
கலர்ஃபுல், டிஜிட்டல், மிக்ஸிங் என பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விழிகளுக்கு, அந்தக்கால ஸ்டைலில் கார்த்திக் ஸ்ரீனிவாசனின் கருப்பு-வெள்ளை புகைப்படங்களில் நம் நட்சத்திரங்களை பார்த்தபோது மனம் லயித்துப் போனது!
- பாரதி, சிதம்பரம்.

ஒவ்வொரு இதழிலும் புகழ்மிக்கவரின் பொன்மொழிகளை வெளியிடுவது வரவேற்கத்தக்கது. இந்த வாரம் மகாத்மாவின் பொன்மொழிகள் அனைத்தும் அருமை.
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.

உழைப்பும் உண்மையும் இருந்தால் வெற்றி வாழ்க்கையின் பக்கத்திலேயே குடி கொண்டிருக்கும் என்பதற்கு உதாரணம் தாசநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் வேலுச்சாமி.
- எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.

ஏழை வாசகனுக்கு எட்டாத நூல்களின் விலை உயர்வையும், நூலாசிரியர்களின் அணுகுமுறைகளையும், சென்னை புத்தகக் காட்சி நிறைவடைந்த தருணத்தில் பழநிபாரதி எழுத்தில் பிரதிபலித்த விதம் அருமை!
- எம்.சம்பத், கரூர்.

‘கவிதைக்காரர்கள் வீதி’யில் சிதறிய கவிதைகள் ஏழும் சப்தஸ்வரமாக சங்கீதம் இசைக்கின்றன!
- ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.

‘மேதை’ விமர்சனத்தை விலாவாரியாகப் படித்தபோது மயில் ஆடுவதைப் பார்த்து வான்கோழி ஆடிய கதைதான் எங்களுக்கு ஞாபகம் வந்தது!
- பிரபாலிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

வினோத ரச மஞ்சரியில் ‘அழகான ஆபத்து’ படித்துத் துடித்துப் போனேன். இப்படி எல்லாமே போலி மார்பகங்களா? சே... சே... என்ன கொடுமைய்யா இது... பெண்களே, ரொம்ப உஷாரா இருங்கள்!
- வே.முருகேசன், சென்னை-88.

சினிமா படத் தலைப்புகளில் வெளிவந்த ஒரு பக்கக் கதைகள் அனைத்தும் தூள் மச்சி!
- த.சத்தியநாராயணன், சென்னை-38.