முக்கியமானவர் என்று தெரிகிறது. அந்த மரியாதையை நீங்கள் தக்க வைத்துக்கொள்ள வேண்டாமா?

எனவே, இதை சந்தோஷமாக எதிர்கொள்ளுங்கள். வேலை செய்வதில் நீங்கள் களைப்படையப் போவதில்லை. உங்களது விடுமுறை பறிபோன உணர்வில்தான் அந்த சிறு வேலையைப் பெரிய வேலையாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள். அந்த எரிச்சல் உணர்வுடன்தான் நீங்கள் சண்டை செய்து களைப்படைகிறீர்கள். தவிர, இது போன்ற தவிர்க்க இயலாத சூழ்நிலையுடன் நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் உங்கள் பணி வாழ்க்கையும், அதன் மூலம் உங்கள் இயல்பான வாழ்க்கையும் நிச்சயம் பாதிக்கப்படும். இதைச் செய்துதான் தீர வேண்டும் என்ற நிலையில் இந்த தினத்துடன் முரண்படுவதை விட, மன திருப்தியுடன் வேலையைச் செய்யும் வழிமுறைகளை ஆராய்வது வேலையை எளிதாக்கி விடும்.



பணி வாழ்வில் மட்டும் அல்ல... உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையில் கூட நீங்கள் நினைத்தபடியா எல்லாமே நடந்து விடுகிறது? அதையெல்லாம் ‘‘வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும்’’ என்ற சமரசத்துடன் ஏற்றுக்கொள்கிற நீங்கள், வேலைக்கு மட்டும் அந்த அளவுகோலை ஏன் மாற்ற வேண்டும்? எனவே, உங்கள் விடுமுறை திட்டங்கள் எல்லாம் நாசமாய்ப் போன நிலையில், இந்த தற்காலிகப் பிரச்னையை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் வாழ்வின் வெற்றியே அடங்கி இருக்கிறது.

நீங்கள் இந்த வேலையை செய்து தர மறுத்து விட்டால் கூட, வேறு யாரையாவது வைத்து அந்த வேலையை முடிக்கத்தான் செய்வார்கள். அப்புறம் உங்களால் விடுமுறை முடிந்த பிறகு எந்த முகத்துடன் உங்கள் பணி இடத்தில் நுழைய முடியும்? இல்லை, விடுமுறையைத்தான் உங்களால் நிம்மதியாகக் கழிக்க முடியுமா?

கொடுக்கப்பட்ட திடீர் வேலையை வேண்டா வெறுப்புடன் செய்தால் அதன் சுமை கூடும். சந்தோஷத்துடன் செய்து கொடுத்து உங்கள் பளுவைக் குறையுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வேலை உங்களுக்கு நன்மை தரும் என்று நம்புங்கள். அது பணப்பலனாகவோ, மனிதத் தொடர்புகளைப் பேணுவதாகவோ... ஏன், குறைந்தபட்சம் வாழ்க்கையைப் பற்றிய புரிதலாகவோ கூட இருக்கலாம்.

சரி, விடுமுறை நாளிலும் வேலையா? என்று கொந்தளிப்பவர்களுக்கு ஒரு கேள்வி...
இப்படி எத்தனை தடவை உங்கள் பணி வாழ்வில் நடந்திருக்கும்? வருடத்திற்கு ஓரிரு முறை... சில மாதங்களுக்கு ஒரு முறை... நேர்மையாகச் சொன்னால் அபூர்வமாக!

வீணாகப் போகாமல், நீங்கள் அனுபவித்த விடுமுறை தினங்கள் எத்தனை இருக்கின்றன. ஆனாலும் அதையெல்லாம் நாம் வசதியாக மறந்து விடுகிறோம். இதுவே, ‘பத்து நிமிடத்தில் வந்து இந்த வேலையைச் செய்தால், 2 லட்ச ரூபாய் பரிசு’ என்று ஒரு போட்டி வைத்தால், ‘‘விடுமுறையில் கூட...’’ என்று யாராவது புலம்புவார்களா என்ன? ஆக, பிரச்னை விடுமுறை பறிபோவதில் அல்ல. நம் மனத்தடையிலும், பணி பற்றிய புரிதல் இல்லாத மன நிலையிலுமே உள்ளது. காரணம், மனதின் இயல்பு அப்படி. அது உங்களை நல்ல விஷயத்தையே பார்க்க விடாது. தேவையற்ற, ஆரோக்கியமற்ற விஷயங்களை நோக்கியே மனம் பாய்ந்து செல்லும்.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு விடுமுறை என்ற ஒன்று இருப்பதே நீங்கள் வேலையில் இருப்பதால்தான். அது இல்லாவிட்டால், உங்களுக்கு என்றுமே விடுமுறைதான். அந்த நிலை எப்படிப் பார்த்தாலும் வரவேற்கத்தக்கதல்ல.
(வேலை வரும்...)