கவிதைக் காரர்கள் வீதி : சிக்ஸ் முகம்





இறைவன் இரையை
தன் கூட்டுக்குள்
வீசுவான் என
எதிர்பார்க்கும் பறவைக்கு
சிறகுகள் முளைப்பதில்லை

கருவறைக் கடவுள்
ஒருநாளும் அனுபவித்ததில்லை
வாசலில் அமர்ந்திருக்கும்
யாசகனின் சுதந்திரத்தை

வெயிலில் பெய்த
மழையைப் பார்த்து
காக்கைக்கும் நரிக்கும்
கல்யாணம் என்று
காரணம் சொன்ன
உன் அழகைக் கண்டு
மனசுக்குள் பெய்கிறது
மாமழை

உனதன்பும் எனதன்பும்
நிஜமென்றால்
ஒரு புளியமரத்தின்
இலை போதும்
நாமிருவரும் துயில் கொள்ள

பின்னால்
வரச் செய்துவிட்டதாக
எண்ணிக் கொண்டிருக்கிறாய் நீ
வழிநடத்துகிறாய்
என்றல்லவா
எண்ணிக் கொண்டிருந்தேன்
நான்

காதலிலும் உளதோ
லேவாதேவி
வட்டியும் முதலுமாக
எதிர்பார்க்கப்படும்
முத்தங்கள்